103 நான் வழிபடும் யாகவா
INANYA NAMOO NAMA ;;; YAAGAVA ;;;
யாகவா முனிவரிடம் கரை காணாத பக்தியும், ஈடுபாடும், பாசமும் கொண்டவர்களில் ஒருவர் திரு.டி.எம். சௌந்தரராஜன் அவர்கள். தனது 80 வது ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் திரு. டி.எம்.எஸ்., அவர்களே ஒரு ஆன்மீகப் பிழம்புதான்; சத்தியத்தின் ஜ்வலிப்புத்தான்; தெய்வாம்சத்தின் தூதுவர்தான்; தன்னையே உணர்ந்த ஞானிதான். பக்திக்கு வித்திட்டு வளர்த்த ஞானிகள், யோகிகள், சித்தர்கள், மாமுனிவர்கள் வரிசையில் நம்மிடையே வாழ்ந்துவரும் பழுத்த சித்தராகவே விளங்குகிறவர், திரு.டி.எம்.எஸ்., அவர்கள். அவரது குரலில் ப்ரணவ நாதமே தொனிக்கிறது. த்ரிகரண சுத்தியில் ஜனித்த அவரது தெய்வீக ஞானக் குரலால் கடந்த சுமார் 60 ஆண்டுகளாக உலகம் முழுதும் பரந்துள்ள கோடனுகோடி மக்களின் மனத்திலே நிரந்தரமாக குடியிருப்பவர். வாழ்நாள் முழுதும் தீவிர பக்தியுடன் தான் வழிபட்டுவரும் திருமுருகப் பெருமானாகவே யாகவா முனிவரைக் காணுகின்றார் திரு.டி.எம்.எஸ்., அவர்கள். பக்திமான்களின் கண்களுக்கு அவரவர்களின் இஷ்ட தெய்வமாகவே யாகவா முனிவர் திருக்காட்சி தந்தருளுகிறார் என்பதற்கு இதுவே ஒரு நிதர்சனமான எடுத்துக்காட்டு. யாகவா முனிவரிடம் அவர் பெற்றமயிர்க்கூச்செறிய வைக்கும் அவரது அனுபவங்களை, அவரைப் பேட்டி கண்ட எங்களது யாகவா ஸ்தாபனத்து பேராசியர் எஸ்.சிவராம கிருஷ்ணன் அவர்களிடம், 03.12.2001 அன்று சுமார் 6 மணி நேரம் தன்னிலை மறந்த பரவச நிலையில் திரு. டி.எம்.எஸ்., அவர்கள் கூறியவற்றை அவர்களது சொற்களிலேயே இங்கு படைக்கிறோம்..
அன்று 1989 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி அன்று வரை மிகவும் தேக ஆரோக்கியத்துடன் இருந்து வந்த எனக்கு திடீரென்று ஒரு மாபெரும் சோதனை ஏற்பட்டது. அன்று காலை ஒரு மயக்க நிலை என் மனத்தில் தோன்ற அரம்பித்து சிறிது நேரத்திலேயே அது என் உடல் முழுவதும் பரவி, நான் முற்றிலுமாக என் சுய நினைவை இழந்துவிட்டேன். மிக்க அதிர்ச்சியுற்ற என் சுற்றத்தார் என்னை உடனே சென்னை அப்போலோ மருத்துவ மனையில் சேர்த்திருந்தனர். அங்கு நான் அன்று முதல் 6 நாட்கள் சுய நினைவு சிறிதுமே அற்றகோமா நிலையில் கிடந்திருந்தேனாம். முக்கிய மருத்துவர்கள் பலர் சேர்ந்து பலவிதமான எமர்ஜென்ஸி மருத்துவ சிகிச்சைகள் எனக்கு செய்திருக்கிறார்கள்.
அன்று டிசம்பர் 20 ஆம் நாள். எனக்குள்ளே கனவுநிலையையும் கடந்த ஆழ்மனத்தின் அடித்தளத்தில் திடீரென்று ஒரு பிரமை தட்டியது. பழனி ஸ்ரீதண்டாயுதபாணியின் திருச்சன்னிதியிலே நான் நிற்பது போன்ற ஒரு நினைவுப்பொறி என்னுள் தோன்றியது. படிப்படியாக அந்த நினைவுப்பொறி நினைவுப் பிழம்பாகவே வியாபித்து என் ஆழ்மனம் முழுதும் ஆக்கிரமித்தது.
முருகப் பெருமானிடம் நான் ஓலமிட்டு அழுகின்றேன். அமர்க்களமாக விபூதி அபிஷேகம் நடந்து கொண்டிருக்கிற நேரமது. நான் முருகனிடம் மன்றாடுகிறேன். மூலஸ்தான விக்ரகத்திடமிருந்து திடீரென்று சுமார் 5 அடி உயரத்தில் கௌபீனம் தரித்து முழு ஆண்டிக்கோலமாக இடது கையில் வேலுடன் முருகன் உருவம் என் அருகே நடந்து வந்து எனக்குக் காட்சி அருளுகிறார். ஸ்ரீதண்டாயுதபாணியின் கண்களிலிருந்து அக்னி ஜ்வாலை ஒன்று தோன்றுகிறது. -யாமிருக்க பயமேன்- என்ற இன்சொல்லும் என் காதுகளில் ஒலிக்கிறது. இதைக் கேட்டவுடன் நான் ஸ்ரீதண்டாயுதபாணியின் கால்களில் விழுவதற்காகக் குனிகிறேன். என் வாய் மெல்ல மெல்ல முருகனுடைய திருநாமத்தை முழங்கத் தொடங்குகிறது.
1990-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் தேதி என்னை டிஸ்சார்ஜ் செய்தனர். நான் வீடு திரும்பினேன்.
ஜீவ-மரணப் போராட்டத்தில் நான் பிழைத்து எழுந்து விட்டேனே தவிர பழைய டி.எம்.எஸ்., ஆக நான் மாறிவிடவில்லை. நடைப்பிணமாகவே மாறிவிட்டிருந்தேன் நான். நடையில் தட்டுத் தடுமாற்றம். கை கால்களிலே அதீதமான நடுக்கம். பேச்சிலே இனம் புரியாத குழறல். பாடுவது என்பது கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத நிலை. 1990 ஆம் ஆண்டு முழுவதுமே என்னால் பாட முடியவில்லை. மனம் இடிந்த நிலையிலேயே அந்த இருண்ட ஆண்டு முழுவதும் நான் நொந்து நைந்திருந்தேன்.
அதன் பிறகுதான் — 1991ல் — நான் யாகவா முனிவரின் ஆசியால் புத்துயிர் பெற்று பழைய நிலைக்கு முழுவதுமாகத் திரும்பினேன். யாகவா முனிவரை நான் முதன் முதலாக சந்தித்ததே நான் செய்த மாபெரும் பாக்யம் அந்த நிகழ்ச்சியை இன்று நினைத்தாலும் நான் மயிர்க் கூச்செறிகிறேன்.
யாகவா முனிவராக திரு.சிவாஜிகணேசன் நடித்த திரைப்படத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்த நேரம் அது. அவர்களுக்காக நன பாடுவதற்கான பாடல் ஒன்றின் முழு முன்பதிவுப் பேழை, ஒலி நாடா, ஒன்றை திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் தயாரித்து வைத்திருந்தார். சென்னை பிரசாத் ஒலிக்கூடத்தில் முன்பதிவு செய்திருந்த அந்த ஒலி நாடாவில் வாத்தியப் பின்னணி இசை முழுவதும் பதிவு செய்யப்பட்டு என் குரலுக்கான காலியிடங்களையும் இசைக் கருவி ஒலியின் மூலமாக நிரப்பியிருந்த நிலையிலே அந்த ஒலி நாடா இருந்தது. நான் பாடிவிட்டால் அந்தப் பாடல் முழுமை பெற்றுவிடும் என்றநிலை.
இப்பொழுது நான் பூரண குணமடைந்துவிட்டேன், நன்றாகப் பாடமுடியும் என்றே நம்பியிருந்த திரு.எம்.எஸ்.வி., அவர்கள் என்னை பிரசாத் ஒலிக்கூடத்திற்கு அழைத்துச் சென்றார். ஆனால் நான் எவ்வளவோ தான் முயன்றும் என்னால் பாடவே முடியவில்லை. திரும்பத் திரும்ப முயன்றேன். திரும்பத் திரும்பத் தோற்றேன். என் கண்கள் கலங்கிவிட்டன. திரு.எம்.எஸ்.வி., அவர்கள் உட்பட என் அருகிலிருந்த அனைவருமே கலங்கினர். அந்த ஒலிக்கூடமே என் நிலை கண்டு வருந்தியது. முற்றிலுமாக மனம் இடிந்த, மனம் நொந்த நிலையில் நான் வீடு திரும்பினேன்.
அப்போது தான் அந்தத் திருப்பு முனை என் வாழ்வில் ஏற்பட்டது. யாகவா முனிவர் செய்தருளிய அந்த மாபெரும் அதிசயம் நிகழத் தொடங்கியது.
திரு.வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் யாகவா முனிவரின் சீடர். அவர்தான் முதன் முதலில் என்னிடம் யாகவா முனிவரின் புகைப்படம் ஒன்றைக் கொடுத்தார். என் சட்டைப் பையிலேயே அந்தப் படத்தை வைத்திருக்கவும் சொன்னார். யாகவா முனிவரின் அருட்பிரகாசம் உங்களுக்கு பரிபூரணமாக உண்டு. அவர் அருளால் வெகு விரைவிலேயே முன்னைவிட உயர்வாக நீங்கள் பாடத்தான் போகிறீர்கள். மனம் தளராதீர்கள். நானே உங்களை அவரிடம் அழைத்துச் செல்லுகிறேன் என்று அவர் என்னிடம் சொன்னது மட்டுமல்லாமல் அடுத்த நாளே அவர் காரிலேயே என்னை மேடவாக்கம், யாகவா முனிவரின் ஆஸ்ரமத்திற்கும் அழைத்து சென்றார்.;;;;;;;;;;
No comments:
Post a Comment