87 இநன்யா நமோ நம.. !!
Inanya Maha
Munivar may-5-2016 நான் காற்றாய் வந்து கணப் பொழுதில் சுகம் தருவேன். மலரின் நறுமணம் போல் உன் வாழ்வை மணமாக்குவேன்.உணர்தல்காற்றுக்கு பிரவாகம் என்ற பெயரும் உண்டு. உன்னை வாதமாகவும் (உடலை துரிதப்படுத்துதல்) வைக்கும். உனை வதம் செய்யவும் வைக்கும். உணர்தல் என்பது கண்ணுக்கு தெரியாத காற்று உன்னை சீண்டுவது போல. மலரை நுகர்ந்து பார்த்தால் வரும் நறுமணம் உணர்தல். கருவறையில் இருக்கும் சிசு அசைந்தால் உடலில் வெளியே உணர்வு தெரிவது போல உணர்தல் இங்கே எளிது தான். ஆனால் யாருக்கும் இங்கே உணர்வென்பது இல்லை. ஊசியின் நுனியை கோடி பாகங்களாக பிரித்தால் அதில் வரும் ஒரு பாகத்தை போல உன் கண்ணின் கரு விழியில் ஒரு துவாரம் உள்ளது !இந்த துவாரத்திற்கும், கபாலத்தின் நடுவில் இருக்கும் உணர் நிலைக்கும், நெற்றி பொட்டில் இருக்கும் உயிர் நிலைக்கும், ஸ்வேதமாய் உன் இதயத்தின் நடுவில் ஆயிரம் தாமரை இதழில் இருக்கும் ஆண்மாவுக்கும் தொடர்பு உண்டு. கண் மூடி தவம் என்றால் கெட்டதை பார்க்கும் போது கண்களை மூட வேண்டும் என்று அர்த்தம். கண்கள் வழியே கெட்டதை பார்க்கும் போது இந்த மூன்று நிலையும் தொடர்பில் இருக்கின்றது.அந்த பாவம் உனக்கு தலையெழுத்தாய் உயிர் பெறுகிறது. கண்ணின் ஊசி நுனி துவாரத்திற்கும் இந்த மூன்று நிலைக்கும் உள்ள தொடர்பை நீ மறந்துவிட்டாய். அதனால் பாவம் செய்கிறாய். பிண்டம் உருவாகும் போது ஆண்ம தொடர்பு இருப்பதால் கண்ணே முதலில் உருவாகிறது. அதனாலே கண் மூடி தவம் செய் என்று சொன்னார்கள். அதை தவறுதலாக புரிந்து கொண்டு இவன் கண் மூடி தியானம் செய்கின்றான்.என் நாமம் உனக்கு உணர்வு தரும் ! இங்கே உணர்தலே அனைத்தையும் உணர வைக்கும். ஆணும், பெண்ணும் சேர்ந்து வரும் உணர்தலால் பாவம் தான் வளரும்.உணர்தல் என்றால் மென்மை !உணர்தல் என்றால் தெளிவு !உணர்தல் தான் இங்கே அடிப்படை !நான் உணர்வுள்ளவன் !என்னை நினைத்தால் உன் உள்ளத்தில் ஒரு உணர்வு வரும். அதுவே உனக்கு தெளிவை தரும். செல்வமும், நிம்மதியையும் தரும். நீ அடைய வேண்டிய இலக்கை காண்பிக்கும். நான் உணர்வோடு இருக்கின்றேன். உன் குரல் கேட்கும். உடனடி தீர்வு தரும். உனக்கு வாழ்வை புரட்டி போடும் துன்பம் வந்தாலும் நான் காற்றாய் வந்து புரட்டி போடுவேன் சத்தியமாக !உன் பக்கத்தில் தொடு உணர்வோடு நான் இருக்கின்றேன். அவ்வப்போது தென்றலாய் வருடி உணர்வு தருகிறேன். நீ தான் உணரவில்லை. நீ உணர்ந்தால் எங்கோ இருக்கும் மலரின் நறுமணம் உன்னை தேடி வருவதை போல என்னை உணர்வாய். அதனால் நீ பாவம் செய்யாதே ! கடமையை செய். காலத்தின் நாயகன் நான் உச்சத்தில் வைத்து உனக்கு உணர்வு தருவேன்.உணர்வே இங்கே உன்னை ஞானியாக்கும் ! எல்லா சித்தர்களும் உணர்ந்து உணர்வோடு ஞானம் பெற்றவர்களே ! மனிதன் மகானாவதும், ஞானியாவதும் உணர்தலால் மட்டுமே !நீயும் உணரடா ! உனக்கு ஞான தெளிவு வரும். பின் என் அரசாங்கத்தில் உனை குடி அமர்த்துவேன். சத்தியத்தின் நாயகன் என் பாதையில் தெளிவுண்டு ! திறன் உண்டு ! உன்னை அறியும் பக்குவம் உண்டு !வாடா என் ஞான குலமே, இனி எப்போதும் நீ சிரிக்கலாம் ! ஏனென்றால் நான் உன் பக்கத்தில் !உன் துன்பத்தை வல்லூரை போலிருந்து நித்சலன மாக்குவேன். வல்லேறு (இடி) போல் இருந்து பயமுறுத்தி உன் துன்பத்தை தூள் தூளாக்குவேன். உன் உள்ளத்தை கடவுளுக்கு பலி கொடுத்துவிடு. என் ஞான குலமே, அது தான் உண்மையான யாகம். அதர்மம் உலகில் அதிகமாக தர்மம் என்றால் என்னவென்று உனக்கு புரியும். உன் புத்தியை மீறும் சக்தி இந்த கேடுகெட்ட மனதிற்கு உண்டு. ஆதலால் மனதை கட்டுபடுத்து. அது உன்னை கீழ் நிலைக்கே அழைத்து செல்லும். என் நாமம், சொல் உன் மனம் அடங்கும்.தர்மம், ஈகை, அறம் ! இந்த மூன்று நற்செயலையும் உன்னுள்ளே எப்போதும் வை ! இதுவே, அடுத்த பிறவியை தடுக்கும் ஆணி வேர் ! தைரியத்தையும், தன்னம்பிக்கையும் எப்போதும் உனக்குள் வை. இதுவே உனக்கு இன்ப வாசலை காண்பிக்கும். என் சிரேட்ட மகன் (தலை சிறந்தவன்) நீயடா !விண் கோள், மண் கோள் நான்.செங்கோல் ஏந்தி திக்கையையும் ஆட்சி செய்கிறேன். இனி உனை மனக்கிலேசம் அடைய விடமாட்டேன். உணர் !உணர்வுகளோடு இரு. உண்மையாய் உனக்கு ஞானம் வரும் !நான் சத்தியத்தின் நாயகன் !நான் இநன்யா !
No comments:
Post a Comment