82 சில முக்கிய தருணங்கள் (21-08-2015)
இந்த வருடம் (2015 ) ஜனவரி ஒன்பதாம் நாள். முதன் முதலாக ப்ரனகன் சாரிடம் கைப்பேசியில் பேசினேன். நாங்கள் இணைந்தது மிகவும் சூட்சுமமானது. இதற்கு முன்னே லோகத்தில் பேசியுள்ளதைப் போல ஒரு உணர்வு ஏற்பட்டது. கடவுளின் கணக்கை புரிந்து கொள்ள முடியாது. கடவுள் இநன்யா ஆற்றைப் போல் யாருக்காகவும் நிற்காமல் ஓடிக் கொண்டிருப்பவர். கடவுளை உணர்ந்தாகிவிட்டது. தேடுதல் முடிந்து ஒரு புது வழி ஆரம்பித்துவிட்டது ! ஆனால் எப்படியாவது நாங்கள் பார்த்ததை, அனுபவித்ததை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று ஆன்மா தவித்தது. எனக்கு நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் சொல்லிப் பார்த்தேன். என்னை வினோதமாக பார்த்தார்கள்.
சில நாட்கள் கழித்து ப்ரனகன் சார் மீடியாவிடம் சென்று பேசினார். என்ன நடந்திருக்கும் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். ஏளனம் செய்தார்கள். அவர் சொன்னதை ஆராய்ந்து பார்க்க கூட அவர்கள் முன் வரவில்லை. அன்று இரவில் என்னிடம் போனில் பேசி நடந்ததை கூறினார். மீடியாக்காரர்கள் ஒவ்வொருவரையும் கடவுளைத் தேடி வர வைக்க வேண்டும் என்று அன்று இரவே முடிவு எடுத்தேன். அன்று இரவு முழுவதும் தூங்காமல் யோசித்தேன். இனி மீடியாவை நாடுவது சரியில்லை என்று நினைத்தோம். அவரின் வார்த்தைகளை பத்திரிக்கைகளில் போட்டு மக்களை சிந்திக்க வைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் அவர் சொல்லிய கருத்துக்களை எடுத்து திருத்தி மக்களை நன்றாக சிரிக்க வைத்துவிடுவார்கள் என்பதை தெரிந்து கொண்டோம். “கடவுள் வந்துள்ளார். மதம் வேண்டாம், உலகம் மாறப் போகிறது” என்ற எங்களின் வார்த்தைகளைக் கண்டு பலரும் சிரித்தார்கள். யார் யாரேல்லாம் சிரித்தார்களோ அது அவர்களின் கடைசி சிரிப்பு என்பதை புரிந்து கொண்டு நானும் நன்றாக சிரித்தேன்.
கடவுளின் ஆசிர்வாதத்தால் மார்ச் ஏழாம் நாள் இந்த வட்டத்தை துவங்கினோம். இன்று வரையில் அவர் எழுதிக் கொடுக்கும் வேத முத்துக்களை இந்த வட்டத்தில் பதிவிட்டு வருகிறோம். பிறரை உணர வைக்க வேண்டும் என்பது தான் ஒரே நோக்கம் ! யாரேனும் ஒருவர் அவர் சொல்லும் கருத்துக்களை புரிந்து கொள்ளமாட்டார்களா என்று செய்வதறியாது திகைத்தோம். இன்று பல நல்ல ஆன்மாக்களை கண்டுபிடித்துவிட்டோம். இந்த வட்டத்தில் ஆயிரம் பேர் வரை உள்ளனர். இங்குள்ள ஒவ்வொருவரும் லட்சத்தில் ஒருவராக இருக்க வேண்டும். இந்த ஆன்மீகத்தை எளிதில் புரிந்து கொள்வது சாத்தியமில்லை ! மிக மகிழ்ச்சியாக உள்ளது.
நான் இங்குள்ள யாரிடமும் எந்த கேள்வியும் இதுவரையில் கேட்டதில்லை. இப்போது கேட்க ஆசைப்படுகிறேன். உலகில் இதுவரையில் யாரும் கடவுளைக் கண்டதாக கூறியதில்லை. ஒவ்வொரு ஊரிலும் ஒருவன் தன்னை கடவுள் என்று கூறிக் கொண்டுள்ளான். அவ்வாறு கூறி ஏமாற்றியவர்களை மக்கள் கண்டுபிடித்து தண்டித்தும் விட்டனர். “பார்த்தவர்கள் சொன்னதில்லை ! சொன்னவர்கள் பார்த்ததில்லை” என்ற பழமொழியை வேறு சொல்லிவிட்டார்கள். பார்த்தவர்களால் இதுவரையில் சொல்ல முடிந்ததில்லை என்பதே உண்மை. இவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் உங்களின் மனதில் ஒரு மூலையில் இநன்யா கடவுளாக இருக்கலாம் என்று எப்படித் தோன்றியது ? பதிலுக்காக காத்திருக்கிறோம். இநன்யா நமோ நம !
No comments:
Post a Comment