வாசி யோகம்:
வாசி யோகம்... இன்றைய நிலையில் இந்த பெயரை கேள்விப்படாத நபரே இல்லை எனலாம். அந்த அளவிற்கு இந்த பெயர் வியாபார பொருளாகி விட்டது. வாசியை விற்கும் வியாபாரிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பயிற்சி முறைகளை கற்றுத் தருகிறார்கள். இந்த பல்வேறு முறைகளை பார்க்கும் போது நமக்கு எது உண்மை.. எது பொய்.. என்று உண்மையான தேடுதலில் உள்ளவர்களுக்கு குழப்பமும், ஏமாற்றமும் மட்டுமே மிஞ்சும்.
இந்த குழப்பங்கள் ஒருபுறம் இருக்க.. இந்த வாசிக்கு தரப்படும் விளக்கம் மேலும் நம்மை குழப்பும். அதாவது வாசி என்பது எப்படி வந்தது என்று கேட்டால்.. வாசி என்பதை மாற்றிப் போட்டால் சிவா என்று வரும். எனவே இதுவே சிவயோகம் என்றும்.. மேலும் இதில் வா என்பது காற்று, சி என்பது நெருப்பு என்றும்.. இந்த சி என்ற எழுத்தே நாயோட்டும் மந்திரம், நமனை (எமன்) ஓட்டும் மந்திரம்.. என்றெல்லாம் விதவிதமான விளக்கங்கள் இந்த வாசி யோகத்திற்கு தரப்படுகிறது.
இந்த விளக்கங்களும், இப்படியான விளக்கம் தருபவரையும், இவர்களின் பின்னால் செல்பவரையும் பார்க்கும் போது ஒரு புறம் சிரிப்பாகவும், மறுபுறம் பாவமாகவும் தான் இருக்கும். மேலும் திருமந்திரத்தில் வரும் ஒரு பாடலும் சேர்ந்தே ஞாபகம் வருகிறது. இதோ அந்த பாடல் உங்களுக்காக...
குருட்டினை நீக்கும் குருவினை கைக்கொள்ளார்
குருட்டினை நீக்கா குருவினை கைக்கொள்வார்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி
குருடும் குருடும் குழிவிழுமாறே
இது போன்ற குருட்டு குருக்களை பற்றி நமக்கு எவ்வித கவலையும் தேவையில்லை. சரி இப்போது நாம் பதிவிற்குள் செல்வோம்.
இதுவரையில் எது எது வாசி இல்லை என்று பார்த்தோம். ஆனால் உண்மையில் எதுதான் வாசி என்று கேட்டால்.. அதை மிக எளிமையாகவும், தெளிவாகவும், சுருக்கமாகவும் கூற வேண்டும் என்றால் எவன் ஒருவன் தன் மூக்கால் சுவாசிக்காமல் இருக்கிறானோ.. அவனே வாசி யோகி. அத்தகைய யோகி செய்வதே வாசி யோகம். அவனுக்கு மட்டுமே மரணம் என்பது இல்லை. மற்ற எல்லாரும், எல்லாமும் மாண்டு போகும்.
வெட்டாந் தரையில் உண்டான எல்லாவற்றிலும் நாசியிலே ஜீவசுவாசம் உள்ளவைகள் எல்லாம் மாண்டுபோயின (ஆதியாகமம்
7:22)
நாசியிலே சுவாசமுள்ள மனிதனை நம்புவதை விட்டுவிடுங்கள். எண்ணப்படுதற்கு அவன் எம்மாத்திரம் (ஏசாயா 2:22)
அதாவது எப்போது நாம் ஒரு புத்தகத்தை கண்ணால் பார்த்து வாயால் அல்லது மனதால் வாசிக்காமல்.. நாம் பார்ப்பவை, கேட்பவை, உணர்பவை போன்ற எல்லாவற்றையும் மூக்கால் வாசிக்கக் கற்பது வாசியோகம் ஆகும்.
அது எவ்வாறு சாத்தியமாகும் என்று கேட்டால்.., நாம் சுவாசிக்கும் காற்றில் பிராணனை தவிர்த்து, உலகில் நல்லவர், கெட்டவர், ஞானி, சித்தர், கொலை-கொள்ளைகாரன் போன்ற பலரும் கலந்துள்ளனர். அவர்கள் எண்ணங்களும் பேச்சு ஒலிகளும் காற்றில் கலந்துள்ளது. இந்த காற்றை நாம் சுவாசிப்பதால் நம்மையும் அறியாமலே நமக்குள் நாத-ஒலி அலைகளாக மூச்சு மூலம் உட்சென்று நம்மை நாமே சுயசிந்தனை செய்யவிடாது மற்றவர்கள் எண்ண அலைகளிலே சுழல வைத்து பாவ புண்ணியங்களில் சிக்க வைக்கும். எனவே நம்மை நாமே இயக்கவும், நம் எண்ணங்களும் சிந்தனைகளும் நம்முடையதாக மட்டும் இருக்கவும் அட்சர சுத்தமான வாசியோகம் பயன்படுகின்றது.
இதில் வாசிக்கக்கூடிய எழுத்துக்களாக அங், சிங், வங், ஓம், மோ, மூ, கூ, கீ, மௌ, வாசிவாகூஹா போன்றவை சித்தர்களால் பயன்படுத்தப்பட்டது. (இந்த அட்சரங்களை உபயோகிக்கும் முறையை முன்பே கூறியதால், இங்கு அதை கூறவில்லை). இதனால் மற்றவர்களின் எண்ண அலைகள் அறிந்தோ அறியாமலோ எந்தவகையிலும் குறுக்கிடமுடியாது. ஆக எதையுமே மூக்கால் (சு-வாசத்தால் அதாவது சுத்த சுவாசத்தால்) வாசிக்கக் கற்றுவிட்டால் என்ன செய்தாலும் எது செய்தாலும் அது தியானம்தான்.
இவ்வாறு வாசிப்பவனால் மட்டுமே காற்றிலுள்ள நல்வாசத்தை மட்டும் உள்வாங்க முடியும். அவன் காற்றில் கலந்துள்ள பாவபுண்ணிய வாசங்களை உள்ளிழுக்க மாட்டான். அவனால் மட்டுமே உண்ணும் போதும், உறங்கும் போதும், கொட்டாவி விடும் போதும், வாய்வழி காற்றை ஆழமாக இழுக்கும் போதும் மின்னோசையை மட்டுமே இழுக்கவும் வெளிவிடவும் முடியும். அவனால் மீயொலியை கேட்கவும் முடியும். ஒவ்வொரு கிரகத்திலிருந்தும், நட்சத்திரங்களிலிருந்தும் வெளிவரும் நாத அலைகளை உட்கிரகித்து வெளியில் யாவருக்கும் உபதேசிக்கவும் முடியும். இப்படிப் பட்டவரின் அருகில் நாம் இருந்தாலே அவர் அதிர்வின் தாக்கம் நமக்கும் மெய்ப்பொருளை விளங்க வைக்கும்.
பின்கலையும் இடகலையும் மாறும் போது
அறிவான சுழிமுனையில் மனதை வைத்து
அசையாமல் ஒருமனதாய் பார்க்கும் போது
குறியான சிவயோகம் சித்தியாச்சு
கோடி சென்மம் சித்தரை போல் வாழலாமே
இதன் விளக்கம் என்ன என்றால் சுடர் என்று கூறப்படும் சுழுமுனையில் சூரியகலை சேர்ந்தால் ஐம்புலனும் அறிவும் பெருகும், இதுவே சந்திரகலை இணைந்தால் பஞ்சபூதமும் அறிவும் ஒடுங்கும். இவ்வாறு சூரியசந்திர சேர்ந்திணைந்தால் அறிவும் தசவாய்வும் ஒடுங்கும்.
மேலும் நமது மூளையானது 360 பாகைகள் கொண்டது. அதில் சூரிய கலையானது நடக்கும்பொழுது சுவாசமானது பிடரிவழி சென்று வரும். சந்திரகலை நடக்கும் போது 312 பாகமாகிய மூளையில் சென்றுவரும். மொத்தம் 360 பாகங்களில் 312 பாகமாகிய மூளையில் சந்திர கலையானது சென்று வருவதால் இதை மந்திரங் கால் மதி முக்கால் என்று கூறுகின்றனர். மந்திரங்கால் என்பது சூரியனையும் மதி முக்கால் என்பது சந்திரனையும் குறிக்கும்.
தானென்ற சித்தர் முதல் முனிரிஷிகள்
தன்மயமே தானாக தவமே செய்து
ஊனென்ற உடல் வெறுத்து பசியாக்கி
உற்ற கலை வாசியென்ற தாரகத்தைக் கொண்டு
வானென்ற ஆகாய வெளியிலே சென்று
மகத்தான சோதியுடன் சோதியானார்
ஏனென்று வந்ததுவும் சோதி சோதி
சோதியெங்கும் சிவமயமான சோதிதான்
ஆக யாவரும் உச்சியடைந்து மேல்நிலை காண வாசிகலையைத்தான் முக்கியமாகக் கையாண்டுள்ளனர்.
எழுத்தறிவித்தவன் துணையைக் கொண்டும் அனுமதியைக் கொண்டும் இரகசியம் வெளிப்படும்...