இன்றைய காலப்பகுதியில்
நோக்கு வர்மம், ஹிப்னாடிசம், மெஸ்மரிசம் ஆகியன மிகவும் தேடலுக்குரிய விடயங்கள் ஆகிவிட்டன.
இவை வர்ம சாஸ்திரத்தின் ஒரு பகுதியான நோக்குவர்மத்துடனும் தொடர்புபடுத்தி கதைக்கப்படும்
விடயமாகவும் ஆகிவிடது. நான் எனது சுய தேடலில் அறிந்த தெளிவுகளை இங்கு பகிர்தல்
நல்லதென எண்ணுகிறேன். ஏனெனில் தமிழ் கூறும் நல்லுலகு சுதேச அறிவியலை இழந்ததன்
விளைவு நாம் யார் என்பதே எமக்கு தெரியாததுதான்!
ஹிப்னாடிசத்தின்
வரலாறு என்ன?
ஹிப்னாடிசம் என்ற
சொல் கி.பி 1800ம் ஆண்டுகளின் நடுப்பகுதிவரை பிரபலமாகவில்லை. ஆனால் ஹிப்னாடிசம் என்று
வழங்கப்படும் சொல்லிற்கான பொறிமுறை, அதாவது உணர்வு மாறல் நிலை இந்திய கலாச்சாரத்திலும்,
எகிப்திய கலாச்சாரத்திலிம் இருந்ததற்கான சான்றுகள் தாராளமாக உண்டு. இதன் வரலாறு பல்லாயிரக்கணக்கான
ஆண்டுகள். எமது புராண இதிகாசங்கள், மந்திர சாஸ்திரங்கள், சித்தர் பாடல்கள் என அனைத்திலும்
இதன் பிரயோகம் உண்டு.
இதேபோல் எகிப்திய
கலாச்சாரத்திலும் ஹிப்னாடிசம் தொடர்பான குறிப்புகள் சூரியனைப்பார்த்து உணர்வு மாறிய
நிலையினை (altered state of consciousness) அடைதல் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்திய யோக முறையில்
மந்திர ஜெபம், திராடகம் என்பன ஹிப்னாடிசத்தின் படி நிலைகளாகும்.
இனி
மெஸ்மரிசத்த்தின் வரலாற்றிற்கு வருவோம்.
மெஸ்மரிசம் கி.பி
1500 களில் ஐரோப்பியாவில் பாரசெல்சியஸ் என்பவர் உடலில் காந்தங்களைக்கொண்டு நோய்களைக்
குணப்படுத்தி வந்தார், பின்னர் அதனை கி.பி 1700 களின் மெஸ்மர் என்பவர் தனது ஆராய்ச்சிக்காக
எடுத்துக் கொண்டார். மெஸ்மர் தனது ஆராய்ச்சிக்கு நியூட்டனின் புவியீர்ப்பு விதியினை
அடிப்படையாக கொண்டார். அதாவது திணிவுள்ள பொருட்கள் மீது பூமி ஈர்ப்புச் செய்வது போல்
மனிதன் மனம் மீது எப்படி செல்வாக்கு செலுத்துகிறது எனபதுதான் அவரது வாதத்தின் அடிப்படை
(இந்த காலப்பகுதியினை நோக்குங்கள், பாரதத்தில் இந்த ஆராய்ச்சிகளையெல்லாம் எப்போதோ ரிஷிகளும்,
யோகிகளும் முடித்து யோக சூத்திரமாகவும், ஆன்ம ஞானமாகவும் எழுதி வைத்துவிட்டார்கள்)
இந்த அடிப்படையில் மெஸ்மர் தனது ஆராய்ச்சியில் மனிதனை, மிருகங்களைச் சுற்றி
ஒரு காந்தப்புலம் இருப்பதாக அறிந்தார், அந்த காந்தப்புலத்திற்கு "மிருக
காந்தபுலம்" என பெயரிட்டார்.
நூற்றுக்கணக்கான
மக்களை மெஸ்மர் தனது காந்த சக்தியினால் குணப்படுத்தியதுடன், அக்கால அறுவை
சிகிச்சைக்கு மயக்க நிலைக்கு கொண்டு செவதற்கும் பயன் படுத்தினார். கி.பி
1784 இல் 16ம் லுயி மன்னன் மெஸ்மரது வழிமுறைகளை ஆராய்வதற்கு ஒரு குழு அமைத்தான்.
இது பெஞ்சமின் ப்ராங்கிளின் ஆல் தலைமை தாங்கப்பட்டது. இந்தக்குழு மெஸ்மரது
வாதங்களையும் அனுபவங்களையும் கேட்டறிந்தது, மெஸ்மரால் அவரது கண்டுபிடிப்புக்கு
பௌதீக ஆதாரம் எதனையும் வழங்க முடியவில்லை. ஆனால் அந்தக் குழு மெஸ்மரது
வாதங்களை புறந்தள்ளவில்லை. ஆதலாம் மெஸ்மரது கருத்துக்கள் மேலும் செல்வாக்குப்
பெற்றன. அதன் பின் இந்தக்கலை அவரது பெயரால் மெஸ்மரிசம் என அழைக்கப்பட்டது.
மெஸ்மரிசம் என்பது ஒருவர் தனது ஜீவ காந்த சக்தியினை மற்றவர்களுக்கு செலுத்தி
குணப்படுத்தும் கலையாகும். சரியாகச் சொன்னால் "ரெய்கி" எனப்படும்
ஜப்பானிய கலையின் மேற்கத்தைய வடிவம்தான் "மெஸ்மரிசம்". இது வர்ம
சாஸ்திரத்தில் கூறப்படும் நோக்குவர்மத்தினது அடிப்படையும்தான். ஆனால் நோக்கு
வர்மத்தின் அடிப்படை தத்துவங்களுடன் ஒப்பிடும் போது மெஸ்மரிசம் ஒரு துளிதான்.
நாம் எமது சுதேச அறிவியல் (indigenous science) தெரியாததால் தான் நோக்கு வர்மத்தினை
மெஸ்மரிசத்துடன் ஒப்பிடுகிறோம்.
சரி விடயத்திற்கு
வருவோம்; மெஸ்மரிசம் பின்னர் கி.பி 1843 இல் ஜேம்ஸ் பிராயிட் எனும் வைத்தியரால்
ஆராய்ச்சிக்கு உட்பட்டு "ஹிப்னோசிஸ்" என பெயரிடப்படுகிறது. பின்னர்
இந்த ஹிப்னோசிஸ் சிக்மண்ட் ப்ராயிடினால் தனது சைக்கோ அனாலிஸிசிர்கு ஆராய்ச்சிக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டு, எல்லாப் பிரச்சனைக்கும் மனிதனது காம அனுபவம்தான்
மறை மனதில் தாக்கத்தினை ஏற்படுத்தி உண்டுபண்ணுகிறது என தனது கொள்கையினை வகுக்கின்றார்.
இவரது கொள்கையின் படி ஹிப்னாடிசத்தின் செல்வாக்கு வீழ்ச்சியுற ஆரம்பிகிறது.
இதன் பின் கி.பி 1920 களில் ஆட்டோ சஜஸன் (auto suggestion) எனும் சுய ஹிப்னாடிசம்
ஆரம்பமாகிறது. இறுதியான ஹிப்னாடிச ஆராய்ச்சி முடிவுகளின் படி ஹிப்னாடிச நிலைக்கு
ஆட்படுபவரின் விருப்பத்தின் பெயரிலேயே ஹிப்னாடிசம் செய்ய முடியும் என்பதாகும்.
உதாரணத்தின் மூலம் விளங்கிகொள்வதானால் 'பிறவியிலேயே சைவ உணவுப்பழக்க முடையவரை
ஹிப்னாடிச தூக்கத்தில் ஆட்படுத்து மாமிசம் சாப்பிடச் சொன்னால் அவர் நிச்சயமாக
உண்ணமாட்டார்', ஆதலால் ஒருவர் தன் சுய விருப்பத்தின் பெயரில் மட்டுமே ஹிப்னாடிசத்திற்கு
ஆட்பட முடியும்.
ஆகவே சித்தர்கள்
குறிப்பிடும் நோக்கு வர்மத்திற்கும் ஹிப்னாடிசத்திற்கும் எந்த வித நேரடித்தொடரபுமில்லை, ஹிப்னாடிசம்
ஆழ்மனதாகிய சித்தத்திற்கு (sub conscious mind) ஒரு தகவலைக்கொடுக்கும் பொறிமுறை,
மெஸ்மரிசம் என்பது பிராணசக்தியினை மற்றவர் மேல் பாய்ச்சி குணப்படுத்தும் பொறிமுறை,
நோக்கு வர்மம் சித்த சக்தியினையும் பிராணசக்தியினையும் இணைத்து மற்றவர் தாக்க பயன்படும்
ஒரு போர்க்கலை.
நோக்குவர்மம்
பிராண சக்தி, தாரணா சக்தி எனப்படும் சித்த ஏகாக்ர நிலை ஆகிய இரண்டு அடிப்படையில்
செயற்படுவது. அடுத்தது வர்மப் பிரயோகம் தெரிய பூரணமாக சரகலை (வாசி யோகமும்)
தெரிய வேண்டும், குறித்த நேரத்தில் பிராணன், மற்றும் தச வாயுக்கள் உடலில் எங்கு
நிலை கொள்ளுகிறது எனபது தெளிவாக தெரிய வேண்டும்.
ஹிப்னாடிசம்,
மெஸ்மரிசம் என்பது இந்திய யோகக்கலையின் ஒரு சிறு அங்கமேயொழிய அவற்றின் கோட்பாடுகளை
வைத்துக்கொண்டு நோக்குவர்மம், மந்திர சாஸ்திரம், யோகக்கலையினை புரிதல் முடியாது (அல்லது
ஓரளவு புரியலாம்) என்பதுவே எமது வாதம்!
வேறு வார்த்தையில்
கூறுவதானால் இந்திய யோகக்கலையின் சிறு துளிபோன்ற இரு அம்சங்கள்தான் இவை, அதேவேளை அவை
தெளிவாக விஞ்ஞான முறைக்கு உட்படுத்தப்பட்டு அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய நிலையில்
உள்ளபோது யோகக்கலையின் இத்தகைய விளக்கங்கள் தெளிவற்றிருப்பதும் இவ்வாறான
குழப்பமான புரிதலுக்கு வழி கோலுகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை!
No comments:
Post a Comment