Karma - வாழ்வின் ரகசியம்:
வாழ்வின் ரகசியம் என்ன என்று பார்ப்போம். "வாஸன" எனப்படும் (முன் ஜென்மாவில் நிறைவுறாத ஆசைகள்) சக்தி, ஆசைகள் நிறைவேற சாதகமான சூழ்நிலையை உருவக்கிக் கொண்டு, உலகின் ஓர் தகுந்த இடத்தில், உகந்த உடலுருவத்தை அமைத்துக்கொண்டு உருவாவதுதான் நம் ஜெனன ரகசியம். இப்படி உருவான உடலை, நம் அறிவீனத்தால், நிரந்தரம் எனக் கருதி அதை போஷிப்பித்து, அழகு படுத்தி ஆசாபாச பந்தத்தால் உலகில் கட்டுண்டு நம் சுயநிலை தெரியாமல் அஹம் அனும் பாவத்தை வளர்த்துக்கொண்டு ஸுக துக்கங்களினால் பீடித்து உலகில் தத்தளிக்கிறோம். இது மாயா சக்தியினால் ஆவன. இதிலிருந்து விடுபட்டு நம் சுய உருவை உணருவதுதான் நம் வாழ்க்கை லட்சியமாக அமைய வேண்டும்.
நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலிருந்து எழும் பலனை நாமேதான் அனுபவிக்கவேண்டும். நல்லகாரியம் செய்தால் ஸுகமும், கெடுதல் செய்தால் கஷ்டமும் நேரும் என எல்லோர்க்கும் தெரிந்த உண்மைதானே? இப்படி நல்ல காரியம் செய்தாலும், கெடுதல் செய்தாலும் அதன் பலனை நாமே அனுபவிக்க வேண்டும். அதற்காக வாழ்ந்தே தீரும். வாழ்வு என்பது ஸுக துக்கங்களால் உருவாக்கப்பட்ட ஒரு நியதி. இதிலிருந்து விடுபட வேண்டுமானால் ஸுக துக்கங்கள் இல்லாமலிருக்க வேண்டும். அதற்குக் கர்மா பண்ணாமல் இருக்க வேண்டும். அதெப்படி முடியும்? கர்மா புரியாமல் இருக்க முடியாது. கர்மாவில் ஈடுபடுவதுதான் வாழ்க்கை. அப்படியானால் ஸுகதுக்கத்திலிருந்து விடுபட்டு நம் சுய உருவை எப்படி உணர முடியும்? இதை அறிந்துகொண்டால் வாழ்வின் ரகசியம் புரிந்துவிடும்.
நாம் இந்த உலகில் பிறந்து, பால்யம், கௌமாரம், யௌவனம், வார்தக்யம் என்ற நாலு நிலைகளை அடைந்து முடிவில் உலகிலிருந்து மறைந்துவிடுகிறோம். இப்படி ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு அனுபவத்துடன் வாழ்துவருகிறோம். இந்நிலைகளில் நாம் பலவித உடல், மனம் சம்பந்தப்பட்ட அநுபவங்களில் வாழ்துவருகிறோம். இந்த வித்தியாசமான அனுபவங்களுக்கு என்ன காரணம்? நாம் வாழும் வாழ்க்கையின் தரமேதான். நமக்கு வாழ்க்கையில் வரும் சுகதுக்கங்கள் நாம் செய்யும் காரியங்களின் தன்மையை ஒட்டியே நிகழ்கின்றன. ஆதலால் வாழ்க்கையில் நிகழும் அனுபவத்திற்கு நாமே காரணம் எனத் தெரிகிறது. அப்படியானால் நம் வாழ்க்கையை நம்மால் நியந்தரணம் பண்ண முடியுமா என வினா எழலாம். ஆம், நாமே நம் வாழ்க்கைத் தரத்திற்கு வழி வகுத்துக்கொள்கிறோம் எனச் சொன்னால் மிகையாகாது.
No comments:
Post a Comment