Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, November 2, 2014

பகவத் கீதை -அத்தியாயம் 18 மோட்ச சன்யாஸ யோகம் 3

52. தனி இடங்களை நாடுவோனாய், ஆசைகள் குன்றி, வாக்கையும் உடம்பையும் மனத்தையும் வென்று, தியான யோகத்தில் ஈடுபட்டு, அப்போதும் பற்றின்மையை நன்கு பற்றியவனாய்,விஷயப் பற்றுடன் கூடிய லௌகிக புத்தியுடைய ஒருவன் பல பேருடன் சேர்ந்திருந்து காலங்கழிக்க விரும்புகிறான். பேச்சுக்கு ஆள் இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்தவன் போன்று அவன் ஆகிறான். யோகிக்கோ தனித்திருக்குமளவு பெருமகிழ்ச்சி யுண்டாகிறது. புதிதாகத் தனித்திருந்து பழகுபவனுக்கு மனதைப் பரிசீலனை பண்ண இயலுகிறது. உணவு உடலைப் பேணுவதுபோன்று ஏகாந்தம் மன பரிபாகத்துக்குப் பயன்படுகிறது. சாதன த்தில் முதிர்ந்தவன் தனித்திருக்கும்போது ஆத்ம போதத்தில் திளைத்திருக்கிறான். மிகைபட்ட உணவு உடலுக்குச் சுமையாகி றது; சோம்பலையும் உண்டுபண்ணுகிறது. குறைபட்ட உணவு பலவீனத்தில் கொண்டுசேர்க்கும். அளவுடன் உண்பவன் யோகியாகிறான். மனதில் தெளிவும் உடலில் ஊக்கமும் அதனால் உண்டாகின்றன. யோகியின் ஆணைக்கு உட்பட்ட சித்த விருத்திகளே அவனுடைய உள்ளத்தில் உண்டாகின்றன. மனது அடங்கியிருப்பதற்கு அது அறிகுறியாகும். அவன் மிகைபடப் பேசான். பயன் படாத புன்மொழிகள் அவன் வாயினின்று வரமாட்டா. மொழியை அடக்கியதன் பயன் அதுவாம். நல்ல சாதகனது உடல் யாண்டும் அசைவற்றிருக்கும். அனாவசியமாக அது இயங்காது. ஆத்ம சொரூபத்தில் மனது மகிழ்ந்து குவிந்திருப்பது தியானமாகிறது. உலக வியவகாரம் பண்ணுவது சாதாரண மனிதனுக்கு எவ்வளவு இயல்பானதோ அவ்வளவு இயல்பானது அவனுக்குத் தியானம் பண்ணுவது. வைராக்கியம் என்பது பற்றின்மை. இம்மையிலும் மறுமையிலும் உள்ள விஷய இன்பங்களில் பற்று வைக்காதிருப்பது யோகத்துக்கு உற்ற உபாயம்.
53. அகங்காரம், வலிமை, செருக்கு, காமம், சினம், இரத்தல் இவற்றை விட்டும் மமகாரம் நீங்கி சாந்தநிலை கொண்டவன் பிரம்மமாகத் தகுவான்.மனிதன் வேறு, அவன் அணிந்திருக்கும் உடை வேறு. உடையைத் தன் சொரூபமாக எண்ணி இன்பமும் துன்பமும் அடைவார் உண்டு. அது ஒருவிதமான அகங்காரம். ஜன்மாந்தரங்களில் தனக்கு வந்தமையும் எண்ணிறந்த தேகங்களைத் தான் என்று அபிமானித்தல் பிறவிக்கு ஏதுவான அகங்காரமாகும். ஆத்ம போதத்தில் வளரும் வன்மை அல்லது பலம் வேண்டப்படுகிறது. அத்தகைய சீரிய பலமில்லாதவன் ஆத்மாவை அடையமாட்டான். பின்பு ஆசைக்கு ஒருவிதமான பலம் உண்டு. அதை ஆசையின் வேகம் என்று சொல்லுகிறோம். ஆசையின் வேகம் கெட வேண்டும். காமங்களை நிறைவேற்றுதற்கு வருவிக்கப்படும் பலம் வேண்டப்படுவதன்று. தனக்கு உடல் வலிவு மிகவும் அமைந்திருக்கிறதென்று மகிழ்ந்து ஒருவன் அதர்மத்தில் ஈடுபடுவதுண்டு. அத்தகைய இயல்பு செருக்கு என்னும் பெயர் பெறுகிறது. குற்றங்கள் பல செய்வதற்குச் சிலர்க்கு உடல் வலிவே முதற்காரணமாகிறது. இந்திரிய விஷயங்களில் வைத்துள்ள ஆசைக்குக் காமம் என்று பெயர். காமத்துக்கு இடைஞ்சல் பண்ணுகிறவனிடத்து சினம் வருகிறது. குரோதம் என்பது இதுவே. உடல் வாழ்க்கைக்குப் பொருள் தேவை. ஆனால் நான் பொருள் படைத்தவன் என்ற எண்ணம் உதவாது. ஆத்ம சாதனத்துக்கும்தர்மானுஷ்டான த்துக்கும் அது இடைஞ்சலாகிறது. பொருள் படைத்தவன் என்ற உணர்வு பரிக்கிரஹமெனப்படுகிறது. வாழ்க்கைக்கு இன்றியமையாததும் எளிதில் அகப்படுவதுமாகிய பொருளை யோகி ஒருவன் உடைத்திருக்க வேண்டும். பின்பு, அதைத் தன்னுடையதென்று அவன் கருதலாகாது. தன்னுடையதென்று கருதாத மனப்பான்மையே நிர்மமகாரமெனப்படுகிறது. இந்தக் கோட்பாடுகளெல்லாம் யாரிடத்து அமைந்திருக்கின்றனவோ அம்மனிதன் சாந்தியடைகிறான். அவனுக்கு மனத்தெளிவு இயல்பாக உண்டாகிறது. அதனால் அவன் பிரம்மத்தையடையத் தகுந்தவனாகிறான். அது எப்படியெனில் :                                      54. பிரம்ம நிலை பெற்றோன், ஆனந்த முடையோன், துயரற்றோன், விருப்பற்றோன், எல்லா உயிர்களையும் சமமாக நினைப்போன், உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்.ஞானம் பெரியதா, பக்தி பெரியதா என்னும் கேள்வி பலர் உள்ளத்தில் எழுகிறது. சிலர் ஞானம் பெரியது என்பர்; இன்னும் சிலர் பக்தி பெரியது என்பர். அப்படி யெல்லாம் பகர்வது அவரவர் மனப்பான்மையை விளக்குகிறது. முதிர்ந்த நிலையில் பக்தியும் ஞானமும் ஒன்றே. குழந்தை ஒன்றுக்குத் தாயினிடத்து அன்பு பெருக்கெடுத்திருக்கிறது. தாயும் தன் குழந்தையினிடத்து ஆழ்ந்து அன்பு காட்டுகிறாள். பக்தியின் தோற்றத்தை இருவரிடத்திலும் காண்கிறோம். இதில் ஞானம் எங்கே இருக்கிறது என்னும் கேள்வி எழலாம். குழந்தை தாய்க்குரியது; தாயே அக்குழந்தையாக வடிவெடுத்திருக்கிறாள் என்ற ஞானம் அதில் மறைமுகமாயிருக்கிறது. ஒரு பணக்காரனிடம் எத்தனையோ யாசகர்கள் வந்து கொண்டிருந்தார்கள். வந்தவர்களை யார் என்று கவனியாது அம்மனிதன் தானம் செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் தோன்றிய வயிராகிகள் கூட்டத்தில் இருந்த பதினைந்து வயது இளைஞன் அப்பணக்காரனுடைய மனதைச் சிறிது கவர்ந்தான். அவ் இளைஞனது இடக் கன்னத்தில் இருந்த தழும்பும் முகச்சாயலும் ஆராய்ச்சிக்கு உரியவைகளாயின. பிரக்ஞைகெட்டு ஆற்றங்கரையில் கிடந்த குழந்தையைத் தாங்கள் எடுத்து வளர்த்ததாக வயிராகிகள் சொன்னார்கள். பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்பு படகு விபத்து ஒன்றில் தான் இழந்துவிட்ட குழந்தை இப்பொழுது அகப்பட்டான் ! விசாரித்து உண்மையைத் தெரிந்தவுடன் தந்தையின் மனதில் அன்பு சுரந்தது. ஞானத்தினின்று அன்பு தோன்றுவதற்கு இது சான்று ஆகும். ஆக ஞானமுள்ள இடத்தில் பக்தியிருப்பதும், பக்தியுள்ள இடத்தில் ஞானம் இருப்பதும் இயல்பு. பிரம்ம ஞானத்தில் உறுதி பெறுகின்றவனுக்கு ஈசுவர பக்தி மேலிடுகிறது. தன்னையும் மன்னுயிர்கள் எல்லாவற்றையும் ஒரே பாங்குடன் அவன் காண்கிறான். ஏனென்றால் எல்லா உயிர்களும் ஈசுவரனுடைய பல்வேறு தோற்றங்கள் என்பது அவனுக்கு நன்கு விளங்குகிறது. தனக்கு ஏதாவது நஷ்டம் வந்துவிட்டதென்று அவன் துயரப்படுவதுமில்லை; தான் அடைய வேண்டிய பொருளை இன்னும் அடையவில்லை என்று அவாவுறுவதுமில்லை. ஏழாம் அத்தியாயம் பதினேழாவது சுலோகத்தில் பகர்ந்த மேலாம் பக்தி ஈண்டுக் குறிப்பிடப்படுகிறது.
55. யான் எவ்வளவுடையேன், யாவன் என என்னை யருவன் உள்ளபடி பக்தியாலேயே அறிகிறான். என்னை உள்ளபடி அறிந்து கொண்டபின்னர் தத் (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.ஆகாததை ஆகுமாறு செய்வது அன்பு அல்லது பக்தி. தெரியாததைத் தெரிவிப்பதும் அதே அன்பு. டாக்டர் ஒருவர் வெறும் நோயை ஆராய்ச்சி பண்ணுவதைவிட நோயாளியிடம் அன்பு கொள்ளுவாராகில், அந்த அன்பால் நோயாளியின் வருத்தத்தை உள்ளபடி அறிகிறார். பின்பு அது நோயை உள்ளபடி அறிந்ததாகும். அன்பின் மூலம் எதை அறிந்தாலும் அது உண்மையான அறிவாகிறது.பகவானிடத்து பக்தி பண்ணுபவர் அவரை நன்கு அறிகின்றனர். அவரை அறியுமளவு பக்தி அதிகரிக்கிறது. ஞானத்தோடுகூடிய பக்தி மிகச் சிறந்தது. அவரே சகுண பிரம்மமாகவும் நிர்க்குணபிரம்மமாகவும் இருக்கிறார் என்பது பக்தனுக்கு விளங்குகிறது. உலகெல்லாம் அவரிடத்திருந்தே வந்தது. தனக்கும் தன் தலைவனுக்கும் உள்ள தொடர்வு தெரியும்போது பக்தன் பகவானுக்கே உரியவன் ஆகிறான். இந்த உண்மையை அறிந்த அக்கணமே பக்தன் பகவானை அடைந்தவன் ஆகிறான்.ஜீவாத்மாவால் பரமாத்மாவுடன் இரண்டறக் கலக்க முடியும். அப்போதுதான் ஒருவன் அவனே நான் என்று உணர்ந்து சொல்லக் கூடும். ஒரு வீட்டில் நெடுநாளாக வேலை செய்து வந்த வேலைக்காரன் ஒருவன், காலக்கிரமத்தில் அவ்வீட்டார்களுள் ஒருவனாகவே பாவிக்கப்படலாம். வீட்டு எஜமானன் அவனுடைய வேலைத்திறமையைக் கண்டு மகிழ்ந்து, ஒருநாள் அவனைத் தன்னுடைய ஆசனத்தில் உட்காரச் செய்து தன்னைச் சுற்றியுள்ளவர்களை நோக்கி, இந்த க்ஷணம் முதல் இவனுக்கும் எனக்கும் யாதொரு வித்தியாசமுமில்லை. நானும் இவனும் ஒன்று. எனது கட்டளைக்குக் கீழ்ப்படிவதைப்போல இவனுடைய கட்டளைக்கும் நீங்கள் கீழ்ப்படியவேண்டும். இல்லாவிட்டால் தண்டிப்பேன் என்று சொல்லலாம். அப்போது அந்த வேலைக்காரன் சங்கோசத்தினால் இந்தப் புதிய கௌரவத்தைக் காட்டிக்கொள்ளத் தயங்கலாமானாலும், எஜமானன் அவனைக் கட்டாயப்படுத்தி கௌரவ ஸ்தானத்தில் வைப்பான். ஈசுவரனை நெடுங்காலம் வழிபட்டு அவனுடன் ஐக்கியமான ஜீவனுடைய நிலைமையும் இப்படிப்பட்டதே. ஈசுவரன் தன்னுடைய மஹிமையை இவர்களுக்கு அருளி, இவர்களைத் தனது ஒப்பற்ற ஸ்தானத்துக்கு உயர்த்துகிறான்.
56. எல்லாத் தொழில்களையும் எப்போதும் செய்து கொண்டிருந்தாலும், என்னையே சார்பாகக் கொண்டோன் எனதருளால் அழிவற்ற நித்தியப் பதவியை எய்துகிறான்.முடிந்த நிலையில் எப்படி ஞானமும் பக்தியும் ஒன்றோ அதை விதத்தில் முடிந்த நிலையில் ஞானமும் கர்மமும் ஒன்றாகின்றன. சத்வகுணத்தில் நிலைத்திருப்பவன் கர்மத்தைத் தியாகம் பண்ணுவதில்லை; கர்மத்துக்குத் தான் கர்த்தா என்ற எண்ணத்தைத் தியாகம் செய்கிறான். தான் கர்த்தா என்ற எண்ணம் போய்விடும்பொழுது அத்துடன் ஜீவபோதமும் போயொழிகிறது. தன்னைக் கர்த்தாவென்று எண்ணிக்கொள்ளாது ஏராளமாகக் கர்மம் செய்பவனுக்கு ஆயாசம் வருவதில்லை. தன்னைக் கர்த்தா வென்று எண்ணிக்கொள்பவனுக்கோ விரைவில் ஆயாசம் வருகிறது. அவன் சிறிது வினையாற்றினாலும் அது ஏராளமானதாகத் தோன்றும். மனநிலையே அதற்குக் காரணம். ஈசுவரனுக்காகக் கர்மம் செய்பவன் ஈசுவரனை நினைக்கிறான். தன்னை நினைப்பதில்லை. ஈசுவர நினைவில் தன்னை மறந்திருப்பவன் சரணடைந்தவன் ஆகிறான். கடலைச் சென்று அடையும் வரையில் நதிக்குச் சொந்த வியக்தியிருக்கிறது; சொந்தச் செயலும் இருக்கிறது. கடலினுள் நுழைந்த பிறகு நதி என்று பெயர் போய்விடுகிறது. கடலில் இருக்கிற நீரோட்டத்தில் நதியும் கலந்துகொள்ளலாம்; நதியினுடையதன்று. ஈசுவரனிடம் அடைக்கலம் புகுந்த ஜீவனது பாங்கு அத்தகையது. சரீரம் என்ற வடிவம் இருக்கிறது எனினும் அதனுள் இருக்கிற உணர்ச்சி முற்றிலும் பரபோதமாம். அச்சரீரத்தில் நிகழ்கின்ற கிருத்தியங்கள் எல்லாம் ஈசன் செயலேயாம். அங்ஙனம் வித விதமான செயல்கள் நிகழலாம். போர் புரிவது போன்ற பயங்கரமான செயல் நடைபெறலாம். அக்கர்மங்களைச் சொந்தம் பாராட்டுதற்கு ஜீவபோதம் மிச்சமில்லை. நிலைத்த நித்தியமான பரபோதம் ஜீவனால் அடையப்பெற்றதாகிறது. கர்மம் செய்தலே வாழ்க்கையின் முடிவன்று; அது ஒரு மார்க்கமே. பற்றுதலற்றுச் செய்யப்படுமானால் அது வாழ்க்கையின் முடிவான லட்சியமாகிய இறைவனிடம் அழைத்துச் செல்கிறது. மார்க்கத்தையே முடிவென்று மருள் கொள்ளவேண்டாம். ஓர் ஊருக்குச் செல்லும் வழி ஊராகிவிடாது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்.
ஆகையால் நீ வாழவேண்டிய விதமாவது :
57. அறிவினால் செயல்களை யெல்லாம் எனக்கெனத் துறந்துவிட்டு, என்னிடத்தே ஈடுபட்டு, புத்தி யோகத்தில் சார்புற்று, எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.ஒரு மனிதனை ஓர் அரசாங்க உத்தியோகத்தில் வைத்தால் அந்த அரசாங்கத்து க்குரிய ஆதிக்கம் அவனிடத்துச் சிறிது வருகிறது. தன் கடமையை முறையாகச் செய்துகொண்டுபோனால் இன்னும் அதிகமான பொறுப்பும் ஆதிக்கமும் அவனுக்கு வரும். அந்த உத்தியோகஸ்தன் சமூகத்தில் ஆணை செலுத்துதற் கிடையில் அப்பதவியில் தனக்குச் சொந்தமானது ஒன்றுமில்லையென்றும் எல்லாம் அரசாங்கத்தினுடைய தென்றும் அறிவானாகில் அவன் தனது பதவியைப்பற்றிய புத்தியோகம் பெற்றவன் ஆகிறான். அதைத் தனது என்று சொந்தம் பாராட்டுவானாகில் அவன் விவேகத் தைப் பெற்றவன் ஆகான். அதே முறையில் ஜீவாத்மாவுக்கு ஏற்பட்டிருக்கும் வியக்தி யைப்பற்றிய உண்மையை ஜீவன் அறிவா னானால் அவன் புத்தியோகம் பெற்றவன் ஆகிறான். தான் என்பதற்கு இலக்காகத் தன்னிடத்து இருப்பது யாது என்று அவன் ஆராய்ந்து பார்க்கவேண்டும். தனது என்பதற்கு இலக்காக இருப்பது எது என்று அடுத்தபடியாக விசாரித்துப் பார்க்க வேண்டும். கர்மத்தையும் அதே விதத்தில் துருவிப் பார்ப்பது அவசியம். தான் என்பதும், தனது என்பதும், தன் செயல் என்பதும் உண்மை யில் இல்லை.புத்தியோகத்தைச் சார்ந்திருப்பவன் இங்கு பகவான் இடுகின்ற ஆணைகளை யெல்லாம் அப்படியே நிறைவேற்றி வைப்பான். காயத்தால் அவன் கர்மங்களை விட்டொழிக்க மாட்டான். விவேகத்தின் துணைகொண்டு கர்மத்தில் வைத்த பற்றுதலையே ஒழித்து விடுவான். சர்வேசுவரனுடைய கிருத்தியமே யாண்டும் நிகழ்கிறது. எந்த ஜீவன் அதற்குக் கருவியா யிருந்தாலும் இல்லாவிட்டாலும் இறைவன் செயல் நின்றுவிடாது. ஈசுவரன் செயலை ஈசுவரனுக்காகச் செய்வது சந்நியாச மாகிறது. பரம்பொருளில் ஒடுங்குவதைத் தவிர ஜீவாத்மாவுக்கு வேறு ஒரு அலுவலும் கிடையாது. அதற்காகத் தனது முழு மனதையும் பரம்பொருளிடத்து நாட்டி வைத்தல் வேண்டும். பகவானைக் காணும் பாக்கியம் உனக்குக் கிடைத்தால் நீ அவரிடம் என்ன கேட்பாய்? வைத்திய சாலைகள், குளங்கள், பாட சாலைகள், அன்னச் சத்திரங்கள் இவைகள் வேண்டுமென்று இறைஞ் சுவாயா? இவைகளெல்லாம் நாம் கடவுளைக் காணும் வரையில் நமக்கு உண்மையாகத் தோன்றும். ஆனால் கடவுளை நேருக்கு நேர் கண்டதும் இவையனைத்தும் நிலையில்லாதனவாகக் கனவில் காணப்படுவன போலத் தோன்றும். ஆகையால் அவனிடம் அன்பு வேண்டியும் அறிவு வேண்டியும் பிரார்த்திப்போம். அவனிடம் அன்பு செலுத்துவதால் மனிதத் தன்மையிலி ருந்து நாம் தெய்வத் தன்மைக்கு உயர்த்தப்படுவோம். அறிவுக்கும் ஆனந்தத்திற்கும் உறைவிடம் பகவான் என்பதை அவ் அன்பினின்று நாம் அறிவோம். நாம் அவருடைய புதல்வர்கள் என்பதும் அப்பொழுது நமக்கு விளங்கும்.
புத்தியோகத்தால் விளையும் நலன் எது வெனின்:
58. என்னைச் சித்தத்தில் கொண்டிருப்போனாய் எல்லாத் தடைகளையும் எனதருளால் கடந்து செல்வாய். அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயாயின், பெரிய நாசத்தை அடைவாய்.உலக வைபவத்தில் இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று புறவுலகம்; மற்றது அகவுலகம். விக்கினங்களும் இடைஞ்சல்களும் வெளியுலகிலும் உண்டு; அகவுலகமாகிய மனதிலும் உண்டு. வெளியுலகைத் திருத்தியமைக்கின்றோம். நோய் வரக் கூடிய இடத்தை நோயற்ற இடமாக்கலாம். நீர் இல்லாத இடத்துக்கு நீர் கொண்டு வரலாம். வெப்பம் நிறைந்த இடத்தில் வெப்பத்தைக் குறைக்கலாம். இப்படியெல்லாம் செய்வது புறவுலகில் உள்ள விக்கினங்களை அகற்றுவதாகும். நவீன பௌதிக சாஸ்திரத்தின் துணைகொண்டு அச்செயல் ஏராளமாகச் செய்யப்படுகிறது. ஆனால் அதனாலேயே உலகுக்கு இன்பம் வந்தமையாது. வெளியுலகைத்திருத்தியமைப் பதைவிட முக்கியமானது அகவுலகமாகிய மனதைத் திருத்தியமைப்பது மனதைத் திருத்தியமைக்கத் தெரியாதவனுக்குப் புறவுலகம் எவ்வளவு நல்லதாயிருந்தாலும் அது இன்பம் தராது. புறவுலகம் எவ்வளவு கெட்டதாயிருந்தாலும் மனதைத் திருத்தியமைத்துக்கொண்டவனுக்கு அது கேடு செய்யாது.இடைஞ்சல்களும் விக்கினங்களும் வெளியுலகிலில்லை; மனிதனுடைய மன நிலையில்தான் இருக்கின்றன. மனதை ஈசன் பால் வைத்தவர்களுக்கு உலகம் தரும் இடைஞ்சல்களும் ஈசன் செயலாகவே தோன்றும். ஆனால் துன்பங்கள் எல்லாம் அஹங்காரத்தினின்றே வருகின்றன.என்னதான் முயன்றாலும் ஈசுவரனுடைய கிருபை மட்டும் இல்லாது போனால் உனக்கு ஒன்றும் லபிக்காது. நீ ஈசுவரனை அடையமாட்டாய். ஆனால் இந்தக் கிருபை எளிதில் கிடைத்து விடும் என்று நம்பாதே. உனது ஹிருதயத்திலிருந்து அஹங்காரம் முழுவதும் நீங்க வேண்டும். நான் கர்த்தா என்ற எண்ணம் உன் மனதிலிருந்தால் நீ ஒருபோதும் ஈசுவரனைக் காணமாட்டாய். நானே கர்த்தா வென்று எவன் நினைக்கின்றானோ அவன் உள்ளத்தில் ஈசுவரன் ஒரு போதும் தோன்றுவதில்லை.
அஹங்காரத்தில் விளையும் கேடு யாது? விடை வருகிறது :
59. நீ அகங்காரத்திலகப்பட்டுஇனிப் போர் புரியேன்என்று துணிவாயாயின், நினது துணிவு பொய்மைப்பட்டுப்போம். இயற்கை உன்னைப் போரிற் பிணிக்கும்.கைக்குழந்தை ஒன்றின் முன்னிலையில் கொலையும், களவும், சூதும் நிகழ்கின்றன. கொலை புரிவதைப் பார்த்துக் குழந்தை சிரித்துக்கொண்டிருக்கலாம். ஏனென்றால் அதனிடத்து இன்னும் அஹங்காரம் தோற்றத்துக்கு வரவில்லை. பெரியவனாக வளர்ந்த பின் வியாபகத்துக்கு வரக்கூடிய அவனுடைய சுபாவமும் இப்பொழுது குழந்தைப் பருவத்தில் தோன்றா நிலையில் இருக்கிறது. கொலையையும், களவையும், சூதையும் குழந்தை ஏன் எதிர்த்துப் போராடவில்லை என்ற கேள்வியை நாம் கேட்க முடியாது. அஹங்காரம் அடையப்பெறாத குழந்தையின் காட்சியில் அக்கொடிய செயல்கள் இல்லை. ஆனால் கொடுமையை உலகில் காண்பவர்களின் கடமை வேறு. குழந்தை போன்று தாங்கள் ஆயிருப்பதாக அவர்கள் பாசாங்கு செய்யலாகாது. அர்ஜுனனுக்கு பகவான் பகர்வதாவது :இன்றுவரை நீ பெற்றுள்ள பண்பும் பயிற்சியும் க்ஷத்திரிய சுபாவத்துக்கு ஒத்தது. தீமையை எதிர்த்துப் போராடும் பாங்குடையவன் நீ. தீமை தாண்டவமாடுவதைப் பார்த்துக்கொண்டு நீ சும்மாவிருக்க முடியுமா? தூங்கும்பொழுதும் நம் உடலைக் கொசுக்கடித்தால் நம் கை தானே கொசுவை அடித்து ஓட்டுகிறது. அங்ஙனம் உன் சுபாவமே போருக்கு எழுந்து நிற்கும். அதற்கு மாறாகத் தீர்மானிப்பது உன் ஆத்ம சக்தியைக் கெடுப்பதாகும். எண்ணமும் செயலும் மாறுபடுவதைவிட ஒரு மனிதனுக்குக் கேடு வேறு ஒன்றுமில்லை.
தீமையைப் களைந்தாக வேண்டும் என்ற எண்ணம் உன் உள்ளத்தில் கொதித்துக் கொண்டிருக்கிறது. ஆயினும் காயத்தால் செயல் புரிய மாட்டேன் என்று உன் இயல்பைக் கரக்கின்றாய். ரஜோகுணத்தில் உதித்த பயன்படாத அகங்காரம் அது. அதன் வசப்பட்டு வீணாகத் தீர்மானிக்காதே.
அஹங்காரம் இருக்கும் வரையில் ஞானமும் முக்தியும் கைகூடா; ஜனன மரணமும் நீங்கா. மேலும் :
60. இயற்கையில் தோன்றிய ஸ்வகர்மத்தால் கட்டுண்டிருக்கும் நீ, மயக்கத்தால் அதனைச் செய்ய விரும்பாயெனினும், தன் வசமின்றியேனும் அதைச் செய்யலாவாய்.ஒவ்வொரு மனிதனிடத்திலும் அவனது இயல்பு அல்லது சுபாவம் உள்ளுற உறைந்து கிடக்கிறது. அதன் வேகம் எத்தகையது என்பதற்குச் சான்று ஒன்று எடுத்துக்கொள்ளலாம். ஒரு கொடிய நோயைப் போக்குதற்கு ஒருவன் மருந்து உண்ண வேண்டியது அவசியமாயிற்று. மருத்துவனும் அதற்கேற்ற மருத்தைக் கொடுத்தான். பிறகு அதற்குப் பத்தியம் எத்தகையது என்ற கேள்வி எழுந்தது. நோயாளி மருந்து உண்ணும்போது குரங்கைப்பற்றி நினைக்கலாகாது என்ற நிபந்தனை ஏற்பட்டது. அதுதான் பத்தியம் ! அது மிக எளியது என்று நோயாளி எண்ணிக்கொண்டு பத்தியத்துக்கு உட்பட இசைந்தான். காலையில் மருந்து ஜாடியைக் கையில் எடுத்த பொழுதெல்லாம் குரங்கைப்பற்றிய எண்ணம் முன் வந்து நின்றது. பத்திய நிபந்தனையை நிறைவேற்ற அவனால் இயலவில்லை! எணணத்துக்கு எவ்வளவு வலிவோ அதைவிட அதிகம் வலிவுண்டு இயல்பில் பிறந்த வினைக்கு.மற்றொரு சான்றும் இங்குத் தேவையாகிறது. பிறரைத் தாக்கித் துன்புறுத்தும் ஒருவன் தானே அடியுண்ண விரும்புவதில்லை. அத்தகையவன் பிறரால் தாக்கப்படுவது போன்று கனவு கண்டான். கனவில் அவனுடைய நிலைமை அனுதாபத்துக்கு உரியதாயிருக்கிறது. உண்மையில் பிறர் யாரும் வந்து அவனைப் புடைக்கவில்லை. அவனது சுபாவத்தினின்று உதித்த சித்த விருத்தி அச்செயலை வரவழைத்துக்கொண்டது. கனவில் அடிபடுவதினின்று தப்பித்துக்கொள்ள அவனுக்குச் சுதந்தரம் இல்லை. தன் இயல்பில் பிறந்த வினையின் வன்மை அத்தகையது. சுவர்க்கத்துக்குச் சென்றாலும் நரகத்துக்குச் சென்றாலும் மனிதன் தன் இயல்பைத் தன்னுடன் எடுத்துச் செல்கிறான். தன் நிழல் எப்படித் தன்னைவிட்டுப் பிரிவதில்லையோ, தன் சுபாவமும் அப்படியே தன்னைவிட்டுப் பிரிவதில்லை. அதிலிருந்து உதிக்கும் கர்மத்தை அவன் செய்தே ஆகவேண்டும். மற்று அதன் வேகத்தை முறையாகக் கையாளுதலே அதை ஒடுக்குதற்கு உற்ற உபாயமாகும். வெள்ளைப் பூண்டின் சாறு வைக்கப்பட்டிருந்த பாத்திரம் எத்தனை தரம் கழுவித் துடைக்கப்பட்ட போதிலும் அது நாற்றத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கும். அஹங்காரமானது வெகுபிடிவாதமுள்ள அக்ஞானம். எவ்வளவுதான் சிரமப்பட்டபோதிலும் அதை முற்றிலும் போக்குவது முடியாத காரியம்.
வினையின் வேகத்தை முறையாகக் கையாளுதல் என்பதன் பொருள் யாது? விடை வருகிறது:
61. அர்ஜுனா, எல்லா உயிர்களுக்கும் ஈசன் உள்ளத்தில் நிற்கிறான். மாயையால் அவன் எல்லா உயிர்களையும் சக்கரத்திலேற்றிச் சுழற்றுகிறான்.கிருஷ்ணனும் அர்ஜுனனும் போர்க்களத்துக்கு வந்த கோலமே இக்கோட்பாட்டை விளக்குகிறது. ரதத்தின் மீது அர்ஜுனன் ஏறியிருந்தான். அந்த ரதம் உடலுக்குச் சமானம்; அவன் ஜீவாத்மாவாகிறான். ரதமும் இயங்கியது. பார்த்தனும் போர் புரிந்தான். இயங்கியதைப் பற்றிய உணர்ச்சி ரதத்துக்கு இல்லை. சண்டை செய்ததைப் பற்றிய உணர்ச்சி அர்ஜுனனுக்கு இருந்தது. நிகழ்ந்தது தன் செயல் என்று எண்ணியிருந்த அப்போர்வீரன் அது உண்மையில் ஈசன் செயல் என்று அறிந்து கொள்ளக் கடமைப்பட்டிருந்தான். கிருஷ்ணன் தேர் ட்டினான்; ஆனால் ஆயுதம் எடுத்துப் போர்புரியவில்லை. அங்ஙனம் எல்லாருடைய ஹிருதய கமலத்திலும் அவன் சாக்ஷியாக வீற்றிருக்கிறான்.அர்ஜுனன் என்பது வெள்ளையானவன் அல்லது தூயவன் என்று பொருள்படுகிறது. தூய மனமுள்ளவன் உண்மையைத் தெரிந்துகொள்ள வல்லவனாகிறான். ஹிருதயத்தில் வீற்றிருக்கின்ற சர்வேசுவரனின் சன்னிதான விசேஷத்தால் மாயை இயங்குகிறது. இயங்குகின்ற மாறை அதன் வசப்பட்டிருக்கிறவர்களையெல்லாம் இயக்குகிறது. சக்கரங்களில் கட்டுண்ட பொம்மைகள் போன்று அவர்கள் அசைகிறார்கள். அசைவைத் தங்கள் சொந்தக் கர்மமென்று அவிவேகிகள் எண்ணிக்கொண்டு அதைச் செய்வேன் என்றும், இதைச் செய்யமாட்டேனென்றும் இச்சா சுதந்தரம் பாராட்டுகிறார்கள். அதனால் மாயையில் அவர்கள் அதிகம் கட்டுண்கின்றனர். ஈசா, நீ ஆட்டுவிக்கும் விதத்தில் நான் ஆடுகிறேன் என்ற மன நிலை வேண்டும். விதவிதமான ஜீவர்களைக் கருவிகளாகக் கொண்டு ஈசன் தன் செயலைச் செய்து கொள்கிறான் என்ற எண்ணத்துடன் கர்மம் செய்தலே அதை முறையாகக் கையாளுவதாகும்.பாம்புக்குப் பல்லில் விஷமிருந்தபோதிலும் அவ்விஷத்தால் அது தீமையை அடைவதில்லை. ஆனால் அது பிறரைக் கடித்தால் அவ்விஷம் கடியுண்டவனுக்கு மரணத்தைத் தரும். இதைப்போல ஈசுவரனிடத்திலும் மாயை உள்ளது. ஆனால் அது அவரைப் பந்தப்படுத்தாது. ஜகத் முழுதையும் அவர் தனக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிறார்.
கடவுள் ஆட்டுவிக்கிறார் என்ற கருத்தில் வரும் பயன் இனி விளக்கப்படுகிறது :
62. அர்ஜுனா, எல்லா வடிவங்களிலும் அவனையே சரணெய்து, அவனருளால் பரம சாந்தியாகிய நித்திய ஸ்தானத்தை எய்துவாய்.எல்லாப் பாங்கிலும் அவனையே தஞ்சமடைதல் ஜீவாத்மாவினது செயற்கரிய செயலாகும். உடலைத் தன்னுடையது என்று கருதுதல், தன் செயலுக்குத் தான் கர்த்தாவென்று நினைத்தல், உலக நடைமுறையில் தனக்குத் தனியந்தஸ்து ஒன்று உண்டு என்று எண்ணுதல் இவையாவும் ஜீவபோதத்தை வளர்க்கின்றன. அது தஞ்சமாகாது. கடலில் அலை இருப்பதுபோன்று ஜீவாத்மாக்கள் பரமாத்மாவில் இருக்கின்றன. அலைக்குச் சொந்தமான நீர் கிடையாது. ஜீவனுக்குச் சொந்தமான சரீரம் கிடையாது. அலைக்கிருக்கின்ற வடிவம் வேளைக்கு ஒன்று. தேகத்துக்கு இருக்கிற வடிவமும் அத்தகையது. அலையின் செயலோ உண்மையில் கடலின் செயல். கடலுக்கு அன்னியமாக அலை இருக்கமுடியாது. ஜீவனுடைய செயல்களெல்லாம் உண்மையில் ஈசனுடைய செயல்கள். ஈசனுக்கு அன்னியமாக ஜீவர்கள் இல்லை. இப்பேருணர்ச்சியில் நிலைபெற்றிருப்பது தஞ்சமாகும்.பாண்டவர், விதுரர், திரௌபதி, குசேலர் முதலாயினோர் கிருஷ்ணனைத் தஞ்சமடைந் திருந்தனர். உடன் பிறந்த சகோதரர்கள் தசரத ராமனைத் தஞ்சமடைந்திருந்தனர். குகன், சுக்ரீவன், விபீஷணன் முதலாயினோர் அவனைத் தஞ்சமடைந்தனர். அங்ஙனம் அடைக்கலம் புகுந்தவர்க்கு மன அமைதி உடனே உண்டாயிற்று. கைகேயி, வாலி, ராவணன் முதலியவர்கள் அடைக்கலம் புகவில்லை; அவர்கள் பெருந்துன்பத்துக்கு ஆளாயினர்.ஈசனுடைய அருள் என்னும் காற்று சதா வீசிக்கொண்டிருக்கிறது. தங்களை முற்றும் ஈசனிடம் ஒப்படைத்தவர்கள் அக்காற்றைப் பயன்படுத்தும் மாலுமிகளுக்குச் சமமானவர்கள். காற்றைப் பயன்படுத்திக் கப்பலைச் செலுத்தும் மாலுமிக்குக் கஷ்டமில்லை. அருளைப் பயன்படுத்தும் அன்பனுக்கு அல்லல் இல்லை. அவன் கர்மம் செய்வதற்கிடையில் கர்ம பந்தம் கலைகிறது. சாந்தியும் முக்தியும் அவனுக்கு வாய்க்கின்றன. ஸ்ரீ ராதை தன் கற்பு நிலையை நிரூபிப்பதற்கு ஆயிரம் துவாரங்கள் உள்ள ஒரு பாத்திரத்தில் ஜலங் கொண்டுவரும்படி கட்டளையிடப்பட்டாள். ஒரு துளி ஜலங்கூடக் கீழே விழாமல் அவள் கொண்டுவந்தவுடன்,அங்கிருந்த வர்கள் எல்லாரும் இவளைப் போல் கற்புடைய ஸ்திரீ ஒருத்தி இதுவரையில் இருந்ததுமில்லை, இனி இருக்கப்போவது மில்லை என்று வெகுவாகச் சிலாகித்தனர். அப்போது ராதை ஏன் என்னை சிலாகிக்கிறீர்கள்? கீர்த்தியெல்லாம் கிருஷ்ணனுடையதே என்று சொல்லுங்கள். நான் கேவலம் அவனுடைய பணிப்பெண் என்றாள்.
63. இங்ஙனம் ரகசியத்திலும் ரகசியமாகிய ஞானத்தை உனக்குரைத்தேன். இதனை முற்றிலும் ஆராய்ச்சி செய்து எப்படி இஷ்டமோ அப்படிச் செய்.விளங்காத ஒன்றை இரகசியம் என்றும் மறைபொருள் என்றும் பகர்கிறோம். இயற்கையின் உட்பொருள் முழுதும் நமக்கு விளங்குகிறதில்லை. அது ரகசியமாய் மறைந்து கிடக்கிறது. இயற்கையைப்பற்றி இக்காலத்தில் நாம் அறிந்துள்ள பல மர்மங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக மறைந்திருந்தன. உதாரணம் ஒன்று எடுத்துக்கொள்வோம். மின் சக்தியை உண்டு பண்ணும் முறை இப்பொழுது நமக்குத் தெரிந்திருக்கிறது. இயற்கையில் இதுகாறும் மறைந்து கிடந்த விசையானது இப்பொழுது வெளிப்படையாயிற்று. அந்த விசையின் தன்மை எத்தகையதென்றும், அதை எப்படி உண்டுபண்ணுவது என்றும், அதை எங்ஙனம் உபயோகப்படுத்தலாம் என்றும் புகட்டுவது சாஸ்திரம். விளங்காததை விளக்குவது சாஸ்திரம். இயற்கையைப் பற்றி அப்படி எண்ணிறந்த சாஸ்திரங்கள் இருக்கின்றன. மானுட வாழ்க்கையைப் பற்றிய சாஸ்திரம் இருக்கிறது. அது பிரம்ம வித்தையென்றும் யோக சாஸ்திரம் என்றும் பெயர் பெற்று உள்ளது. அனுஷ்டான முறையில் சாஸ்திரம் நமக்கு அளிக்கப்படும்பொழுது அது உடன்பாட்டு முறையென்றும் எதிர்மறை முறையென்றும் இரண்டுவித வடிவெடுக்கிறது. இன்னதைச் செய் என்று ஆக்ஞாபிக்கும்பொழுது அது உடன்பாட்டு முறை. இன்னதைச் செய்யாதே என்று ஆக்ஞாபிக்கும் பொழுது அது எதிர்மறை முறை. ஏன் ஒரு விதத்தில் ஒழுகவேண்டும், ஏன் மற்றொரு விதத்தில் ஒழுகலாகாது என்பதற்குத் தக்க காரணங்களையும் அது எடுத்துப் போதிக்கிறது. யுக்தி பூர்வமாகக் புகட்டுவது சாஸ்திரம். குருட்டு நம்பிக்கையை சாஸ்திரம் ஆமோதிப்பதில்லை. குருட்டு நம்பிக்கையை விரைவில் கலைத்துவிடலாம். ஆனால் யுக்திக்கும் அனுபவத்துக்கும் ஒத்திருக்கும் கோட்பாட்டை யாரும் அசைக்க முடியாது.மிக ஆழ்ந்தவைகளான வாழ்க்கைத் தத்துவங்களைக் கருணை கூர்ந்து கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு எடுத்து வழங்கினார். அவர் புகட்டியவை களை வேண்டியவாறு ஆராய்ச்சி செய்வதற்கான இச்சா சுதந்தரத்தையும் அவனுக்கு அவர் அன்புடன் அளித்தார். உண்மையானது எம்மனிதனால் சொல்லப்படுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டதல்ல. உண்மை தனக்குத் தானே சான்று ஆகிறது. உண்மையை நன்றாக அலசி ஆராய்ந்து நீ விரும்பியதைச் செய் என்கிறார் பகவான். உடல் வளர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும், ஆன்ம வளர்ச்சிக்கும் சுதந்தரம் முற்றிலும் அவசியமானது. அடிமைத் தனத்தில் அடக்கி வைக்கப்பட்ட உயிர் ஓங்கி வளராது. புகட்ட வேண்டிய யாவையும் சொல்லியான பிறகு, அவைகளுள் விரும்பியதைச் செய் என்று கிருஷ்ணன் அனுமதி கொடுக்கிறார். சான்றோர் புகட்டும் செந்நெறியின் சிறப்பு இதுவேயாம்.மனிதனுடைய முயற்சிகளெல்லாம் எதில் முற்றுப்பெறுகின்றன என்ற முடிவான உண்மையை இனி மூன்று சுலோகங்களில் பகவான் பகர்கின்றார்
64. மீட்டுமொருமுறை எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய எனது பரம வசனத்தைக் கேள். நீ திடமான நண்பன். ஆதலால் உனக்கு ஹிதத்தைச் சொல்லுகிறேன்.நீருக்குள் மிக ஆழமான இடத்தில் எல்லாரும் மூழ்கிப் பார்க்கமுடியாது. அதில் வல்லமை பெற்றவர்க்கே அது இயலும். இப்பொழுது பகவான் புகட்டுகிற கோட்பாடு மிகவும் ஆழ்ந்தது. ஏனென்றால் அது ஜீவனுக்குச் சிறப்பை அளிக்கவல்லது. சிரேயஸைப் பெறவேண்டும் என்று அர்ஜுனன் ஆரம்பத்தில் விண்ணப்பித்தான். அதைப் பெறுதற்கு உற்ற வழி இப்பொழுது புகட்டப்படுகிறது. அதைக் குறித்து அவர் பகரும் சொல்லானது- பரமம் வசனம்- மேலாம் மொழியா கிறது. மகாவாக்கியம் என்று அதை இயம்பலாம். வேதங்களில் உள்ள மகா வாக்கியங்கள் ஞானிகளால் நவிலப்பட்டவை. இது பரமாத்மாவானவர் தாமே பகர்கின்ற சொல்லாகிறது. ஏற்கனவே இயம்பிய கோட்பாட்டை முடிவுரையில் அவர் சித்தாந்தப் படுத்துகிறார். புறவுலகின் அமைப்புப் பலர்க்கு மறைபொருளாயிருப்பது போன்று மனத்தகத்து உள்ள தெய்வீக மாண்பும் மறைபொருளாயிருக்கிறது. எல்லார் உள்ளத்திலும் உறைந்திருக்கும் நல்ல உறவு ஆகின்றான் இறைவன். உயிர்களை உய்விப்பதற்கென்றே அவனுடைய அருள் இயங்குகிறது. இயற்கையில் நிகழ்கின்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவில் அந்த ஒரு காரியத்தை நிறைவேற்றி வைக்கின்றன. ஒன்றுக்கும் உதவாத ஜீவனைத் தனக்கு உகந்தவனாக்கிப் பிறகு அவனைத் தெய்வம் தன்மயமாக்குகிறது. இயற்கையென்னும் பெரிய தொழிற்சாலையில் இந்த அரும்பணியானது ஓயாது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் காலில் மிதியுண்டு ஒன்றுக்கும் உதவாத செத்தையாகப் போகக்கூடிய நாணல் ஒன்றைக் கண்ணன் கையில் எடுத்துப் புல்லாங்குழலாக மாற்றுகிறான். பிறகு அவன் அதில் உண்டுபண்ணும் கானமோ மண்ணுலகத்தவரை விண்ணுலகுக்குக் கொண்டுபோக வல்லது. ஜடப்பொருளில் அவன் செய்யும் ஜாலம் அத்தகையது. பிறகு சேதன வஸ்துவாகிய ஜீவனைத் தனக்குரியவன் என்றே அவன் ஆட்கொள்கிறான். இனி, இதிலும் ஆழ்ந்ததொரு கருத்து இயற்கையின்கண் உளது. அது அடுத்த சுலோகத்தில் வருகிறது.உண்மையான பக்தன் ஒருவன் ஈசுவரனை எவ்விதம் காண்கிறான்? பிருந்தாவனத் திலுள்ள கோபஸ்திரீகள் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை ஜகந்நாதனாகக் காணாமல் அவர்களுடைய பிரிய கோபிநாதனாகவே கண்டதைப்போல, பக்தனும் ஈசுவரனைத் தனது நெருங்கிய பிரிய பந்துவாகவே காண்கிறான்.
பகவான் புகட்டும் நலம்தான் யாது? விடை வருகிறது :
65. உன் மனதை எனக்காக்குக. என் தொண்டனாகுக. எனக்கென வேள்விசெய்க. என்னையே வணங்குக. என்னையெய்துவாய், உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன், நீ எனக்கினியை.சத்தியம் சொல்லுகிறேன் என்று சத்தியப்பொருளாகிய பகவான் பகர்கிறார். சூரியனிடத்திருந்து கிளம்பி வருவதெல்லாம் அக்கினி சொரூபம். வெப்பத்தைத் தவிர வேறு ஒன்றும் ஆங்கில்லை. பரமாத்மா உடல் தாங்கி வந்து உரைப்பது சத்தியமே. அதைப் பின்பற்றுகின்ற சான்றோரது ஜீவிதம் அதை சத்தியமென்றே நிரூபிக்கிறது. நீ எனக்குப் பிரியமானவன் என்பது மகாவாக்கியம். ஜீவர்கள் எல்லாம் இறைவனுக்குப் பிரியமானவர்களே. அந்த அன்பை விளக்குதற்கான பரிபாகம் வந்தமையும்போது தனிச் சிறப்புடன் அப்பேரிணக்கம் பகரப்படுகிறது. துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் ஆகிய மூன்று நிலைகளும் பிரியத்தைப் படிப்படியாய் உறுதிப்படுத்திக்கொண்டு போகின்றன. அன்பிற்கும் உண்டோ பிரித்துவைத்து அடைக்கும் தாழ்? நானே நீ, நீயே நான் என்பதைவிட உயர்ந்ததொரு நிலையில்லை. இது வெறும் பேச்சில் நிரூபிக்கப்படுவதன்று ; சுவானுபவத்தில் அடையப்பெறுவதாம். வண்டியில் ஏறி ஓர் ஊருக்குப் போகிறோம். வண்டியில் செல்லுவது நெறி. ஊரை அடைவது குறி. கடவுள் விஷயத்தில் நெறியும் குறியும் ஒன்றே. அவனைத் துணையாகக்கொண்டு அவனை அடைகிறோம். அவன் அருளால் அவன்தாள் வணங்குகிறோம். பிறகு அவன் அருளால் அவனை அடைகிறோம். அவன் யாண்டும் துணைபுரிந்தும், அவன் துணையை ஏற்க நம்மில் பலர் மறுக்கிறோம். இதற்கெல்லாம் இடையில் இடைஞ்சலாய் நிற்பது நமது பண்படாத மனது. அந்த மனது பல ஜன்மாந்தரங்களில் வேறு பல காரியங்களுக்கு உதவிவந்தது. விழலுக்கு நீர் இறைத்தவாறு அது அநித்தியப் பொருள்களை நாடிநின்றது. ஆனால் அது கடவுளை அடைதற்கே கருவியாக அமைவது அவசியமாகிறது. உள்ளம் அவனுக்கே இடமாக வைக்கப்படவேண்டும். மனிதன் செய்யவேண்டிய செயல் அதுவேயாம். அவன் மீது பக்தி பண்ணுமளவு மனது மிக உயர்ந்ததாகிறது. பக்தனிடத்து இறைவனே பித்துப்பிடித்தவன் ஆகிறான். பக்தன் செய்கிற செயலெல்லாம் இறைவனது ஆராதனையாகிறது. கடவுள் உணர்ச்சியிலேயே அவன் ஊறியிருப்பதால் செயல்கள் அனைத்தின் வாயிலாக இறைவனுக்கு அவன் இடையறா நமஸ்காரம் செய்கிறான். கடலை அணுகிய நதியானது கடலுக்குள் நுழைந்தே ஆகவேண்டும். அங்ஙனம் இத்தகைய பான்மையைப் பெற்றுள்ள பக்தன் பரம்பொருளை அடைந்தே ஆகவேண்டும். பரமாத்மாவே அதைக் குறித்து சத்தியம் செய்கிறார். உறுதிமொழி கூறுகிறார்.ஒன்பதாவது அத்தியாயம் முப்பத்தொன்றாவது சுலோகத்தில் பக்தன் அழிந்துபட்டுப் போவதில்லை என்பதைப் பிரகடனம் பண்ணும்படி அர்ஜுனனைத் தூண்டினார். இறுதியில் அப் பேருரையைப் பகர பகவான் தாமே முன் வந்துள்ளார்.தண்ணீரில் மூழ்கிவிட்டவன் மூச்சு விடுவதற்கு மிகவும் தவிப்பதைப் போல, ஈசுவரனைக் காண்பதற்கு முன்னால் ஒருவனுடைய மனம் அதற்காக மிகவும் ஆசைகொள்ள வேண்டும்.
பகவான் கூறும் அந்த உறுதிமொழிதான் யாது? விடை வருகிறது :
66. தன் முயற்சி போதவில்லை அல்லது பலிதமாக வில்லை; ஆகையால் தெய்வத்தினிடம் தஞ்சமடைந்து அவர் துணையையும் கொஞ்சம் தேடிக்கொள்ளலாம் என்பதல்ல. சிற்றோடை பெரிய நதியில் கலந்து பிறகு சமுத்திரத்தில் சங்கமமாவது போன்றது சரணாகதி. ஜீவனுடைய இச்சா சுதந்தரமெல்லாம் ஈசுவர சங்கற்பத்தில் சேர்ந்துவிடுகிறது. தனக்கெனத் தனிச் செயல் ஒன்றுமில்லை. ஈசன் செயல் கடலின் செயல் போன்றது. ஜீவன் செயல் அலையின் செயல் போன்றது. அலையானது கடலுக்கு அன்னியமானதல்ல. ஜீவன் செயலெல்லாம் உண்மையில் ஈசுவரன் செயல். கர்மயோகம் ஜீவனை முடிந்த இந்நிலைக்குக் கொண்டுவந்து சேர்க்கிறது.பக்தன் எப்பொழுதும் தன் தெய்வத்தைச் சார்ந்திருக்கிறான். தனக்கு வரும் நன்மை கேடுகளெல்லாம் கடவுளது ஆணை. ஆகையால் ஒரு செயலை நன்கு என்றும் மற்றொரு செயலைக் கேடு என்றும் பக்தன் பொருள்படுத்துவதில்லை. தர்மம் அதர்மம் ஆகிய இரண்டும் ஈசன் செயல் என்ற புனித நிலையை அடைவனவாகின்றன.
அன்றே என்தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமுங்குன்றே அனையாய் என்னை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ
இன்றோர் இடையூறெனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானேநன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே!பக்தர்கள் எல்லாரும் அடைக்கலம் என்னும் பெருநிலையை அடைந்திருக்கிறார்கள். இறைவனது பேரன்பில் அவர்கள் தங்களை மறந்துவிட்டார்கள். ஞாபகக் குறைவில் ஒருவன் நடுவீதியில் நடப்பானாகில் அவன் ஓடும் வண்டிகளால் ஆபத்துக்கு உள்ளாவான். பக்தனோ அன்பில் தன்னை மறந்தவன் என்றாலும் ஒரு சிறு செயலிலும் சொப்பனத்திலும் அவன் பிழைபோவதில்லை. ஒழுங்குப்பாடே வடிவெடுத்ததாக அவனது வாழ்க்கை நடை பெறுகிறது. தாயின் மார்பில் அணைக்கப்பெற்ற சேய்போன்று அவன் சரணாகதியில் இன்பம் துய்க்கிறான்.இனி ஞானியின் ஞானோதயமும் சரணாகதி எனப்படுகிறது. கண்ணாடியில் நல்லது கெட்டது ஆகிய இரண்டின் பிம்பங்கள் தோன்றலாம். எனினும் கண்ணாடியின் சொரூபம் மாறுவதில்லை. தர்மம் அதர்மம் என்று சொல்லப்படும் கர்மங்களெல்லாம் பிரகிருதியினுடையவைகள். அந்தராத்மாவாயிருக்கும் சித் சொரூபம் என்னும் பரவெளியை அவைகள் பாதிக்கமாட்டா. சுத்த சைதன்யமாகிய தன்னில் தானாயிருப்பவன் உபாதிகளையெல்லாம் தியஜித்து பரவெளியில் ஒன்றாய்விடுகிறான். பேரறிவு அல்லது பேருணர்வு ஒன்றே பாக்கியிருக்கிறது. உள்ளும் புறமும் என்கிற பாகுபாடுகள் அப்பரவெளிக்கில்லை. ஞானியடையும் சரணாகதி இதுவே.
யோகி, பக்தன், ஞானி ஆகிய மூவரும் அடையும் சரணாகதி ஒன்றேயாம். அது மூன்று விதமாக விளக்கப்படுகிறது. சத் சொரூபத்தில் யோகி லயமாகிறான்; சித் சொரூபத்தில் ஞானி லயமாகிறான்; ஆனந்த சொரூபத்தில் பக்தன் லயமாகிறான்.
சிறு குழந்தையொன்று தாயின் மடியில் உட்கார்ந்திருக்கிறது. அதனிடத்து மற்றவர்கள் காட்டும் அன்பை அங்கீகரிக்கும் பரிசு அதற்கு வந்திருக்கிறது. ஆனால் அதனுடைய மனது இன்னும் விகாரப்படவில்லை. எந்த நாட்டுக்கு உரிய குழந்தை எந்த மொழி பேசும் குழந்தை, எத்தகைய பழக்க வழக்கங்களையுடையது ஆகிய பேதங்களையும் பாகுபாடுகளையும் அது இன்னும் அறியவில்லை. பூர்வ ஜன்மத்திலிருந்து அது கொண்டுவந்திருக்கும் இயல்புகளும் இன்னும் அவ்யக்தமாக மறைந்து கிடக்கின்றன. அதாவது அதன் மனத்தகத்து இருக்கும் மனோதர்மங்களெல்லாம் இன்னும் வடிவெடுக்கவில்லை. இந்த நிலையில் குழந்தையானது ஞானிக்கு ஒப்பானது. அதன்பால் உள்ள அபேத நிலை உயிரனைத்தையும் தனக்குரிய தாக்குகிறது. குழந்தையின் தூய அன்புக்கு வசப்படாத உயிர் இல்லை.தான் அடைந்துள்ள மன பரிபாகத்தால் ஞானி குழந்தை போன்று ஆகிறான். அந்தக்கரண மடங்கத் துறப்பதுவே எந்தத் துறவினும் நன்று என்பது கோட்பாடு. ஞானியாவதற்கு முன்பு விதவிதமான இயல்புகள் மனதைப் பற்றிப்பிடித்துக்கொண்டிருக்கின்றன. அவரவர் ஸ்வதர்மம் என்பது அதுவே. ஸ்வதர்மத்தைக் கையாளுதலே ஸ்வதர்மத்தை விட்டொழிப்பதற்கு உற்ற உபாயம். நோய் வந்தால் அது தன் வேலையைச் செய்ய இடங் கொடுப்பதே அதை ஒழிப்பதற்கு உபாயமாகிறது. நோயை அடக்கினால் வேறு ஒரு நோயாக அது வடிவெடுக்கும். வந்துள்ள நோய் உடலில் வேலை செய்தால் அந்நோய் ஓய்ந்து அறவே அகன்றுபோம். நாம் எடுத்துக்கொண்ட ஸ்வதர்மம் அத்தகையது. ஸ்வதர்மத்தைக் கையாண்டு அதன் வேகத்தை ஒழித்து விடுவது நம் குறிக்கோள். மழைபெய்து மேகம் ஒழிந்துபோனால் எஞ்சியிருப்பது வெட்டவெளி. பற்றற்று தர்மம் செய்து தர்மத்தை ஒழித்துவிட்டால் எஞ்சியிருப்பது சுத்த சைதன்யமாகிய ஆத்ம சொரூபம்.தனக்கு அன்னியமானதெல்லாம் தன்னை வந்து சாரும் பொழுது அது அழுக்கு அல்லது பாபம் ஆகிறது. ஜீவபோதம் பெற்றிருப்பது பாபம்; அது தனது நிஜ சொரூபமல்ல. கடலுக்குள் வந்த நதியின் நதித்தன்மையை நீக்கிவிட்டுக் கடலின் தன்மையைப் பெறும்படி அது செய்துவைக்கிறது. பரமாத்மாவை சரணடைந்த ஜீவனிடத்திருந்து ஜீவபோதம் என்ற பாபத்தை அகற்றிவிட்டு பரபோதத்தை அது வழங்குகிறது. ஜீவபோதத்திலிருந்து விடுதலை யடைவதே மோக்ஷமாம். பரமாத்மா அமிர்த சொரூபம்; அதனுள் அழிவு என்பதில்லை. அது பரமானந்தம். ஆக, அதனுள் துன்பமில்லை. அது பரஞானச்சுடர் ; ஆக, அதனுள் அக்ஞான இருள் இல்லை. சத்தியம், ஞானம், ஆனந்தம் பிரம்மம். அந்தக்கரணம் அகன்றபின் ஜீவன் பிரம்மமே.கோழைத்தனத்தை அகற்று ; ஆண்மையுடன் எழுந்திரு; உன் கடமையைச் செய் என்ற கருத்துடன் கீதா ஆசாரியன் கீதையைத் துவக்கினான். உன் கடமைகளை யெல்லாம் நீத்து விட்டு எனது அகண்ட சத் சித் ஆனந்த சொரூபத்தில் திளைத்திருப்பாயாக என்று கீதாசாரியன் முடிவு கூறினான். இடையில் பகர்ந்துள்ள யாவும் கர்மத்தைக் கடப்பதற்கு உற்ற உபாயங்களாம். அவனைச் சரணடைந்து, அவன் அருளை நாடி நிற்பவர்க்கு அவனருளால் அவனுடைய போதனையும் நன்கு விளங்கும். பிறகு ஜீவபோதத்தைக் கலைத்துவிட்டு அவனுடைய அகண்ட ஸத் சித் ஆனந்த சொரூபத்தில் இரண்டறக் கலத்தலும் எளிதாகின்றது. பரிபூரண சரணாகதியின் தன்மை எப்படிப்பட்டது? களைப்படைந்தவன், அன்றைய வேலையை முடித்த பிறகு தலையணையின் மீது சாய்ந்துகொண்டு, நிம்மதியாய்ப் புகைச் சுருட்டுப் பிடித்துக் கொண்டிருக்கும் ஆனந்த நிலையைப் போன்றது அது. துயரமும் துன்பமும் இல்லாத நிலையாகும் அது.
இத்துடன் கீதா உபதேசம் முற்றுப் பெறுகிறது. இந்தக் கீதா சாஸ்திரத்தைப் படித்தும் அனுஷ்டித்தும் பயன் அடைய வல்ல அதிகாரி யார் என்னும் கேள்வி எழுகிறது. அதற்கு விடை வருகிறது :
67. இதை எப்போதும் தவமிலாதோனுக்கும், பக்தியில்லாதோனுக்கும், கேட்க விரும்பாதோனுக்கும் என்பால் பொறாமையுடையோனுக்கும் சொல்லாதே.வாழ்க்கைத் தத்துவங்கள் அனைத்தும் அடங்கப் பெற்றது பகவத்கீதை. அதை முறையாக எல்லார்க்கும் எடுத்து வழங்க வேண்டுமென்பதே பகவானது கருத்து. இந்த அறிவு பரவுமளவு வாழ்க்கை திருந்தியமையும். ஆனால் இதை யாருக்குப் புகட்டலாகாது என்கிற எச்சரிக்கையை பகவான் பண்ணுகிறார். கண்ணில்லாதவர்க்குச் சித்திரம் பயன்படாதது போன்று தவம் அல்லது நெறியான வாழ்க்கையில்லாதவர்களுக்குக் கீதோபதேசம் பெரும் பயன் அளிக்காது. வெறும் தவம் மட்டும் போதாது. அது பக்தியோடு கூடியதாயிருக்க வேண்டும். பக்தியே தவத்தைத் தூயதாக்குகிறது. பிறகு பக்தியின் அறிகுறியாக சேவை வந்தமைகிறது. ஈசனிடத்தும் உயிர்களிடத்தும் விருப்பமிருக்குமளவே தொண்டுபுரிய ஒருவன் துணிகிறான். தோன்றாத் துணையாயுள்ள ஈசுவர பக்தி பண்ணுகிறவர்களுள் தோற்றத்தில் வந்துள்ள கிருஷ்ணனைச் சாமான்ய மனிதன் என்று இகழ்பவர் உண்டு. பலவிதச் செருக்கும் தேகாத்ம புத்தியும் உடையவர்கள் அக்காலத்தில் இருந்ததுபோன்று எக்காலத்திலும் இருக்கிறார்கள். அப்படி அகங்கரிக்கிறவர்கள் கீதையின் உட்கருத்தை அறிந்துகொள்ளமாட்டார்கள். அத்தகையவர்களுக்கு அதைப் புகட்டுவது பயன்படாது. அசுச்ரூஷவே என்பது கேட்க விருப்பமில்லாதவனுக்கு என்றும் பொருள்படுகிறது. தன்னைப்பற்றிய பெரிதாக நினைத்துக்கொண்டோ அல்லது வேறு எக்காரணத்தை முன்னிட்டோ இதை ஊக்கத்தோடு கேட்க மனமில்லாதவனுக்கு இதை உபதேசிக்கலாகாது. மழைத்தண்ணீர் மேட்டுநிலத்தில் தங்கிநிற்பதில்லை. பள்ளமான இடத்துக்கு ஓடிவந்துவிடுகிறது. அதுபோல ஈசுவர கிருபையானது தற்பெருமையும், கர்வமுமுள்ளவர்களுடைய உள்ளத்தில் தங்கிநிற்பதில்லை. பணிவுள்ளவர்களின் உள்ளத்தில்தான் அது தங்கிநிற்கும்.
ஈசுவர கைங்கரியமாக கீதா பிரசாரம் செய்பவன் அடையும் நன்மை யாது? விடை வருகிறது:
68இந்தப் பரம ரகசியத்தை என் பக்தர்களிடையே சொல்லுவோன், என்னிடத்தே பரம பக்தி செலுத்தி என்னையே எய்துவான். ஐயமில்லை.மனிதன் பிறர்க்கு எதை எடுத்து மனமுவந்து வழங்குகிறானோ அது அவனுக்குச் சொந்தமாகிறது. தனக்கென்று எதைப் பிடித்து வைக்கிறானோ அது சொந்தமாவதில்லை. உடலுக்கு இன்றியமையாத ஒன்றை முதல் சான்றாக எடுத்துக்கொள்வோம். உணவு இல்லாது யாரும் உயிர்வாழ முடியாது. உணவைத் தனக்கென்று தேடிவைத்துக் கொள்ளுதல் உயிர்களிடத்து அமைந்துள்ள இயல்பு. ஒருவன் பிறர்க்கு உணவு வழங்கிப் பிறகு தான் உண்கிறான். மற்றொருவன் பிறரைப்பற்றி ஒன்றும் நினையாது தனக்கென்றே தேடிவைத்து உண்கிறான். இவ் இருவருள் பிறரைப்பற்றி நினைப்பவன் அடைகிற உடல் நலனை மற்றவன் அடையமாட்டான். இதை ஒவ்வொருவனும் தன் சொந்த அனுபவத்தில் காணலாம்.
அடுத்தபடியாக அறிவுக்கு உரியது கல்வி. கற்பவர்களுள் நன்கு கற்பவன் யார் என்ற கேள்வி எழுகிறது. தனக்கு என்று கற்பவனைவிடப் பிறர்க்குப் பயன்படுமாறு புகட்டுதற்குக் கற்பவன் நன்கு கற்கிறான். பிறர்க்குப் புகட்டும்பொழுதெல்லாம் தனது அறிவு தெளிவடைகிறது. பிறர்க்கு ஒரு விஷயத்தை விளங்கச் செய்யுமளவு தனக்கே அது நன்கு விளங்குகிறது. கிணற்றில் நீர் இறைக்குமளவு நீர் ஊறுவதுபோன்று கல்வியைப் புகட்டுமளவு ஒருவனிடத்துக் கல்வி வளர்கிறது.
பகவத் விஷயங்களைப் பக்தர்களிடத்து பக்தி விசுவாசத்தோடு எடுத்தோதுவதே பகவத் சேவையாகிறது. தன்னை ஓர் ஆசாரியன் என்று அத்தகையவன் அகங்கரிப்பதில்லை. அகங்காரம் கொள்கிறவனுக்கு பக்தி பெருகுவதில்லை. பகவத் மகிமையானது நல்லார்க்கிடையில் பேசப்பெறுகிறது என்று இன்புறுபவனுக்கு அன்பும் அறிவும் வளர்கின்றன. அத்தகைய பேச்சாளன் பணிவுடன் செய்யும் பகவத் கைங்கரியமாக அது கருதப்படுகிறது. கடவுளை அடைதலே அதில் விளையும் பயனாகும்.பகவான், பாகவதம் (சாஸ்திரங்கள்), பக்தர்கள் இவையாவும் ஒன்றேயாம்.சாஸ்திரங்களின் உட்கருத்தை நல்லாரிடம் பரப்புபவனைக் கடவுள் எப்படிப் பொள்படுத்துகிறார்? விடை வருகிறது:
69. மானிடருள்ளே அவனைக் காட்டிலும் எனக்கினிமை செய்வோன் வேறில்லை. உலகத்தில் அவனைக் காட்டிலும் எனக்கு உகந்தவன் வேறெவனுமாகான்.எல்லாச் செயல்களும் இறைவனுடைய செயல்களே. இயற்கை விளக்குவதெல்லாம் இறைவனுடைய மகிமையையேயாம். அவ்விளக்கங்கள் அனைத்திலும் பகவத் கீதையின் விளக்கம் தனிப்பெருமை பெற்றுள்ளது. இயற்கையின் சிறப்பை அது விளக்குகிறது. வாழ்க்கைத் தத்துவத்தை அது விவரித்துச் சொல்லுகிறது. அனைத்துக்கம் மூலப்பொருள் எது என்பதை அது இயம்புகிறது. பரவித்தை அபரவித்தை ஆகிய இரண்டும் கீதையில் அடங்கியிருக்கின்றன. அதாவது கடவுளை அடைதற்கான வழியும் இவ்வுலக வாழ்க்கையை நன்கு நடாத்துதற்கான வழியும் கீதையினால் புகட்டப்படுகின்றன. அதன் போதனையைக் கேட்டு அதன்படி நடப்பவன் விரைவில் நல்லான் ஆவது திண்ணம். ஆகவே தக்கார்க்கிடையிலே கீதா தத்துவத்தைப் புகட்டுதற்கொப்பான செயல் வேறு எதுவுமில்லை. அப்படிப் புகட்டுபவனைப் போன்று கடவுளுக்குச் சொந்தமானவனும் வேறு யாருமில்லை. கடவுளின் மகிமை அவன் மூலம் நன்கு வெளியாவதே அதற்குக் காரணமாகிறது.வீட்டுக் கூரையின் மேலிருந்து விழும் மழை ஜலம் புலித்தலை போன்ற குழாயின் மூலமாகக் கீழே தரையில் விழும்போது, பார்வைக்குப் புலித்தலையினின்றும் விழுவதாகத் தோன்றினாலும், வாஸ்தவத்தில் அது ஆகாயத்திலிருந்து விழுகிறது. அதுபோல, தெய்விகம் வாய்ந்த மனிதர்கள் கூறும் உபதேச மொழிகள் பார்வைக்குக் கேவலம் மனிதர்களிடமிருந்து வருவனவாகத் தோன்றினாலும், வாஸ்தவத்தில் ஈசுவர ஸன்னிதியினின்றே வருகின்றன.
பிறர்க்கு எடுத்துப் புகட்ட இயலாதவர்க்கும் கீதையின்பால் ஒரு கடமையுண்டு. அது யாதெனின் விடை வருகிறது :
70. நம்முடைய இந்தத் தர்மமயமான சம்பாஷணையை எவன் படிப்பானோ, அவன் செய்யும் அந்த ஞான யக்ஞத்தால் நான் திருப்தி பெறுவேன். இஃதென் கொள்கை.கேள்வியால் கீதையை அறிந்துகொள்வது போன்று சொந்த ஆராய்ச்சியாலும் கீதையை அறிய மனிதன் கடமைப்பட்டிருக்கிறான். கீதையை ஓதி அறிவது பகவத் விஷயத்தை அறிவதாகிறது. பகவத் விஷயத்தை நன்கு அறிந்தவனே பகவானை வழுத்த வல்லவனாகிறான். உண்மையை அறிந்து அதற்கேற்ற பிரகாரம் வாழுதல் சிறந்த பிரசாரமாகிறது. வாழ்க்கையைப்பற்றிய மேலாம் தத்துவத்தை உபதேசிப்பவன் ஒருவன் இருக்கிறான். அக்கோட்பாட் டின்படி வாழ்பவன் மற்றொருவன் இருக்கிறான். இவ்விருவருள் நல்வாழ்வு வாழ்பவனே நல்ல பிரசாரம் செய்கிறான். நல்ல பேச்சைவிடச் சிறந்தது நல்ல பழக்கம். பேசுபவர் ஏராளமாயிருக்கின்றனர்; நல்வாழ்வு வாழ்பவர் மிகச் சிலரே. கீதையை ஓதும் அவர்களது நல்வாழ்வு மற்றவர்களை நல்வழியில் தூண்டுகிறது. ஆக, அது ஞான யக்ஞ ஆராதனை என்னும் பெயர் பெறுகிறது.தனக்குத் தானே கற்றுக்கொள்ள ஒரு மனிதனுக்கு இயலவில்லை. அப்பொழுது அவன் என் செய்வது என்ற கேள்வி எழுகிறது. அதற்கு விடை வருகிறது :
71. நம்புதல் கொண்டு, பொறாமை போக்கி இதனைக் கேட்பது மட்டுமே செய்வானெனினும், அவனும் விடுதலையடைவான், அப்பால் புண்ணியச் செயலினர் நண்ணு நல்லுலகங்களெய்துவான்.உணவை அலட்சியப்படுத்துபவன் தனது உடல் வாழ்வை அலட்சியப்படுத்துகிறான். உணவுப் பொருளின் தத்தவத்தை அறிந்து ஒருவன் உணவு உண்கிறான். மற்றொருவன் அதன் தத்துவம் தெரியாது விருப்புடன் அதைப் புசிக்கிறான். அறிந்தவன் அறியாதவன் ஆகிய இருவரும் உணவினின்று பெறும் நன்மை ஒன்றேயாம். அதே விதத்தில் கீதா சாஸ்திரத்தைச் சிரத்தையோடு கேட்டுத் தெரிந்துகொள்பவன் எல்லா நன்மை களையும் அடைகிறான். பிறர்க்கு எடுத்துப் புகட்டுவதால் அது ஒருவன் மனிதன் நன்கு பதிகிறது. பக்தி விசுவாசத்துடன் கேட்பதால் இன்னொருவன் மனதில் அது பதிகிறது. இருவரும் கீதா தத்துவத்தை அறிந்துகொண்டவர் ஆகின்றனர். மனதுக்கு ஊட்டும் நல்லெண்ணங்களுக்கு சம்ஸ்காரங்கள் என்று பெயர். பகவத் விஷயங்களைக் கேட்பது சம்ஸ்காரங்களுள் சிறந்த சம்ஸ்காரமாகிறது. பக்தி சிரத்தையுடன் கேட்பவன் கீழ்மையினின்று விடுதலையடைந்து முன்னேற்றமடைவது உறுதி.
மாணாக்கனுக்கு எல்லாம் பிடிபட்டு விட்டதாவென்று ஓர்வது ஆசிரியரின் இயல்பு. அக்கோட்பாட்டுக்கு இணங்க பகவான் இப்பொழுது கேட்பதாவது:
72. பார்த்தா, சித்தத்தை ஏகாந்தமாக்கி இதை நீ கேட்டு வந்தனையா? தனஞ்ஜயா, உன் அஞ்ஞான மயக்கம் அழிந்ததா?
ஞானோபதேசம் புகட்டுபவர் புகட்டப் பெறுபவனிடத்து எதை எதிர்பார்க்கிறார் என்பது ஈண்டு விளங்குகிறது. ஒருமை மனது உண்மையைத் தெரிந்துகொள்ளுதற்கு முற்றிலும் அவசியமானது. எவ்வளவு தான் புகட்டினாலும் சிதறடைந்த மனது போதனையின் உட்பொருளைத் தெரிந்துகொள்ளாது. கொஞ்சம் எடுத்துப் புகட்டினாலும் குவிந்த மனது புகட்டப்பெறும் கோட்பாட்டை உள்ளபடி வாங்கிக்கொள்கிறது. புகட்டப்பெறுபவன் அத்தகைய நலன் அடையவேண்டும் என்பதே புகட்டுபவரது எண்ணம்.குவிந்த மனது ஞானத்துக்கு உரியதாகிறது. சூரியகிரணங்கள் குவிந்து வருமளவு அவை பேரொளி பெறுகின்றன. ஒளிப்பிழம்பு மற்றப் பொருள்களையும் விளக்க வல்லது; தன்னையும் அது சர்வகாலமும் விளக்கிக்கொண்டி ருக்கிறது. அங்ஙனம் குவிந்த மனது ÷க்ஷத்ரம் ÷க்ஷத்ரக்ஞனாகிய பொருள்களை உள்ளபடி தெரிந்துகொள்கிறது. ஞான வெளிச்சமும் அக்ஞான இருளும் ஒன்று சேர்ந்து இருக்கமாட்டா. ஞானவெளிச்சத்தில் பொருள் உள்ளபடி தென்படுகிறது. அக்ஞான இருளில் அதே பொருள் வெவ்வேறு வடிவெடுத்துத் தென்படுகிறது. இருளில் தென்பட்ட ஒரு வடிவத்தைத் திருடன் போலீஸ்காரன் என்று நினைத்தான். அதே வடிவத்தைப் போலீஸ்காரன் திருடன் என்று எண்ணினான். அச்சம் கொண்ட ஒருவன் அவ்வடிவத்தைப் பிசாசு என்று பொருள்படுத்தினான். வெளிச்சத்தில் அதை ஏற்கனவே பார்த்திருந்த ஒரு விவேகி அத்தகைய மயக்கம் ஒன்றும் கொள்ளவில்லை. அதை ஒரு மரக்கட்டை என்று உள்ளபடி ஓர்ந்தான். ஞானோதயம் பிறந்திருக்குமிடத்து அக்ஞான ஸம்மோஹம் தானே அகன்றுபோகிறது. அத்தகைய தெளிந்த நிலை அர்ஜுனனுக்கு வந்துவிட்டதாவென்று பகவான் வினவுகிறார்.நல்லாசிரியரை அடையும் தலைமாணாக்கன் அடையப்பெறும் தகைமையானது அர்ஜுனனுடைய விடையிலிருந்து வெளியாகிறது :
அர்ஜுந உவாச
73. அர்ஜுனன் சொல்லுகிறான்: மயக்க மழிந்தது நின்னருளாலே, அச்சுதா, நான் நினைவு அடைந்தேன்; ஐயம் விலகி நிற்கிறேன்; நீ செய்யச் சொல்வது செய்வேன்.போர் புரியமாட்டேன் என்று சொல்லித் தேர்த் தட்டின் மீது அர்ஜுனன் சும்மா இருந்துவிட்டான். அப்படிச் சும்மா இருந்தவன் உபதேசம் கேட்ட பிறகு ஒரு சிறந்த செயலைச் செய்தான். மிச்சமின்றித் தன்னை மாதவனிடம் ஒப்படைக்கலாயினான். விறகுக்கட்டையானது பச்சையாயிருந்தாலும் உலர்ந்திருந்தாலும் தன்னைத் தீயினிடம் ஒப்படைத்தால் அது தானே அக்கினி சொரூபத்தை யடைகிறது. அங்ஙனம் அர்ஜுனன் கிருஷ்ணனுக்கு சிஷ்யன் ஆனான். பிரபத்தியும் பண்ணலானான். அதாவது மேலும் நிகழ்வது எதுவானாலும் தான் கண்ணனிடமிருந்து பின் வாங்குவதில்லை; அதைப்பற்றி நினைப்பதும் இல்லையென்று முடிவு கட்டினான். தீயில் குதிக்கின்ற விட்டில் பூச்சி அதன் விளைவைப்பற்றி நினைப்பதில்லை. பகவானிடம் பிரபத்தி பண்ணுபவன் மனநிலை அத்தகையது. செயற்கரிய அச்செயலை தனஞ்ஜயன் செய் தான்.அத்தகையவனுக்கு கீதோபதேசம் நிகழ்ந்தது. அது நல்லார் அனைவருக்கும் நலம் தரும் அருள் விருந்து. எக்காலத்துக்கும் உதவுகிற இன்னமுது என்று அதை இயம்பவேண்டும். பெரு வாழ்வுக்கு அதுவே உற்றதுணை. பிறவிப்பிணியைப் போக்கவல்ல அருமருந்து அது. ஆனால் உலகில் ஒருவர்க்காக ஆயத்தப்படுத்தும் அரிய பொருள் ஒன்று வேறு யாருக்கோ உதவுவதாக முடி ந்துவிடுவதுண்டு. ஓர் இடத்தில் மேகம் கூடி மற்றோர் இடத்தில் போய் அது பொழிவது போன்று பல சம்பவங்கள் நிகழ்ந்து போவதைக் காண்கிறோம். கீதா சாஸ்திரம் அப்படிப் போய்விடவில்லை. ஒருவன் பொருட்டு உதித்த அந்த அருள் வெள்ளம் உலகனைத்துக்கும் யாண்டும் அருட்பேறு ஆயிற்று. யாருக்காக அந்த ஆரமுது உதயமாயிற்றோ அவன் அதை வாய்மடுத்து உண்டு பெரும் பேறு பெறலானான். அதன் விளைவை இங்குக் காண்கிறோம். இதுவரையில் அக்ஞானத்திலிருந்த அர்ஜுனன் பெரியதொரு வாக்குமூலம் பண்ணுகிறான். அவன் பெற்றபேறு எது என்பதை அந்த வாக்குமூலமே நிரூபிக்கிறது. அவன் வாயினின்று வந்த ஒவ்வொரு சொல்லிலும் பொருள் ஏராளமாகப் புதைந்து கிடக்கிறது :அச்யுதா என்று தன்னை ஆட்கொண்ட வனை அவன் அழைக்கிறான். அச்யுதன் என்பது பெருநிலையினின்று பிறழாதவன் எனப் பொருள்படுகிறது. தீயில் குதித்த வீட்டில் பூச்சி தீயின் செயலுக்கு இரையாகிறது. அச்யுதனிடம் அடைக்கலம் புகுபவன் தானும் பிறவி என்னம் படுகுழியில் வீழாத பெருநிலையடைவனன்றோ! அர்ஜுனன் பெற்ற பேறு அதுவே.மோஹ: நஷ்ட :- மோகம் அழிந்து ஒழிந்தது, அல்லது மயக்கம் போய்விட்டது என்பது முதல் வாக்குமூலம். மயக்கம் வரும்பொழுது நடுப்பகலில் விண்ணில் நக்ஷத்திரம் தென்படும். வாமனன் போன்ற சிறிய ஆள் ஈரடியாலே மூவுலகளக்கும் பெரிய ஆள்போன்று அவனுக்குத் தென்படுவான். அத்தகைய மயக்கம் அர்ஜுனனைப் பிடித்திருந்தது. இவ்வுலக வாழ்வு அவனுக்கு ஒரு பெரிய தலைச்சுமையாகத் தோன்றியது. அதைக் கீழே இறக்கிவைக்கவும் முடியவில்லை; தூக்கிக்கொண்டு நடக்கவும் இயலவில்லை. இப்படித் தனக்குத்தானே அவன் கற்பித்துக்கொண்டிருந்த மயக்கம் ஒழிந்தது. ஸ்ம்ருதி: மயா லப்தா - ஞாபகம் என்னால் அடையப் பெற்றுள்ளது என்பது இரண்டாவது வாக்குமூலம். மயங்கியிருப்பவனுக்கு, தான் எங்கு, எக்காரணத்தால், எந்நிலையில் இருக்கிறான் என்பது விளங்காது. மயக்கம் தெளிந்த பிறகே உண்மையான ஞாபகம் வருகிறது. தான் ஏன் மண்ணில் கிடந்தான் என்பதைப் பிறகு சிந்திக்கிறான்; எதைப் பிதற்றினான் என்று விசாரிக்கிறான். பின்பு அதையெல்லாம் ஒதுக்கிவிட்டுத் தன் எதார்த்த நிலையைப் பற்றி நினைவு கூர்கிறான். தனது பேரியல்பைப்பற்றிய ஞாபகம் இப்பொழுது அர்ஜுனனுக்கு வந்துள்ளது. ஒவ்வொரு ஜீவனும் மயக்கத்தால் ஜனன மரணங்களுக்கு ஆளாயினான். சித்த சுத்தியடைந்த பிறகு உறுதியான ஞாபகம் வருகிறது. அது தனக்கும் கடவுளுக்கும் இடையில் உள்ள இணக்கத்தைப்பற்றிய ஞாபகமாம். ஜீவன் எத்தகைய பெருநிலைக்குரியவன் என்பதை அந்த ஞாபகம் விளக்குகிறது.த்வத் ப்ரஸாதாத் - உமது பிரசாதத்தால் அல்லது உமது அருளால் என்பது மூன்றாவது வாக்குமூலம். மயங்கிக் கிடந்த ஒருவனை மற்றொருவன் கிருபைகூர்ந்து, நீர் தெளித்து, விசிறி வீசிப் பிரக்ஞைக்குக் கொண்டு வருகிறான் என்று வைத்துக் கொள்வோம். அச்செயல் சாமானியமானதன்று. அது பாராட்டுதற்குரிய பெருஞ்செயலாம். ஈண்டு அர்ஜுனனுக்கு மயக்கம் தெளிந்ததும், தனது மேலாம் சொரூப ஞாபகம் வந்ததும் தன் சுயப் பிரயத்தனத்தாலன்று. அது சுயப்பிரயத்தனம் என்று எண்ணி அவன் செருக்குறலாகாது. அது கண்ணனது காருண்யத்தால் விளைந்தது. குந்தியின் மகன் அதற்குக் கடப்பாடு உடையவன் ஆனான். முழுமனதோடு அதை எடுத்து அவன் மொழிந்துகொள்கிறான். ஜீவாத்மா பரபோதம் பெறும்போது அது பரம்பொருளின் பேரருள் என்று இயம்புகிறான். தன் முயற்சியின் சிறுமையும், அவனருளின் பெருமையும் அப்பொழுது உள்ளபடி அவனுக்கு விளங்குகிறது.ஸ்தித: அஸ்மி- உறுதியாய் இருக்கிறேன் என்பது இதன் பொருள். இது நான்காவது வாக்குமூலம். புயல் காற்றும் பெருமழையும் சேர்ந்து வந்தமையுங்கால் மரம், செடி, கொடியெல்லாம் அசைகின்றன, ஒடிகின்றன வேருடன் பெயர்த்து எடுக்கப்படுகின்றன. அந்நிலைமையில் அவைகளுள் உறுதி பெற்றிருப்பது ஒன்றுமில்லை. பூமியில் உள்ள மண்ணும் பறித்தெடுக்கப்படுகிறது. ஆனால் மலையொன்றோ இதற்கெல்லாம் அசைவதில்லை. அது உறுதியாக நிற்கிறது. ஞானம் அங்ஙனம் உறுதி பெற வேண்டும். அத்தகைய ஞானம் அடையப்பெற்றவன் ஸ்திதப் பிரக்ஞன் எனப்படுகிறான். அர்ஜுனன் இப்பொழுது ஸ்திதப் பிரக்ஞன் ஆய் உள்ளான். தன் சொரூபத்தைப்பற்றி இப்பொழுது அவன் கொண்டுள்ள பேரறிவை யாரும் கலைத்துவிடமுடியாது. பரஞானம் அடையப்பெற்றபின் அது மறைந்துவிட்டுப் போவதில்லை.
கத ஸந்தேஹ : - சந்தேகங்கள் போய்விட்டன. இது ஐந்தாவது வாக்குமூலம். ஆத்ம சொரூபத்தை அனுபூதி வாயிலாக சாக்ஷõத்கரித்தவனுக்கு அதைப்பற்றி ஐயம் உண்டாவதில்லை. இன்னும் உயிரோடிருக்கும் ஒருவனுக்குத் தன் உயிர் வாழ்க்கையைப் பற்றி எப்படிச் சந்தேகம் உண்டாவதில்லையோ அப்படி அனுபூதி பெற்றவனுக்கு ஆத்ம சொரூபத்தைப்பற்றிச் சந்தேகம் வருவதில்லை.தவ வசனம் கரிஷ்யே என்பது உமது சொற்படி செய்வேன் என்று பொருள்படுகிறது. இது கடைசி வாக்குமூலம். அவன் எதைச் செய்ய ஆரம்பத்தில் மறுத்தானோ, அதைச் செய்ய இப்பொழுது துணிந்தான். செய்வது இன்னதென்று இப்பொழுது விளங்கிற்று. மெய்ஞ்ஞானம் பெற்றதே அதற்குக் காரணமாயிற்று. சாஸ்திரம் புகட்டுவதும், குரு கிருபை புரிவதும், சாதகன் அனுபவ பூர்வமாகப் பெறுவதும் முடிந்த நிலையில் ஒன்றுபட்டு நிற்கின்றன.தவளைக் குஞ்சினுடைய வால் விழுந்ததும் அது தண்ணீரிலும் தரையிலும் வாழக்கூடும். அக்ஞானமாகிய வால் மனிதனிடமிருந்து விழுந்துவிட்டால் அவனுக்க முக்தியுண்டாகிறது. அப்போது அவன் கடவுளிடத்தும், அதுபோலவே உலகத்தினிடத்தும் நன்கு வாழக்கூடியவனாகிறான்.ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன ஸம்வாதம் இத்துடன் முடிவடைகிறது. இனி, இது மற்ற சம்பவங்களுடன் தொடர்வு பெறுவது மேலும் சில சுலோகங்களில் விளக்கப்படுகிறது :
ஸஞ்ஜய உவாச
74. சஞ்சயன் சொல்லுகிறான்: இப்படி நான் வாசுதேவனுக்கும் மகாத்மாவாகிய பார்த்தனுக்கும் நிகழ்ந்த அற்புதமானபுளகந் தரக்கூடியஅந்த சம்பாஷணையைக் கேட்டேன்.உள்ளத்தில் பேருணர்ச்சி உண்டானால் மயிர்க்கூச்செடுக்கிறது. நல்லது கெட்டது இரண்டும் உடலில் மயிர் சிலிர்க்கச் செய்யும். பொதுவாக நல்ல விஷயந்தான் நல்லவர்களுக்கு இப்படிப் புளகாங்கிதம் உண்டாகும்படி செய்யும். பேசுபவனாகிய கிருஷ்ணன், பேசப்படுபவனாகிய அர்ஜுனன், பேசும் விஷயமாகிய கீதா தத்துவம் ஆகிய இம்மூன்றும் சேர்ந்து ஸஞ்ஜயன்பால் புளகாங்கிதம் உண்டாக்கியதில் வியப்பொன்றுமில்லை. திருதராஷ்டிரனுக்கு அது எவ்வளவு தூரம் பயன்பட்டது என்பதற்குச் சரித்திரமே சான்றாயிருக்கிறது.
அர்ஜுனனை மகாத்மாவென்று மொழிவதன் மூலம் அவன் பக்கத்தைச் சேர்ந்தவர்கள் நேர்மையாக நடந்து கொள்ளுபவர்கள் என்பது குறிப்பிடப்படுகிறது.
தொலைவில் போர்க்களத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பாஷணையைக் கேட்க ஸஞ்ஜயனுக்கு எப்படி முடிந்தது என்ற கேள்வி பிறக்கிறது. அதற்கு விடை வருகிறது :
75. யோகக் கடவுளாகிய கண்ணன் இந்தப் பரம ரகசியமான யோகத்தைத் தான் நேராகவே சொல்லும்போது நான் அதை வியாசனருளால் கேட்டேன்.ஸஞ்ஜயனுக்கு ஞானக் கண்ணை வழங்கியவர் வியாசர். ஆகையால் கிருஷ்ணனுடைய திவ்விய தர்சனத்தைப் பெறவும் விச்வரூப தர்சனத்தைப் பெறவும் அவர் பகர்ந்ததை யெல்லாம் அப்படியே கேட்கவும் அவனுக்கு இயன்றது. நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பயன் படுவதுபோன்று தான் பெற்ற பேறு யாது, அது யாருடைய அனுக்கிரகத்தால் ஆயிற்று என்பதை சஞ்ஜயன் தெரிவிக்கிறான்.
அது பெரும்பேறு என்பதற்கு அத்தாட்சி மேலும் வருகிறது :
76. அரசனே, கேசவார்ஜுனரின் வியப்புக்குரிய இந்த புண்ய சம்பாஷணையை நினைத்து நினைத்து நான், மீட்டு மீட்டும் களிப்பெய்துகிறேன்.ஸஞ்ஜயன் அடைந்த மகிழ்வு சாஸ்திரத்தின் மகிமையைக் குறிக்கிறது. நலத்தை அடையப்பெற்ற நல்லார் அந்த நலத்தினின்று உலப்பிலா ஆனந்தத்தை அடைவது இயல்பு.
77. அரசனே, ஹரியின் மிகவும் அற்புதமான அந்த ரூபத்தை நினைத்து நினைத்து எனக்குப் பெரிய ஆச்சரியமுண்டாகிறது; மீட்டு மீட்டும் களிப்படைகிறேன்.பல யோகிகளுக்கும் பக்தர்களுக்கும் காண்பதற்கரிய விசுவரூப தரிசனத்தைத் தற்செயலாய் ஸஞ்ஜயன் கண்டான். சூழ்நிலையால் சிலருக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் இது மிகப்பெரியது. விசுவரூப தரிசனத்தின் ஒரு சிறு பகுதியைக் காணாத ஜீவன் ஜகத்தில் இல்லை. வியப்புக்குரியதும் மனதை மேல் நிலைக்குக் கொண்டு போகக் கூடியதும் எதுவானாலும் அது இறைவனுடைய மகிமையேயாம். ஒவ்வொரு மனிதனுக்கும் அத்தகைய காட்சிகள் கிடைக்கின்றன. பெரும்பாலார்க்கு அவைகளைப் பயன்படுத்தும் வழி தெரிகிறதில்லை. திரும்பத் திரும்ப அக்காட்சிகளைப் பற்றி நினைப்பது ஒருவித தியானமாகும். மனது அதனால் நன்கு பண்படுகிறது. தனது மனதை உயிர்நிலைக்குக் கொண்டுபோன காட்சி எதுவென்று சாதகன் ஒருவன் நினைத்துப் பார்க்க வேண்டும். பிறகு அதை பக்தியுடன் ஞாபகத்துக்குக் கொண்டு வரவேண்டும்.
78கண்ணன் யோகக் கடவுள், எங்குளன், வில்லினை யேந்திய விஜயன் தன்னோடும்? அங்கு திருவும் ஆக்கமும் வெற்றியும் நிலை தவறாத நீதியும் நிற்கும்; இஃதென் மதம்.இது ஸஞ்ஜயனுடைய சொந்த அபிப்பிராயம் என்றாலும் சிறந்த கீதை தத்துவங்களில் இதுவும் ஒன்றாகும். கண்ணன் யோகேசுவரனாதலால் புருஷார்த்தங்களெல்லாம் அவன் மூலம் நிறைவேறுகின்றன. தர்மம், அதர்மம், காமம், மோக்ஷம் ஆகிய நான்கில் ஜீவாத்மாவுக்கு எது வாய்க்கப்பெற்றாலும் அது யோகமாகிறது. அவைகளுள் சிறப்பாயுள்ள மோக்ஷத்தைக் கிருபைகூர்ந்து வழங்க வல்லவன் கிருஷ்ணன். முதல் அத்தியாயத்தில் தனுசைத் தூர எறிந்து விட்டவனாக அர்ஜுனன் காட்சி கொடுத்தான். முயற்சியற்ற அல்லது முயற்சி குன்றிய வாழ்க்கையை அது எடுத்துக் காட்டுவதாகும். இப்பொழுது காண்டீவம் என்னும் வில்லை ஏந்திய அர்ஜுனன் காட்சி கொடுக்கிறான். கிருஷ்ணனுடைய யோக வல்லமையும் பார்த்தனுடைய பராக்கிரமமும் சேர்ந்து ஆகாத காரியத்தை ஆக்குவிக்கும். இதைக் கேட்ட பிறகாவது திருதராஷ்டிரனுக்கு மனது மாறியிருக்கவேண்டும் ! அதாவது தன் பிள்ளைகளுக்கு வெற்றியுண்டாகாது; உயிர் நஷ்டமும், பொருள் நஷ்டமும் ஏற்படுவது உறுதி. அதைத் தடுக்க ஒருவிதத்தில் சமாதானம் செய்துகொள்ளலாம் என்ற எண்ணம் வந்திருக்கவேண்டும். ஆனால் அவிவேகமே வடிவெடுத்திருப்பவனுக்கு அது ஒன்றும் விளங்காது. கடவுளே அருகிலிருந்து கொண்டு செய்கிற செயலும் அவனுக்குப் புலப்படாது.தெய்வத்தின் சகாயமும் மனிதனுடைய நேர்மையான முயற்சியும் ஒன்று சேர்ந்திருக்க வேண்டும். மனிதனுக்கு ஆகவேண்டியதை யெல்லாம் தெய்வம் செய்துவைக்கும் என்று நினைத்துக் கொண்டு தன் முயற்சியை நிறுத்திவிடலாகாது. பிறகு துர்யோதனன் கூட்டம் செய்தது போன்று ஈசுவரனது திட்டத்தைப் புறக்கணித்துவிட்டுத் தனது சொந்த முயற்சியால் எல்லாம் ஆய்விடும் என்று கருதி வினையாற்றலாகாது. யாண்டும் கடவுளைச் சார்ந்திருந்து தன் கடமையைக் கடவுள் பொருட்டு முழுமனதுடன் செய்யவேண்டும்.கார் இருளில் கண் தெரியாது. பேர் ஒளியிலும் கண் தெரியாது. கண்தெரியாமையை முன்னிட்டுக் கார் இருளையும் பேர் ஒளியையும் ஒன்றாகக் கருதலாகாது. தமோ குணத்தில் புதைந்து கிடப்பவன் வினையாற்ற மாட்டான். சத்வகுணத்தில் நிலைத்திருப்பவன் வினையாற்றுவதில்லை. அதை முன்னிட்டு அவர்கள் இருவரும் ஒப்பாகமாட்டார்கள். தேகம் எடுத்திருப்பவன் தேகம் இருக்கும் வரையில் நல்வினையாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். அவ்வினையை ஈசுவர ஆராதனையாகச் செய்ய வேண்டும். அதனால் ஞான முதிர்ச்சி தானே வந்தமைகிறது. இகம் பரம் ஆகிய இரண்டிலும் வாழ்க்கையின் குறிக்கோள் இனிது நிறைவேறுகிறது. பாரமார்த்திக வாழ்வின் பெயரால் சோம்பித் திரிபவனும், சமுதாயத்துக்கு வெறும் சுமையாக வாழ்ந்திருப்பவனும் கீதா தத்துவத்தை அறிந்தவர்கள் ஆகார். தூக்கி வினையாற்றுபவனே வேதாந்தம் அறிந்தவனாகிறான்.ஸ்ரீ என்பது இங்கு ராஜ்யலக்ஷ்மி. எடுத்துக்கொண்ட காரியங்களெல்லாம் ஈசுவர சங்கற்பத்துக்கு உட்பட்டவைகளாக இருக்கவேண்டும். அப்பொழுது விஜயம் அல்லது வெற்றி நிச்சயமாக வந்தமையும். அதற்குமேல் நல்ல முயற்சியுடையவனுக்குச் செல்வமும் சீரும் சிறப்பும் வளரும். வெற்றியையும் ஆக்கத்தையும் முன்னிட்டுக் கடவுளை நம்பியிருப்பவன் முறைதவறி நடந்து கொள்ளமாட்டான். நேர்மையையும், நிலைத்த நீதியையும், தெளிந்த ராஜ தர்மத்தையும் அவனிடத்துக் காணலாம்.ஈசுவர கிருபையும் ஜீவப்பிரயத்தனமும் ஒன்று சேருமானால் இகபரமிரண்டுக்கும் அவை நல்ல சாதனமாகின்றன. அவைகளின் சேர்க்கையே சிறந்த யோகமாகிறது. மற்ற யோகங்களெல்லாம் அதினின்று உருவெடுக்கின்றன. ஈசுவர கிருபை சந்ததமும் நம் பொருட்டுக் காத்துக்கொண்டிருக்கிறது. அதைப் பயன்படுத்தி நாம் நேர்மையாக முயற்சி செய்வது ஒன்றே பாக்கி. இப்பொழுதே முயலுவது முறை.சூரிய வெளிச்சம் எங்கும் சமமாய் வீழ்கிறது; ஆனால் ஜலம், கண்ணாடி, மெருகிட்ட உலோகம் இவைபோன்ற வஸ்துக்களில் அவ்வெளிச்சம் நன்றாகப் பிரதிபலிக்கின்றது. அதுபோலத்தான் தெய்விக ஒளியும். அது எல்லாரிடத்தும் சமமாயும் பாரபக்ஷமின்றியும் வருகின்றது. என்றாலும் ந்லலாருடைய தூய மனமும், ஸாதுக்களுடைய இருதயமுமே அவ்வொளியை நன்றாய்ப் பிரதிபலிக்கச் செய்கின்றன.பகவத் பக்திகொண்ட பரிசுத்த பக்தர்களுக்காகவே பகவான் உலகத்தில் அவதாரம் செய்கின்றார். அவதார புருஷரோடு வருபவர்கள் நித்தியமுக்தர் களாவார்கள்; அல்லது கடைசி ஜன்மம் எடுத்தவர்களாவார்கள். இதி ஸ்ரீமஹாபாரதே சதஸாஹஸ்ர்யாம் ஸம்ஹிதாயாம்வையா
ஸிக்யாம் பீஷ்மபர்வணி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு,ப்ரஹ்மவித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன
ஸம்வாதேமோக்ஷஸந்யாஸயோகோநாம,,அஷ்டாதசோத்யாய:,,, வியாசர் இயற்றிய ஒரு லக்ஷம் சுலோகங்களையுடைய மஹாபாரதத்தில், பீஷ்மபருவத்தில், பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் உபநிஷதத்தின்கண் மோக்ஷ ஸந்யாஸ யோகம் என்ற பதினெட்டாம் அத்தியாயம்.
ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.    ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.    ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.    

No comments:

Post a Comment