18. இங்ஙனம் ஷேத்ரதிரம், ஞானம், ஞேயன் என்பனவற்றைச் சுருக்கமாகச் சொன்னேன். என் பக்தன் இதையறிந்து எனது தன்மையை அடைகிறான்.மனிதன் எதனிடத்துத் தன் முழுமனதைச் செலுத்துகிறானோ அதை அறிய வல்லவனாகிறான். ஈசுவரனை உபாசிக்கிறவன் ஈசுவரனை அறிகிறான். இத்தனையுமாய் இலங்குவது ஈசனே என்ற ஞானம் வந்த பிறகு யாண்டும் அவன் ஈசனுடைய சான்னித்தியத்திலேயே இருந்து ஈசனை அடையத் தகுந்தவனாகிறான்.ஈசுவரனைக் கண்டவனே ஞானி. அவன் அப்போது குழந்தையின் சுபாவமுடையவனாகின்றான். குழந்தைக்குத் தனி வியக்தித்வம் ஒன்று இருக்கிறதென்றாலும் அது வாஸ்தவமானதல்ல; வெளித் தோற்றம் மட்டுமே. குழந்தையின் இயல்பு வயது வந்தவனுடையதைப் போன்றதன்று.
19. பிரகிருதி, புருஷன் இவ்விரண்டும் அநாதி என்றுணர். வேறுபாடுகளும் குணங்களும் பிரகிருதியிலேயே பிறப்பன என்றுணர்.காலதேச வர்த்தமானத்தில் கட்டுப்பட்டதாகத் தென்படும் போது அது பிரகிருதி என்றும், மாயை யென்றும், இயற்கை யென்றும் அழைக்கப்படுகிறது. புத்தி முதல் ஜடப்பொருள் பரியந்தம் வெவ்வேறு வடிவெடுக்கும் தன்மை பிரகிருதியினிடமுண்டு. முக்குணங்களாகப் பரிணமிப்பதும் அதுவே. அது நிர்விகாரியாய் நிர்க்குணமாய்ப் பேரறிவாய்த் தன்மயமாயிருக்கும் போது புருஷன் என்ற பெயர் பெறுகிறது. ஆயினும் பொருள் ஒன்று ஆதலால் இவை இரண்டும் அத்வைதம். உண்டாக்கப்பட்டதல்லவாதலால் அது அனாதி.ஸமுத்திர ஜலம் சிலவேளை அமைதியாயும், சிலவேளை அலைகள் பொங்கிக் கொந்தளித்தும் இருப்பதுபோல பிரம்மமும் மாயையும் இருக்கின்றன. சலிக்கும் சமுத்திரம் மாயை; சலனமற்ற சமுத்திரம் பிரம்மம்.
20. கார்ய காரணங்களை ஆக்கும் ஹேது பிரகிருதி என்பர். சுக துக்கங்களை உணரும் ஹேது புருஷனென்பர். தந்தையே மைந்தன் ஆகின்றான். மைந்தனுடைய செயல்களில் சில தந்தைக்கு இன்பமூட்டுகின்றன; வேறு சில துன்பமூட்டுகின்றன. புருஷனே பிரகிருதி ஆகின்றான். பிரகிருதியின் வெவ்வேறு விகாரங்களே உடலாகவும், இந்திரியங்களாகவும் பரிணமிக் கின்றன. அவ்விந்திரியங்கள் ஞானேந்திரியங்களாகவும் கர்மேந்திரியங்களாகவும் பாகுபடுகின்றன. ஜீவாத்மாவானது பிரகிருதியோடு மேலும் சம்பந்தப்படுதற்கு இந்திரியங்கள் பயன்படுகின்றன. அத்தகைய சம்பந்தம் இன்ப துன்பமாக வடிவெடுக்கிறது. இங்ஙனம் புருஷன் பிரகிருதியோடு சேர்வதால் புருஷன் பாடம் கற்று வருகிறான். இப்படி ஜீவாத்மாவைப் பக்குவப்படுத்துவதே பிரகிருதியின் தொழில்.பிரம்ம ஞானப் பிராப்தி. பரமானந்த போகம் முதலியவைகளெல்லாம் மாயையால்தான் நமக்குக் கிடைக்கின்றன. இல்லாவிட்டால் இவையெல்லாம் நமக்கு லபிக்குமெனக் கனவிலும் கண்டவர் எவர்? மாயையிலிருந்துதான் துவைதமும் மற்ற வியவகாரமும் உண்டாகின்றன. மாயைக்கு அப்பால் போகம், போகி என்பவை கிடையா.
ஜீவன் என்னபோக்கில் பாடம் கற்கின்றான் என்பது அடுத்து எழும் வினாவாகின்றது. அதற்கு விடை வருகிறது :
21. புருஷன் பிரகிருதியில் நின்றுகொண்டு, பிரகிருதியினிடம் பிறக்கும் குணங்களைத் துய்க்கிறான். குணங்களினிடம் இவனுக்குள்ள பற்றுதலே இவன் நல்லனவும் தீயனவுமாகிய ஜென்மங்களில் பிறப்பதற்குக் காரணமாகிறது.வெயிலில் நிற்பவன் வெயிலை அனுபவிக்கிறான். பனியில் நிற்பவன் பனியை அனுபவிக்கிறான். அங்ஙனம் ஜீவாத்மா பிரகிருதியோடு பொருந்தியிருக்கையில் பிரகிருதியின் தன்மைகளையெல்லாம் தன்னுடையவைகளெனக் கருதி அனுபவிக்கிறான். நான் இன்பம் துய்க்கிறேன், நான் துன்பம் துய்க்கிறேன், நான் மயங்கிப்போனேன், நான்அறிவுடையவனாயிருக்கிறேன்-இவை போன்ற உணர்ச்சிகள் குணத்தோடு பற்று வைப்பதால் வருகின்றன. இனி, பிறப்புக்குக் காரணமாயிருப்பதும் பற்றுதலே. மேலான குணத்தோடு பற்று வைப்பவன் தேவன் போன்ற மேலானவனாகப் பிறக்கின்றான். கீழான குணத்தில் பற்று வைப்பவன் விலங்கு போன்ற கீழானவனாகப் பிறக்கிறான். மேலானதும் கீழானதும் கலந்த குணத்தில் பற்று வைப்பவன் சாதாரண மனிதனாகப் பிறக்கிறான்.இப்படித் தொடர்ந்து வருகிற ஜனன மரண சம்சாரத்தினின்று விடுதலையடைதற்கு வழியொன்றுமில்லையா? விடை வருகிறது :
22. மேற்பார்ப்போன், அனுமதி தருவோன், சுமப்பான், உண்பான், மகேசுவரன் இங்ஙனம் உடம்பிலுள்ள பரமபுருஷன் பரமாத்மாவென்றே சொல்லப்படுகிறான்.உடலிலே இத்தனை செயல்கள் நடைபெறுகையில் அக்ஞானத்தில் உழலும் ஜீவனானவன் தன்னை இத்தனைக்கும் கர்த்தாவாக எண்ணுகிறான். அந்த ஜீவ சைதன்யமே பரமாத்மாவின் தோற்றமாகும். உள்ளே இருக்கும் உத்தமன் எத்தகையவன் என்று கேட்குமிடத்து, அவன் :உபத்ரஷ்டா - அருகிலிருந்து காண்போன் அல்லது சாக்ஷியாக இருக்கிறான். சொக்கட்டான் ஆடுபவர்களை விட அதைப் பார்த்துக்கொண்டிருப்பவனுக்கு யார் எங்கே எக்குற்றம் செய்கிறார்கள் என்பது நன்கு புலப்படுகிறது. மனத்தகத்து சாக்ஷியாயிருக்கும் பரமாத்மா உடலிலும் உள்ளத்திலும் நிகழ்வனவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். அனுமந்தா - அனுமதி அல்லது சம்மதம் கொடுப்பவர். ஒன்றும் தெரியாத அவிவேகி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறான். பார்த்ததை நல்லதென்று ஆமோதிக்கவோ, அல்லது கெட்டதென்று நிராகரிக்கவோ அவனுக்குத் தெரியாது. அறிஞனுக்கோ அது சாலும். ஜகத்தின் நடைமுறைக்குப் பரமாத்மா அங்ஙனம் அனுமந்தாவாயிருக்கிறார்.பர்த்தா - விளையாட்டைப் பார்க்கவும் அனுமதிக்கவும் ஒருவனுக்கு இயலலாம். ஆனால் அதற்கு ஆகிற செலவு கொடுத்து அதை ஆதரிக்க இயலுகிறவன் அதிலும் மிக்கான் ஆகிறான். அவனைப் பர்த்தா என்று சொல்லவேண்டும். தாங்குபவன் என்பது அதன் பொருள். சினிமாத் திரை சினிமாப் படத்தைத் தாங்குவது போன்று பரமாத்மா பிரகிருதியைத் தாங்குகிறார்.போக்தா - சினிமாத் திரை சினிமாப் படத்தைத் தாங்குகிறது எனினும் அப்படத்தை ரசிக்க அதனால் இயலாது. திரை ஜடப்பொருளாயிருப்பதே அதற்குக் காரணம். மனைவிக்குக் கணவன் பர்த்தா. அதற்குமேல் அவளுடன் கூடின இல்வாழ்க்கைக்கு போக்தாவாக, அதாவது இல்வாழ்க்கையை அனுபவிப்பவனாக அவன் இருக்கிறான். அங்ஙனம் சித் சொரூபியாகிய, ஆனந்த சொரூபியாகிய பரம புருஷன் பிரகிருதிக்கு போக்தாவாக இருக்கிறார்.
மகேச்வரன் - கணவன் மனைவியை ஆதரித்து அவளுடன் கூடிய இல்வாழ்க்கையை அனுபவிக்கலாம். ஆனால் மனைவி அவன் கட்டுப்பாட்டில் அடங்காதவளாயிருக்கலாம். பின்பு, பரம புருஷனோ அரசன் போன்றவர். ராஜாவுக்கு அவனுடைய பிரகிருதிகளெல்லாம் உட்பட்டவைகள். மகேச்வரனது ஆளுகைக்குப் பிரகிருதி அல்லது ஷேத்ரதிரம் முற்றிலும் கட்டுப்பட்டது. அவருடைய ஆணையை மீறுதற்கு அதற்கு இயலாது.இத்தனை விதங்களில் அவர் இயற்கையோடு தொடர்வு வைத்திருந்தும் அவர் இயற்கையில் கட்டுப்பட்டவரல்லர். ஆகையால் அவர் பரமாத்மன், அதாவது இயற்கைக்கு அப்பாற்பட்டவர். இங்ஙனம் இத்தேகத்தினுள்ளேயே பிரகிருதியின் செயல் ஒன்றிலும் கட்டுப்படாதவராக, ஆனால் அதற்கு ஆதரவும், ஒழுங்குப்பாடும் தருபவராகப் பரம புருஷன் வீற்றிருக்கிறார்.புருஷ பிரகிருதியின் மூலமாகவே உலகம் உண்டாயிற்று. அது எப்படி யென்று தெரியுமா? வீட்டு எஜமானன் ஓரிடத்தில் உட்கார்ந்துகொண்டு அதிகாரம் செலுத்துகிறான். வீட்டு எஜமானி இப்பக்கமும் அப்பக்கமும் ஓடி அலைந்து அலுவல்களைக் கவனிக்கிறாள். சுறுசுறுப்பாக வேலைபார்த்து, வீட்டுக்கு வருபவர்களையும் வரவேற்றுக் கவனித்துக்கொள்கிறாள். அடிக்கடி தன் கணவனிடம் சென்று அலுவல்கள் எவ்வாறு நடந்து வருகின்றன வென்பதை அறிவிப்பதோடு ஆலோசனைகளையும் கேட்டு வருகிறாள். தலைவனும் குறிப்பறிந்து தன் சம்மதத்தைத் தலையசைப்பின் மூலமாகத் தெரிவிக்கிறான். பிரகிருதி புருஷன் இவர்களது காரியமும் இப்படித்தான் நடைபெற்று வருகிறது.
பிரகிருதி புருஷனைப்பற்றிய ஞானத்தினின்று வரும் நலன் ஏதாவது உண்டா? விடை வருகிறது :
23. இங்ஙனம் புருஷனையும், பிரகிருதியையும், அதன் குணங்களையு மறிந்தோன் எல்லா நெறிகளிலும் இயங்குவானெனினும், அவனுக்கு மறு பிறப்பில்லை.கண்ணாடியின் எதிரே தோன்றும் வடிவங்களின் பிம்பத்தை அப்படியே காட்டவல்லது கண்ணாடி. ஆனால் கண்ணாடி அதனால் நலம் கேடு ஒன்றும் அடைவதில்லை. பிரகிருதியின் விகாரங்களால் பிரம்மமும் நலம் கேடு ஒன்றும் அடைவதில்லை. பிரம்மத்தை அறிபவன் பிரம்மாகிறான். பிராரப்த கர்மத்தால் உடலில் ஏற்படும் இன்ப துன்பங்களில் அவன் கட்டுப்படுவதில்லை. கானல் நீர் போன்றுள்ள பிரகிருதியின் தோற்றத்தைப் போற்றிப் பாராட்டுவதால் அவனுக்குப் பிரகிருதியில் பற்று ஒன்றும் உண்டாவதில்லை. ஜகத் என்பது வெறும் தோற்றம் என்று அவன் அதைப் புறக்கணிப்பதால் அவனுக்கு நஷ்டம் வருவதுமில்லை. இவ்வுடலம் இருக்கும்வரை அதில் வாழ்க்கை பிராரப்தத்துக்கு ஏற்றவாறு விதவிதமாய் நடைபெறுகிறது. அதற்கிடையில் ஞானி ஜீவன்முக்தனாய் வாழ்கிறான். உடல் வீழ்ந்த பிறகு அவன் இன்னொரு பிறவி எடுப்பதில்லை. தீயில் வெந்த கயிறு கட்டுதற்கு உதவாது. அங்ஙனம் ஞானாக்கினியில் வெந்த சஞ்சித ஆகாமிய கர்மம் இன்னொரு பிறவியை உண்டுபண்ண மாட்டா.சூளையில் வேகாத மண்பாண்டம் உடைந்தால் அம்மண்ணை வேறு புதிய பாண்டம் உண்டாக்கக் குயவன் உபயோகிப்பான். ஆனால் சூளையில் வெந்த மண்பாண்டம் உடைந்தாலோ அதன் துண்டுகளை அப்பால் அவன் உபயோகிக்க முடியாது. அதுபோல ஒருவன் அக்ஞானத்துடன் மரணமடைந்தால் மறு ஜன்மம் அடைவான். ஆனால் உண்மை ஞானமாகிய அக்கினியால் வெந்த ஒருவன் பரிபூரணனாக இறப்பானானால் அவனுக்கு மறு ஜன்மம் கிடையாது.
ஞானத்தை அடைதற்கான வழிகள் எவை? விடை வருகிறது :
24. சிலர் ஆத்மாவில், ஆத்மாவால் ஆத்மாவை அறிகிறார்கள்; பிறர் சாங்கிய யோகத்தால் அறிகிறார்கள்; பிறர் கர்ம யோகத்தால் அறிகிறார்கள்.ராஜயோகம், ஞானயோகம், கர்மயோகம் ஆகிய மூன்றும் இங்குச் சொல்லப்பட்டுள்ளன. பக்தியோகம் அடுத்த சுலோகத்தில் வருகிறது.
25. இங்ஙன மறியாத மற்றைப் பிறர் அந்நியரிடமிருந்து பெற்ற சுருதிகளை வழிபடுகிறார்கள். அவர்களும் அந்தச் சுருதிகளின்படி ஒழுகுவாராயின் மரணத்தை வெல்வார்.பக்தியோகம் மற்ற மூன்று யோகங்களைவிட மிக எளியது. சாஸ்திர ஞானமும் விவேகமும் இதற்கு ஏராளமாய் வேண்டியதில்லை. ஆயர் குலத்து தித்த பெண்களே கல்வியறிவின்றி, நூல் ஆராய்ச்சியின்றி, சுத்த பக்தியால் கண்ணனை அடைந்தார்கள் என்றால் விவேகமும் வைராக்கியமும் உடைய மேலோர்க்கு அது இன்னும் எவ்வளவு எளிதாகாது?பகவத் பக்தியை ஒரு புலியோடு ஒப்பிடலாம். புலியானது மிருகங்களை விழுங்குவதுபோல், பக்தியானது காமாதிகளான பெரும் பகைவர்களை விழுங்குகிறது. பகவத் பக்தி ஒருதரம் நன்றாக உண்டாகிவிட்டால், காமம் குரோதம் முதலிய கெட்ட பாசங்கள் முற்றிலும் நசிந்துவிடும். பிருந்தாவனத்து கோபஸ்திரீகள் கிருஷ்ணனிடம் வைத்த தீவிரபக்தியால் இப்படிப்பட்ட நிலைமையை அடைந்திருந்தனர்.கர்மயோகம், ராஜயோகம், பக்தியோகம், ஞானயோகம் ஆகிய நான்கும் ஸ்ரீமத் பகவத்கீதையில் சம அந்தஸ்துப் பெறுகின்றன. ஒன்றைக் குறைபடுத்துதலும் மற்றொன்றை மிகைப்படுத்துதலும் கீதையில் இல்லை. இந்த நான்கு யோகங்களில் ஏதேனும் ஒன்றே போதுமானது. ஏதேனும் ஒரு யோகத்தின் மூலமாக மனிதன் பரிபூரணத் தன்மையடையலாம். பின்பு நான்கு யோகங்களும் சமரசம் அடைதலே சாலச்சிறந்தது. கர்மயோகம் ஆற்றலைத் தருகிறது. ராஜயோகம் மனோவலிவை வளர்க்கிறது. பக்தி அன்பைப் பெருக்குகிறது. ஞானம் அறிவை வளர்க்கிறது. நிறை மனிதனிடத்து இவையாவும் பூரண வளர்ச்சியடைந்திருக்க வேண்டும்.இனி, நான்கு யோகங்களையும் முறையாகக் கையாளுவதால் வரும் நிறை ஞானம் விளக்கப்படுகிறது.
26.
பரதக்காளையே, ஸ்தாவரமாயினும், ஜங்கமமாயினும் ஓருயிர் பிறக்குமாயின் அது ஷேத்ரதிரமும் ஷேத்ரதிரக்ஞனும் சேர்ந்தமையால் பிறந்ததென்றறி.சினிமாத் திரையும் அதன்மீது படுகிற நிழல் வெளிச்சம் ஆகியவைகளின் சேர்க்கையும் படக் காட்சிக்குக் காரணங்களாகின்றன. அசையாத திரையின் துணையால் அசையும் மனிதன் ஒருவனது தோற்றம் அங்கே தென்படுகிறது. நிறத்தின் அமைப்பு விசேஷத்தால் அவ்விடத்தில் தீப்பற்றி எரிவது போன்று காட்சி உண்டாகிறது. நிழல், நிறம் இவைகளின் தன்மை திரையின் மீது ஏற்றப்படுகிறது. பின்பு திரையின் தன்மையானது நிழல் வெளிச்சம் ஆகியவைகளின் மீது ஏற்றப்படுகிறது. படத்தோற்றத்துக்கு இதுவே காரணம். சித் ஆகாசம் என்கிற திரையின் மீது முக்குண மயமான ஷேத்ரதிரம் அரோபிக்கப்படுகிறது - அதாவது ஏற்றுவிக்கப்படுகிறது. இங்ஙனம் ஷேத்ரதிர ஷேத்ரதிரக்ஞனுடைய சேர்க்கையால் ஜடமாகிய ஷேத்ரதிரம் அறிவுடையதுபோல் தென்படுகிறது. உண்மையில் அறியும் தன்மை ஆத்மாவினுடையது. பிறவாத, இறவாத ஆத்மாவானது பிறந்து இறப்பதுபோன்று தென்படுகிறது. பிறப்பும் இறப்பும் - அதாவது தோன்றுவதும் மறைவதும் ஷேத்ரதிரத்தினுடைய இயல்பு. இது ஆத்மாவினிடத்து நிகழ்கிறது என்ற மித்தியா ஞானம் அக்ஞானிக்கு உண்டாகிறது. தீப்பற்றி எரிகிற சினிமாக் காட்சி தென்பட்டாலும் திரையில் தீப்பற்றிவிடாது என்ற ஞானம் அதன் தத்துவத்தை அறிகிறவர்களுக்குண்டு. உலகம் உண்டாவது, நிலைபெறுவது , மறைவது என்பதெல்லாம் இத்தகையது என்று ஞானி உள்ளபடி அறிகிறான். ஷேத்ரதிர ஷேத்ரதிரக்ஞனைப் பாகுபடுத்தி உள்ளபடி அறிவதே ஞானம்.நீ வியக்தி ஸ்வரூபனாக இருக்கும் வரையில், அதாவது நீ ஜீவனாய் இருக்கும் வரையில், வெண்ணெய், மோர் என்ற இரண்டையும் அங்கீகரிக்கவேண்டும்; அதாவது ஈசுவரன் ஜகத் என்ற இரண்டையும் அங்கீகரிக்கவேண்டும். உவமையை விளக்கிச் சொல்வோமானால் முதன் முதலில் இருந்த பாலானது ஸமாதி மூலமாய் அறியப்படும் பிரம்மமாகும்; வெண்ணெய் ஈசுவரனாகும்; மோர் இருபத்துநான்கு தத்துவங்களாலான உலகமாகும்.
ஞானம் அடைந்தவன் பரமாத்மாவை எப்படிக் காண்கிறான்? விடை வருகிறது ?
27. எல்லா பூதங்களிலும் சமமாக நிற்போன் பரசுராமன். அழிவனவற்றில் அவன் அழிவான். அவனைக்காண்போனே காட்சியுடையோன்.படங்கள் அனைத்துக்கும் சினிமாத் திரை சமமாயிருக்கிறது. படத்தின் அமைப்பில் இதன் இடத்தில் அது இருக்கிறது, இன்ன இடத்தில் இல்லை என்பது கிடையாது. இனி, படங்களெல்லாம் ஓயாது தோன்றி மறைகின்றன. திரையோ மாறுதல் அடையாது நிலைத்திருக்கிறது. சித் ஆகாசம் என்னும் திரையின் மீது ஜகத் என்னும் படம் உண்டாகி அழிந்துகொண்டிருக்கிறது. சினிமா என்னும் படம் உயிரற்ற ஓவியம். ஜகத் என்னும் படமோ உயிர் ஓவியம். ஏனென்றால் அதற்கு ஆதாரமாயுள்ள சித் ஆகாசம் அல்லது பரமாத்மாவிடமிருந்து அது சைதன்யத்தை, அதாவது உணரும் தன்மையைப் பெறுகிறது. ஜகத்து அல்லது ஷேத்ரதிரத்துக்கு உயிர் வழங்குவதால் அது பரமேசுவரன் எனப்படுகிறது. திரையின்றிப் படமில்லை. பரமேசுவரனின்றி உலகம் ஒன்றுமில்லை. அப்பரமேசுவரனையும் அவன் மயமாக உலகத்தையும் காண்பவனே உண்மையைக் காண்பவன் ஆகிறான். மற்றவர்கள் படத்தை மெய்யென நினைக்கும் குழந்தைகள் போன்றவர்களாய் இருக்கின்றனர்.சூரியன் உலக முழுதிலும் சமனாகப் பிரகாசித்து வெளிச்சம் கொடுக்கிறது. ஆனால் ஒரு சிறுமேகம் அதை நம் கண்ணுக்குத் தெரியாது மறைத்து வைக்கிறது. அங்ஙனம் மாயையாகிய திரை எங்கும் நிறைபொருளை - கடவுளை, நம் கண்ணுக்குத் தெரியாது மறைக்கிறது. மாயையை நீக்கிப் பார்ப்பவருக்கு எல்லாம் சச்சிதானந்த சொரூபமாகத் தோன்றும்.
ஈசுவரக் காட்சி காண்பவனது வாழ்க்கையில் ஏதேனும் மாறுதல் ஏற்படுகிறதா? விடை வருகிறது :
28. எங்கும் சமமாக ஈசன் நிற்பது காண்பான், தன்னைத்தான் துன்பப்படுத்தி கொள்ளமாட்டான். அதனால் பரகதி அடைகிறான்.மனிதன் செய்கிற எல்லாக் கேடுகளுக்கும் காரணமாயிருப்பது அக்ஞானம். கேடுகளிலெல்லாம் பெரிய கேடு தன்னை ஷேத்ரதிரம் அல்லது பிரகிருதியாக நினைத்துக்கொள்வது. சரீரத்தைத் தான் என்று நினைப்பவன் பல பிறவிகளை எடுக்கிறான். ஒவ்வொரு தடவையும் தன் உடல் கூற்றை அழித்துக்கொண்டு புதிய பிறவியெடுக்கிறான். அழியாத ஆத்மா அக்ஞானத்தால் பலதடவை அழிக்கப்பட்டது போன்று ஆகிறது. மற்ற உயிர்களை மனிதன் தனக்கு வேறானவைகளாக நினைப்பதால் அவைகளுக்குத் தீங்கு செய்கிறான். இது மித்தியா ஞானம் அல்லது மயக்கத்தின் பயனாகும். பிரம்மஞானி பிரம்மத்துக்கு அன்னியமாக எதையும் காண்பதில்லை. அவனுக்கு உலகமெல்லாம் ஒரே பிரம்ம சொரூபமாகக் காட்சி கொடுக்கிறது. அதுவே அவன் அடைகிற பரகதியாம்.குருவியின் கூண்டு அழிந்துபோனால், அக்குருவி ஆகாயத்தில் பறந்துபோய்விடுகிறது. அதுபோல, சரீர உணர்ச்சியும் உலக உணர்ச்சியும் மனத்தைவிட்டு நீங்கினால் ஜீவாத்மாவானது பரமாத்மாவாகிய ஆகாயத்தில் பறந்து சென்று சமாதிநிலையில் ஐக்கியமாகிறது.பூவுலகில் நடைபெறுகிற கிருத்தியங்களுக்கும் பிரம்மஞானிக்கும் ஒருவிதமான தொடர்வும் இல்லையா? இக்கேள்விக்கு விடை வருகிறது :
29. எங்கும் தொழில்கள் இயற்கையாலேயே செய்யப்படுகின்றன. ஆதலால்தான் கர்த்தா இல்லையென்று காண்பானே காட்சியுடையான்சூரியன் இருக்குமிடத்தில் வெளிச்சம் உண்டு. அக்கினி இருக்குமிடத்தில் வெப்பம் உண்டு. அங்ஙனம் பிரம்மத்தின் சன்னிதானத்தில் சக்தி இயங்குகிறது. அதனால் பிரம்மம் ஒரு விகாரமும் அடைவதில்லை. சக்தி அல்லது பிரகிருதியின் கிருத்தியங்கள் வேண்டிவாறு நடைபெறுகின்றன. நிறைஞானியின் பிர கிருதியாகிய உடல், உள்ளம் முதலியன வேண்டியவாறு கர்மம் செய்யலாம். அதனால் ஞானியின் சம்பூரண நிலை சிறிதும் கலைந்து விடுவதில்லை. இவ்வுண்மையைக் காண்பவனே ஞானியாகிறான்.பரம்பொருளை சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களைச் செய்யாத நிஷ்கிரியர் என்ற கோட்பாட்டில் பிரம்மம் அல்லது புருஷன் என்று சொல்லுகிறேன். ஆனால் அத்தொழில்களைச் செய்தருளுகின்றார் என்ற கோட்பாட்டில் சக்தி, மாயை, பிரகிருதி என்ற பெயர்களுள் ஒன்றால் அழைக்கிறேன்.
ஷேத்ரதிரம் ஷேத்ரதிரக்ஞனுக்கிடையில் உள்ள தொடர்வு அடுத்த சுலோகத்தில் இன்னும் நன்கு விளக்கப்படுகிறது :
30. பலவகைப்பட்ட பூதங்கள் ஒரே ஆதாரமுடையன என்பதை அறிவானாயின், அப்போது, அதனின்றும் விஸ்தாரமான பிரம்மத்தை அடைகிறான்.அலை, திவலை, நுரை முதலிய தனித்தனி வடிவங்களெல்லாம் கடலுக்குப் புறம்பாயில்லை. எல்லாம் கடல் என்ற ஒரு பொருளிலே நிலைத்திருக்கின்றன. மேலும் அவைகளெல்லாம் கடலிருந்தே உண்டானவைகள். கடலே தனது சக்தியால் அத்தனைவித வடிவெடுத்திருக்கிறது. அது போன்று மாயா சக்தியின் வல்லமையால் பல்லுயிர்களாகத் தோன்றியிருப்பவைகளெல்லாம் பரபிரம்மத்திடத்தில் நிலைபெற்றிருக்கின்றன. அந்த மாயா சக்தியே பிரம்மத்துக்கு அன்னியமானதல்ல. யார் ஒருவன் சுவானுபூதியில் இதை அறிகின்றானோ அத்தகைய பிரம்மஞானி பிரம்மமாகிறான்.
இயங்காப் பரபிரம்மமும் இயங்கும் சக்தியும் உண்மையில் ஒன்றேயாம். அகண்ட சச்சிதானந்த ஸ்வரூபி எவனோ அவனே ஸர்வசக்தி, ஸர்வ ஞானம், ஸர்வானந்தம் இவைகளையுடைய ஜகன் மாதாவாகவுமாகிறான். நெருப்பும் அதன் வெப்பமும் ஒன்றானவை. அக்கினியின்றி உஷ்ணத்தையும் உஷ்ணமின்றி அக்கினியையும் மனத்தினால் சிந்திக்க முடியாது. சக்தியும் பிரம்மமும் ஒன்று. சக்தி கர்மம் செய்கிறது. அந்த கர்மம் பிரம்மத்தைச் சார்கிறதா? இதற்கு விடை வருகிறது :
31. ஆதியின்மையால், குணமின்மையால், இந்தப் பரமாத்மா கேடற்றான். இவன் உடம்பிலிருந்தாலும் செயலற்றான்; பற்றற்றான்.மாயா காரியங்கள் சிருஷ்டிக்கப்பட்டவைகள் ஆதலால் அவைகளுக்குத் துவக்கமுண்டு. பரபிரம்மம் சிருஷ்டிக்கப்பட்ட தல்ல; எனவே அது ஆதியில்லாதது. மாயா காரியங்கள் குண சம்பந்தப்பட்டவைகள். எதற்குக் குணம் மாறுகிறதோ அது கேடடைகிறது. பரமாத்மா குணமில்லாதது; ஆதலால் அதனிடத்து மாறுதல் ஒன்றுமில்லை. அது கேடு அடைவதில்லை. நிறை பொருள் அசையாதது; ஆகையால் அதனிடத்துக் கர்மம் கிடையாது. அசையாத ஒன்று, கர்மம் செய்யாத ஒன்று எதையும் போய்ப் பற்றுவதில்லை.பிரம்ம ஞானியினுடைய சரீரத்துக்கு ஏற்படும் அழிவு அவனுக்குரியதன்று. சரீரம் செய்கிற வேலை அவனுடைய தன்று. கடலின் மேற் பரப்பு ஆடுகிறது, அலையாக மோதுகிறது, பற்றுகிறது; அதன் உட்புறம் சலனமற்றுத் தன்மயமாயிருக்கிறது. நிறை ஞானியினுடைய தன்மையும் அத்தகையது.பிரம்மம் எப்படிப்பட்டது? பிரம்மத்துக்குக் குணங்கள் இல்லை, சலனமில்லை, அது போக்கு வரவற்றது; மகாமேரு பர்வதத்தைப் போல் நிலைத்திருப்பது.
எதுபோன்று பரமாத்மா செயலற்றுப் பற்றற்று இருக்கிறது? அது மேலும் விளக்கப்படுகிறது :
32. எங்குமிருந்தாலும் ஆகாசம் தன் நுண்மையால் பற்றற்று நிற்பதுபோல், உடம்பில் ஆத்மா எங்கணுமிருந்தாலும் பற்றுறுவதிலன்.ஜலமானது உறைந்த பனிக்கட்டியாக, இளகிய நீராக, நுண்ணிய ஆவியாக மூன்று நிலைகளில் இருக்கிறது. நுண்ணிய நிலையில் அதை அழுக்குப்படுத்த முடியாது. பஞ்ச பூதங்களுள் ஆகாசம் மிக நுண்ணியது. ஆகையால் அதை மற்றவைகள் அழுக்காக்குவதில்லை. இனி ஆத்மாவைவிட நுண்ணியது ஒன்றுமில்லை. ஆதலால் அது எதுனாலும் தோய்வுறாதிருக்கிறது. ஆகாசம் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறது. பூமி முதலியவைகளில் உள்ள வடிவங்கள் ஆகாசத்தைப் பிளவுபடுத்துவதில்லை. எண்ணிறந்த உடல்களில் பிளவுபடாது நிறைந்துள்ள சிதாகாசம் அல்லது பரமாத்மா எதிலும் பிளவுபடாது, தோய்வுறாது, களங்கமடையாக இருக்கிறது.ஞானம் அக்ஞானம், நன்மை தீமை, தர்மம் அதர்மம் இப்படிப்பட்ட துவந்தங்களுக்கு அப்பாலும் மேற்பட்டும் பிரம்மம் இருக்கிறது.
இன்னும் அது அத்தகையது?
33. சூரியன் ஒருவனாய், இவ்வுலக முழுவதையும் எங்ஙனம் ஒளியுறச்செய்கிறானோ, அதுபோல் ஷேத்ரதிரத்தை யுடையோன், ஷேத்ரதிரமுழுதையும் ஒளியுறச் செய்கிறான்.பூமி முழுதுக்கும் ஒரே சூரியன் வெளிச்சம் கொடுக்கிறான். ஆனால் பூமியிலுள்ள நன்மை கேடுகளால் சூரியன் பாதிக்கப்படுவதில்லை. இங்ஙனம் உலக முழுதுக்கும் ஒரே சூரியன் வெளிச்சம்கொடுப்பது போன்று பரமாத்மா அகிலாண்டத்துக்கும், சரம் அசரம் அனைத்துக்கும் சைதன்யத்தை அல்லது அறிவை வழங்குகிறார். அந்தந்த ஜீவனது அறிவில் ஏற்படும் நலம் கேடு முதலியன பரமாத்மாவைப் பந்தப்படுத்துவதில்லை.பிரம்மம் ஒரு விளக்கின் ஒளிப்பிழம்பைப் போன்றது. விளக்கின் வெளிச்சத்தில் நீ பாகவதத்தைப் படித்தாலும் படிக்கலாம்; அவ்வெளிச்சத்தின் உதவியைக்கொண்டே பிறரைக் கெடுக்க வேண்டி ஒரு பொய்ப் பத்திரத்தை எழுதினாலும் எழுதலாம். எல்லார்க்கும் அறிவு என்னும் வெளிச்சத்தைத் தருவது பிரம்மம். ஆனால் அது நன்மை தீமைகளோடு சம்பந்தப்படுவதில்லை.
முடிவான கருத்து யாதுவெனின்:
34. ஞானக் கண்ணால் இவ்வாறு ஷேத்ரதிரத்துக்கும் ஷேத்ரதிரக்ஞனுக்குமுள்ள வேற்றுமையை அறிவோர் பூதப் பிரக்ருதியினின்றும் விடுதலை பெற்று பரம்பொருளை அடைகின்றனர்.நோயையும் நோயாளியையும் நன்கு அறிகின்றவளவு மருத்துவன் நோயை நீக்க வல்லவன் ஆகிறான். இரண்டில் ஒன்றைத் தெரியாது போனாலும் சிகிச்சை சிலாக்கியப்படாது. அங்ஙனம் புருஷன் பிரகிருதி ஆகிய இரண்டையும் உள்ளபடி அறிதல் வேண்டும். எது புருஷன், எது பிரகிருதி என்று பாகுபடுத்துதலும் அவசியமானது. இதற்கெல்லாம் மேலாக ஞானவாழ்க்கையின் வாயிலாக ஞானக்கண்ணைப் பெறுதல் மிக முக்கியமானது. வெறும் சாஸ்திர ஞானம் போதாது. ஞானக்கண் திறக்கப்பெறுமிடத்து ஜீவர்கள் பிரகிருதியில் கட்டுண்டு கிடப்பதெல்லாம் அக்ஞானத்தால் என்பது விளங்கும். அதற்கெல்லாம் மேலாகப் பிரகிருதியானது புருஷனைச் சார்ந்திருக்கிற தென்றும், புருஷன் பிரகிருதியைச் சார்ந்திருப்பதில்லையென்றும், பிரகிருதி புருஷனுக்கு அன்னியமானதல்லவென்றும் சுவானுபூதியில் தோன்றும். அத்தகைய அபரோக்ஷ அனுபூதியைப் பெறுபவன் பிரம்ம ஞானியாகிறான். அவனே முக்தன் ஆகிறான். உலகம் மாயை யென்று சொல்லுவது எளிது. ஆனால் அதன் பொருள் இன்னதென்று உனக்குத் தெரியுமா? அது மிகுதி ஒன்றையும் வைக்காத கற்பூரத்தைக் கொளுத்துவது போலாம். சாம்பலை மிகுதியாக்கும் விறகுக் கட்டைகளைக் கொளுத்துவது போன்றதன்று. விசாரணை முடியும் நிலையில், உயர்ந்த சமாதி நிலை கிட்டும். அப்போது நான், நீ, உலகம் என்ற உணர்ச்சி கொஞ்சமேனும் இராது. இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே ஷேத்ர ஷேத்ரக்ஞ விபாக யோகோ நாம த்ரயோதசோத்யாய:பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீகிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் உபநிஷத்தின்கண் ஷேத்ர ஷேத்ரக்ஞ விபாக யோகம் என்ற பதின்மூன்றாம் அத்தியாயம்.
க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்
அர்ஜூனன்: பகவானே, இயற்கை (ப்ரக்ருதி), அனுபவிப்பவர் (புருஷர்), க்ஷேத்ரம் (களம்), க்ஷேத்ரக்ஞன் (களம் அறிபவன்), ஞானம், ஞானத்தின் இறுதி இவைகளை நான் அறிய விரும்புகிறேன்.
பகவான்: குந்தி மைந்தா, இவ்வுடலே க்ஷேத்ரம். இதை அறிபவன் க்ஷேத்ரக்ஞன். எல்லா உடல்களிலும் நானே அறிபவனாக இருக்கிறேன். உடல், அதன் உரிமையாளர் இதனைப் புரிந்து கொள்வதே ஞானம். இதுவே என் அபிப்பிராயம்.
(உடலே க்ஷேத்ரம். அதனுள் உடலை அறியும் உரிமையாளனும் (ஜீவன்), உரிமையாளனை அறியும் எல்லாமறிந்த பரமான்மாவும் வாழ்கின்றனர். இதில் ஜீவன், பரம புருஷ பகவானின் சக்தி அல்லது பகவானின் ஆன்மீக சரீரத்தின் அங்கத் துணுக்காவான். பரமான்மாவோ, பகவானின் பிரதிநிதி அல்லது அவரது சுயவிரிவு ஆவார்.
இனி க்ஷேத்ரம், அதன் மாற்றங்கள் - க்ஷேத்ரஞன், அவனது தன்மைகள் பற்றி சுருக்கமாக கூறுகிறேன். இவை முனிவர்களால் ஆய்ந்து சொல்லப்பட்டவை.
ஐந்து பூதங்கள், அகங்காரம், அறிவு, குணங்களின் தோன்றா நிலை, பத்து புலன்கள், மனம், ஐந்து புலன் விஷயங்கள் மற்றும் விருப்பு, வெறுப்பு, இன்பதுன்பம், உடலமைப்பு, உணர்வு, திட நம்பிக்கை இவைகளே க்ஷேத்ரமும், அதன் தோற்றமும் ஆகும்.
அடக்கம், பெருமை கொள்ளாமை, அஹிம்சை, பொறுமை, நேர்மை, சத்குருவை ஏற்றல், தூய்மை, நிலைபிறழாமை, புலனடக்கம், புலனுகர்வில் துறவு, பொய் அகங்காரமின்மை, தீமைகளை கவனித்தல் (பிறப்பு, இறப்பு, மூப்பு, பிணி போன்றவை), மனைவி, மைந்தர், இல்லம் மற்றும் பிறரிடம் பற்றின்மை, இன்ப துன்பங்களில் நடுநிலை, என்னிடம் மாறாத தூய பக்தி, தனியிடத்தை நாடுதல், கூட்டத்திலிருந்து விலகியிருத்தல், ஆன்மீக விஞ்ஞானத்திற்கு முக்கியத்துவம் தருதல், பூரண உண்மைக்காக ஆன்ம விசாரணைகள் செய்தல் - இவைகளே ஞானம் எனப்படும். இவைகளுக்கு எதிரானவை அஞ்ஞானமாகும்.
எதையறிவதால் நித்திய அமுதத்தை சுவைப்பாயோ, அறிய வேண்டிய அதனைக் கூறுகிறேன். துவக்கமற்றது அது. எனக்கு கீழ்ப்பட்டது. பிரம்மம் அல்லது ஆன்மா எனப்படுவது; ஜடவுலகின் காரண விளைவுகளுக்கு அப்பாற்பட்டது.
(மூன்று விதமான பிரம்ம ஞானங்கள் - செயற்களமான இயற்கையும் பிரம்மமே. இட இயற்கையை ஆண்டு அனுபவிக்க விரும்பும் ஜீவான்மாவும் பிரம்மமே. இவையிரண்டின் உண்மை ஆளுனராக உள்ள பரமான்மாவும் பிரம்மமே.
மேலும் எல்லா இடங்களிலும் கரங்கள், கால்கள், முகங்கள், கண்கள் இவற்றுடன் பரமான்மா இருக்கிறார். அவர் எல்லாவற்றையும் கேட்கிறார். அவரே புலன்களின் மூலமாயிருந்தாலும் புலன்களற்று இருக்கிறார். அனைவரையும் காப்பவராயினும் பற்றற்றவர். குணங்களுக்கு இறைவனாய் இருந்தும் குணங்களற்றவர். அசையும், அசையா அனைத்திலும் உள்ளும் புறமும் உள்ளார். தூரத்திலும் இருக்கிறார், அருகிலும் இருக்கிறார், எனினும், ஜடப் புலன்களால் அவரைக் காணவோ, அறியவோ இயலாது.
அவர் ஜீவர்களில் பிரிந்திருப்பதாய் தோன்றினாலும், பிரிவற்றவர். உயிரினங்க்களைப் பாதுகாவலனாயும், அழிப்பவராயும், அபிவிருத்தி செய்பவராயும், பிரகாசங்களுக்கு மூலமாயும் இருக்கிறார். இருளுக்கு அப்பாற்பட்டவராயினும், தோன்றாதவராய் இருக்கிறார். ஞானம், ஞானத்தின் லட்சியமான அவர், அனைவரின் இதயத்திலும் இருக்கிறார்.
இவ்வாறாக க்ஷேத்ரம், அதை அறிபவன், ஞானம் அனைத்தும் சுருக்கமாக என்னால் விவரிக்கப்பட்டன. என் பக்தர்கள் மட்டுமே இவைகளைத் தெளிவாய் அறிந்து, எனது இயற்கையை அடைய இயலும்.
இந்த ஜட இயற்கையும், உயிரினங்களும் துவக்கமற்றவை. ஆனால் அவை இரண்டின் மாற்றங்களும் (ஆரம்பம், வளர்ச்சி, தேய்வு, முடிவு), குணங்களும் - ஜட இயற்கையிலிருந்தே உண்டாகின்றன, ஆன்மாவிற்கு சம்பந்தமில்லை.
செயல்கள், விளைவுகளுக்கு காரணம் ஜட இயற்கையாகும். ஆனால் இன்பதுன்பங்களுக்கு காரணம் உயிரினங்கள் மட்டுமே. அவன் இயற்கையின் தொடர்பால் முக்குணங்களின்படி பல சரீரங்களில் வாழ்ந்து, நன்மை தீமைகளைத் துய்க்கிறான்.
இருப்பினும் இவ்வுடலில் உன்னதமான ஓர் அனுபவிப்பாளர் இருக்கிறார். அவரே பரம புருஷர், உரிமையாளர், அனுமதிப்பவர், மேற்பார்வையிடுபவர், பரமான்மா ஆவார்.
இயற்கை, உயிர்வாழி - இரண்டுக்கும் இடையேயான இயற்கைக் குணங்களின் விளைவுகள் இவை தொடர்பான உண்மைகளைப் புரிந்து கொள்பவன் நிச்சயமாக விடுதலை பெறுகிறான். எந்த நிலையிலும் அவன் மீண்டும் பிறப்பதில்லை.
தியானத்தால் சிலரும், ஞான விருத்தியால் சிலரும், பலனோக்காத செயல்பாட்டினால் சிலரும் பரமாத்வாவை உணர்கின்றனர்.
ஆன்மீக அனுபவங்கள் இல்லாவிடிலும், பிறரிடம் கேட்டறிந்து இறைவனை வழிபடுகின்றனர். அவர்கள் கேட்பதற்கான ஆவலால் மாத்திரம் பிறப்பு, இறப்பெனும் சுழலில் சிக்காது உயர்கின்றனர்.
பாரதர்களின் தலைவா, சராசரங்களில் நீ காண்பவை எல்லாம் க்ஷேத்ரம், க்ஷேத்ரக்ஞன் இரண்டின் கலவையே.
எல்லா உயிர்களிலும் ஜீவான்மாவைத் தொடர்பவராக பரமான்மாவைக் காண்பவனும், அவர்கள் அழிவற்றவர்கள் என்பதை அறிந்து கொள்பவனுமே உண்மையில் காண்பவனாவான். அவன் மனத்தால் தன்னை தரமிழக்கச் செய்து கொள்வதில்லை, தெய்வீக இலக்கை அடைகிறான்.
செயல்களுக்கெல்லாம் காரணம் ஜட இயற்கையால் ஆன உடலே, ஆன்மா அல்ல என அறிபவன் உண்மையைக் கண்டவனாகிறான்.
பரமாத்வாவிற்கு சொந்தமில்லாத, ஜடத்தோற்ற வேறுபாடுகளைக் காணும் நிலையைக் கடந்து விடும்போது ஒருவன் பிரம்ம நிலையை அடைகிறான். உயிரினங்கள் பரந்து இருப்பதையும் காண்கிறான்.
அர்ஜூனா, நித்தியமான, தெய்வீகமான, குணங்களுக்கு அப்பாற்பட்டதான ஆன்மா, ஜடத்தொடர்பால் உடல் பெற்றாலும் அது எதையும் செய்வதோ, சிக்குவதோ இல்லை.
எங்கும் நிறைந்துள்ள ஆகாயம் தனது நுட்பமான இயற்கையால் களங்கமற்று இருப்பது போல, பிரம்ம உணர்வில் திளைக்கும் ஆன்மாவும் ஜட தேகத்தால் களங்கமடைவதில்லை.
பரத மைந்தா, கதிரவன் அகிலமெல்லாம் பிரகாசிப்பது போல், ஆன்மா உணர்வால் உடலெங்கும் பிரகாசிக்கிறது.
உடலுக்கும், அதன் உரிமையாளனுக்கும் இடையேயான இந்த வேறுபாட்டினை அறிந்து கொண்டவனும், விடுபடும் முறையை அறிபவனுமான ஒருவன் பரம இலக்கை அடைகிறான்.
அர்ஜூனன்: பகவானே, இயற்கை (ப்ரக்ருதி), அனுபவிப்பவர் (புருஷர்), க்ஷேத்ரம் (களம்), க்ஷேத்ரக்ஞன் (களம் அறிபவன்), ஞானம், ஞானத்தின் இறுதி இவைகளை நான் அறிய விரும்புகிறேன்.
பகவான்: குந்தி மைந்தா, இவ்வுடலே க்ஷேத்ரம். இதை அறிபவன் க்ஷேத்ரக்ஞன். எல்லா உடல்களிலும் நானே அறிபவனாக இருக்கிறேன். உடல், அதன் உரிமையாளர் இதனைப் புரிந்து கொள்வதே ஞானம். இதுவே என் அபிப்பிராயம்.
(உடலே க்ஷேத்ரம். அதனுள் உடலை அறியும் உரிமையாளனும் (ஜீவன்), உரிமையாளனை அறியும் எல்லாமறிந்த பரமான்மாவும் வாழ்கின்றனர். இதில் ஜீவன், பரம புருஷ பகவானின் சக்தி அல்லது பகவானின் ஆன்மீக சரீரத்தின் அங்கத் துணுக்காவான். பரமான்மாவோ, பகவானின் பிரதிநிதி அல்லது அவரது சுயவிரிவு ஆவார்.
இனி க்ஷேத்ரம், அதன் மாற்றங்கள் - க்ஷேத்ரஞன், அவனது தன்மைகள் பற்றி சுருக்கமாக கூறுகிறேன். இவை முனிவர்களால் ஆய்ந்து சொல்லப்பட்டவை.
ஐந்து பூதங்கள், அகங்காரம், அறிவு, குணங்களின் தோன்றா நிலை, பத்து புலன்கள், மனம், ஐந்து புலன் விஷயங்கள் மற்றும் விருப்பு, வெறுப்பு, இன்பதுன்பம், உடலமைப்பு, உணர்வு, திட நம்பிக்கை இவைகளே க்ஷேத்ரமும், அதன் தோற்றமும் ஆகும்.
அடக்கம், பெருமை கொள்ளாமை, அஹிம்சை, பொறுமை, நேர்மை, சத்குருவை ஏற்றல், தூய்மை, நிலைபிறழாமை, புலனடக்கம், புலனுகர்வில் துறவு, பொய் அகங்காரமின்மை, தீமைகளை கவனித்தல் (பிறப்பு, இறப்பு, மூப்பு, பிணி போன்றவை), மனைவி, மைந்தர், இல்லம் மற்றும் பிறரிடம் பற்றின்மை, இன்ப துன்பங்களில் நடுநிலை, என்னிடம் மாறாத தூய பக்தி, தனியிடத்தை நாடுதல், கூட்டத்திலிருந்து விலகியிருத்தல், ஆன்மீக விஞ்ஞானத்திற்கு முக்கியத்துவம் தருதல், பூரண உண்மைக்காக ஆன்ம விசாரணைகள் செய்தல் - இவைகளே ஞானம் எனப்படும். இவைகளுக்கு எதிரானவை அஞ்ஞானமாகும்.
எதையறிவதால் நித்திய அமுதத்தை சுவைப்பாயோ, அறிய வேண்டிய அதனைக் கூறுகிறேன். துவக்கமற்றது அது. எனக்கு கீழ்ப்பட்டது. பிரம்மம் அல்லது ஆன்மா எனப்படுவது; ஜடவுலகின் காரண விளைவுகளுக்கு அப்பாற்பட்டது.
(மூன்று விதமான பிரம்ம ஞானங்கள் - செயற்களமான இயற்கையும் பிரம்மமே. இட இயற்கையை ஆண்டு அனுபவிக்க விரும்பும் ஜீவான்மாவும் பிரம்மமே. இவையிரண்டின் உண்மை ஆளுனராக உள்ள பரமான்மாவும் பிரம்மமே.
மேலும் எல்லா இடங்களிலும் கரங்கள், கால்கள், முகங்கள், கண்கள் இவற்றுடன் பரமான்மா இருக்கிறார். அவர் எல்லாவற்றையும் கேட்கிறார். அவரே புலன்களின் மூலமாயிருந்தாலும் புலன்களற்று இருக்கிறார். அனைவரையும் காப்பவராயினும் பற்றற்றவர். குணங்களுக்கு இறைவனாய் இருந்தும் குணங்களற்றவர். அசையும், அசையா அனைத்திலும் உள்ளும் புறமும் உள்ளார். தூரத்திலும் இருக்கிறார், அருகிலும் இருக்கிறார், எனினும், ஜடப் புலன்களால் அவரைக் காணவோ, அறியவோ இயலாது.
அவர் ஜீவர்களில் பிரிந்திருப்பதாய் தோன்றினாலும், பிரிவற்றவர். உயிரினங்க்களைப் பாதுகாவலனாயும், அழிப்பவராயும், அபிவிருத்தி செய்பவராயும், பிரகாசங்களுக்கு மூலமாயும் இருக்கிறார். இருளுக்கு அப்பாற்பட்டவராயினும், தோன்றாதவராய் இருக்கிறார். ஞானம், ஞானத்தின் லட்சியமான அவர், அனைவரின் இதயத்திலும் இருக்கிறார்.
இவ்வாறாக க்ஷேத்ரம், அதை அறிபவன், ஞானம் அனைத்தும் சுருக்கமாக என்னால் விவரிக்கப்பட்டன. என் பக்தர்கள் மட்டுமே இவைகளைத் தெளிவாய் அறிந்து, எனது இயற்கையை அடைய இயலும்.
இந்த ஜட இயற்கையும், உயிரினங்களும் துவக்கமற்றவை. ஆனால் அவை இரண்டின் மாற்றங்களும் (ஆரம்பம், வளர்ச்சி, தேய்வு, முடிவு), குணங்களும் - ஜட இயற்கையிலிருந்தே உண்டாகின்றன, ஆன்மாவிற்கு சம்பந்தமில்லை.
செயல்கள், விளைவுகளுக்கு காரணம் ஜட இயற்கையாகும். ஆனால் இன்பதுன்பங்களுக்கு காரணம் உயிரினங்கள் மட்டுமே. அவன் இயற்கையின் தொடர்பால் முக்குணங்களின்படி பல சரீரங்களில் வாழ்ந்து, நன்மை தீமைகளைத் துய்க்கிறான்.
இருப்பினும் இவ்வுடலில் உன்னதமான ஓர் அனுபவிப்பாளர் இருக்கிறார். அவரே பரம புருஷர், உரிமையாளர், அனுமதிப்பவர், மேற்பார்வையிடுபவர், பரமான்மா ஆவார்.
இயற்கை, உயிர்வாழி - இரண்டுக்கும் இடையேயான இயற்கைக் குணங்களின் விளைவுகள் இவை தொடர்பான உண்மைகளைப் புரிந்து கொள்பவன் நிச்சயமாக விடுதலை பெறுகிறான். எந்த நிலையிலும் அவன் மீண்டும் பிறப்பதில்லை.
தியானத்தால் சிலரும், ஞான விருத்தியால் சிலரும், பலனோக்காத செயல்பாட்டினால் சிலரும் பரமாத்வாவை உணர்கின்றனர்.
ஆன்மீக அனுபவங்கள் இல்லாவிடிலும், பிறரிடம் கேட்டறிந்து இறைவனை வழிபடுகின்றனர். அவர்கள் கேட்பதற்கான ஆவலால் மாத்திரம் பிறப்பு, இறப்பெனும் சுழலில் சிக்காது உயர்கின்றனர்.
பாரதர்களின் தலைவா, சராசரங்களில் நீ காண்பவை எல்லாம் க்ஷேத்ரம், க்ஷேத்ரக்ஞன் இரண்டின் கலவையே.
எல்லா உயிர்களிலும் ஜீவான்மாவைத் தொடர்பவராக பரமான்மாவைக் காண்பவனும், அவர்கள் அழிவற்றவர்கள் என்பதை அறிந்து கொள்பவனுமே உண்மையில் காண்பவனாவான். அவன் மனத்தால் தன்னை தரமிழக்கச் செய்து கொள்வதில்லை, தெய்வீக இலக்கை அடைகிறான்.
செயல்களுக்கெல்லாம் காரணம் ஜட இயற்கையால் ஆன உடலே, ஆன்மா அல்ல என அறிபவன் உண்மையைக் கண்டவனாகிறான்.
பரமாத்வாவிற்கு சொந்தமில்லாத, ஜடத்தோற்ற வேறுபாடுகளைக் காணும் நிலையைக் கடந்து விடும்போது ஒருவன் பிரம்ம நிலையை அடைகிறான். உயிரினங்கள் பரந்து இருப்பதையும் காண்கிறான்.
அர்ஜூனா, நித்தியமான, தெய்வீகமான, குணங்களுக்கு அப்பாற்பட்டதான ஆன்மா, ஜடத்தொடர்பால் உடல் பெற்றாலும் அது எதையும் செய்வதோ, சிக்குவதோ இல்லை.
எங்கும் நிறைந்துள்ள ஆகாயம் தனது நுட்பமான இயற்கையால் களங்கமற்று இருப்பது போல, பிரம்ம உணர்வில் திளைக்கும் ஆன்மாவும் ஜட தேகத்தால் களங்கமடைவதில்லை.
பரத மைந்தா, கதிரவன் அகிலமெல்லாம் பிரகாசிப்பது போல், ஆன்மா உணர்வால் உடலெங்கும் பிரகாசிக்கிறது.
உடலுக்கும், அதன் உரிமையாளனுக்கும் இடையேயான இந்த வேறுபாட்டினை அறிந்து கொண்டவனும், விடுபடும் முறையை அறிபவனுமான ஒருவன் பரம இலக்கை அடைகிறான்.
No comments:
Post a Comment