Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, November 13, 2014

பகவத்கீதை |அத்தியாயம் 12 பக்தி யோகம்

பகவத்கீதை | பக்தி யோகம்
ஞான யோக பக்தி யோகங்களுள், ஞான யோகம் தாமதித்தே பலனளிக்குமென்றும், அதில் மனதை நிறுத்துவது கஷ்டமானதென்றும், பக்தியோகமோ கடுகப் பலனளிக்குமென்றும், அதில் மனதை நிறுத்துவது சுலபமானதென்றும் கூறப்படுகிறது. பிறகு பக்தி யோகத்தைப் பெறுவதற்குரிய உபாயங்கள் கூறப்படுகின்றன. பக்தர்கள் பிறரிடத்தில் சிநேக பாவத்துடனும் அகங்கார மற்றும், இன்ப துன்பங்களைச் சமமாய் எண்ணியும், கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடனும் இருக்க வேண்டும். தன்னைப் பிறர் இகழ்ந்து பேசினாலும் புகழ்ந்து பேசினாலும் மனதில் மாறுதலடையக் கூடாது. இவ்விதமான பக்தர்களிடத்தில் தான் கடவுளுக்கு அதிக பிரீதி.
அர்ஜுந உவாச
1. அர்ஜுனன் சொல்லுகிறான்: இங்ஙனம் எப்போதும் யோகத்தமர்ந்து நின்னை வழிபடும் தொண்டர்களா அல்லது நாசமற்றஅவ்யக்தவஸ்துவை வழிபடுவோரா இவ்விரு திறத்தாரில் யோக ஞானத்திலே மேம்பட்டார் யாவர்?முன் அத்தியாயத்தின் கடைசி சுலோகத்தில் சொல்லியபடி சகுண பிரம்ம உபாசனை செய்வது சிறந்ததா அல்லது நிருபாதி, நிர்விஷய, நிர்க்குண பிரம்ம உபாசனை செய்வது சிறந்ததா என்பது கேள்வி.
ஸ்ரீபகவாநுவாச
2. ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: என்னிடத்தே மனத்தைச் செலுத்தி நித்திய யோகிகளாய் உயர்ந்த நம்பிக்கையுடன் என்னை வழிபடுவோர் யாவர், அவர்களே சிறந்தோரென நான் கருதுகிறேன்.பகவான் விசுவரூபத்தை யுடையவர்; பரமேசுவரன். அவர் சகுண பிரம்மம். உலகுக்கு அந்தர்யாமியாயிருந்து அதை ஆளுகிறார். யோகிகளுக்கெல்லாம் அவரே மேலான ஈசுவரன். சர்வக்ஞன் என்று அவரைத்தான் சொல்ல வேண்டும். முழுமனதையும் ஒழுங்குப்படுத்தி அவர்மீது செலுத்துகிறவர்கள் பக்தர்கள். அவர்களுக்கு விருப்பு, வெருப்பு, மனக்கிலேசம் முதலியன கிடையா. இரவும் பகலும் இறைவனைப் பற்றிய சிந்தனை யொன்றே அவர்களின் உள்ளத்தில் குடிகொள்கிறது. அவர்கள் உயிர் வாழ்ந்திருப்பதும் இறைவன் பொருட்டேயாம். ஆதலால் அவர்கள் சிறந்த யோகிகள் ஆகிறார்கள்.கடவுளை அரூபியெனத் தியானிப்பது முற்றிலும் சரியானதே. ஆனால் அதுதான் உண்மை, மற்றக் கொள்கைகளெல்லாம் பொய் என்று எண்ணிவிடாதே. அவன் ரூபி எனத் தியானிப்பதும் சரியானதே. ஆனால் அவனை நீ காணும் வரையில் உனது பிரத்தியேகமான கொள்கையைக் கைவிடாதே. அப்பால் எல்லாம் தெளிவாகும். மற்று, நிர்க்குண நிராகார பிரம்மத்தை உபாசிப்பவர்கள் சிறந்த யோகிகள் ஆகமாட்டார்களா? அதற்கு விடை வருகிறது :
3. இனி, அழிவற்றதும், குறிப்பற்றதும், அவ்யக்தமும் (தெளிவற்றதும்), எங்கும் நிறைந்ததும், கருதொணாததும், நிலையற்றதும், அசைவற்றதும், உறுதிகொண்டதுமாகிய பொருளை யாவர் வழிபடுகின்றனரோ
4. இந்திரியக் குழாத்தை நன்கு கட்டுப்படுத்தி எங்கும் சமபுத்தியுடையோராய் எல்லா உயிர்களுக்கும் நன்மை விரும்புவோராகிய அவர்களும் என்னையே அடைகிறார்கள்நிர்க்குண பிரம்மம் எத்தகையது என்பது விளக்கப்படுகிறது. அது அநிர்தேச்யம்-உலகப்பொருள் எதனோடும் சீர்தூக்க இடந்தருகிறதில்லை யாதலால் அது எத்தகையது என்ற சொல்லால் விளக்க முடியாது. உலகமோ தோன்றவும் மறையவும் செய்கிறது. தோன்றியபொழுது வியக்தமாகவும் மறைந்தபொழுது அவ்யக்தமாகவும் உலகம் இருக்கிறது. ஆனால் பரபிரம்மத்தின் கண் இத்தகைய விகாரம் ஒன்றும் கிடையாது. அதீதத்தில் அது இருந்தபடி இருக்கிறது. ஆதலால் அது அவ்யக்தம். கடலின் கீழ் உள்ள பனிக்கட்டி தோன்றாது இருந்தபடி இருப்பது போன்றதா பிரம்மம் என்ற கேள்வி எழுகிறது. அப்படியல்ல, இது ஸர்வத்ரகம்-அங்கு இங்கு என்று சொல்ல இடந்தராது நீக்கமற எங்கும் நிறைபொருள். இடமே அதனுள் ஒடுங்கியது எனலாம். சொப்பனத்தில் பார்த்த ஒரு பெரிய இடம் மனதில் ஒடுங்குகிறது. அதே மனதானது நன்மை தீமை, இன்ப துன்பம் ஆகியவைகளை எண்ணவும் உணரவும் செய்கிறது. ஆனால் அம்மனது பிரம்மத்தை உணரவல்லதன்று. பிரம்மம் அசிந்த்யம்-சிந்தனைக் கெட்டாதது. கூட என்ற சொல் மாறுபடும் தன்மையுடையது என்று பொருள்படுகிறது. பிரபஞ்சம் மாறுபட்டுக் கொண்டே இருக்கிறது. மாறுபடும் பிரபஞ்சத்துக்கு பிரம்மம் இருப்பிடமாகிறது. நிலையற்றதை இது நிலைத்திருந்து தாங்குவதால் இதற்கு கூடஸ்தன் என்று பெயர். ஓயாது மாறுபடுகிற மேகத்தைத் தூக்கிக்கொண்டு காற்று நகர்ந்தோடுகிறது. சலிப்பது காற்றின் இயல்பு. பிரம்மத்திலோ சலனம் இல்லை. அது அசலம்-நகராதது. இனி, ஆகாசம் அசைவதில்லை. இருந்தபடி அது தோன்றுகிறது. பிரளயத்தில் இருந்தபடி அது அழிகிறது. பிரம்மம் அத்தகையதோ? அல்ல, அது த்ருவம்-நிலைபேறு உடையது. சுத்த சைதன்யமாகிய அது கால தேச வர்த்தமானத்தால் அடிபடாதிருப்பதால் அது அக்ஷரம், அதாவது அழியாதது.இனி, நிர்க்குண பிரம்ம உபாசனைக்குத் தகுதியுடையவர் யார் எனின், அவர்களிடத்து சமபுத்தி யிருக்க வேண்டும். இன்பம் தருபவைகள், துன்பம் தருபவைகள் ஆகிய இரண்டையும் ஒரே பான்மையுடன் கருதுதல் சமபுத்தியாகும். இந்திரியக் கூட்டங்களை யெல்லாம் யார் நன்கு கட்டியாளு கிறார்களோ அவர்களுக்கே மனதின் நடுநிலை வந்தமைகிறது. மனதின் நடுநிலை என்பது உலகுக்குப் பயன்படாது பிணம்போன்று கிடப்பதல்ல. எல்லா உயிர்களையும் பிரம்ம சொரூபமாகக் கண்டு அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும். அவர்களின் நன்மையில் நாட்டம் வைத்திருப்பதற்குச் சேவை செய்வதே அறிகுறியாகும். ஒரு சிலர் பிரம்ம சொரூபத்தில் லயித்துக் கர்மமற்றிருப்பார்கள். அங்ஙனம் ஜீவர்களை யெல்லாம் பிரம்ம சொரூபமாகக் காண்பதும் அந்த ஜீவர்களுக்கு பரம நன்மையை விளைவிக்கிறது. தைலதாரை போன்று இடையறாது மனது பிரம்ம சொரூபத்தில் போவது உபாஸனையாகும்.
மணியை அடிக்கும்போது, அடுத்தடுத்து வரும் அதன் ஒவ்வொரு ஓசையும் தனித்தனி உருவத்தையுடையதுபோலத் தோன்றும்; ஆனால் அடிப்பதை நிறுத்தினால் ஓசை சிறிது நேரம் வரையில் கேட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தொழியும். தெளிவற்ற சப்தமோ உருவமில்லாதது போலத் தோன்றுகிறது. மணியின் ஓசையைப் போலக் கடவுள் உருவமுள்ளவனாயும் உருவமில்லாதவனாயுமிருக்கிறான்.இரண்டு உபாஸனையும் ஒன்று எனில் எதை வேண்டுமானாலும் ஒருவன் உபாஸிக்கலாமா? உபாஸிக்கலாகாது. ஏனென்றால் : (3-4)
5. ஆனால், அவ்யக்தத்தில் மனம் ஈடுபட்டோர்க்குத் தொல்லையதிகம், உடம்பெடுத்தோர் அவ்யக்த நெறியெய்துதல் மிகவும் கஷ்டம்.இருதர உபாஸகர்களும் அடையும் குறி ஒன்றே. ஆனால் தேகாபிமானம் உடைய ஒருவனுக்கு நிர்க்குண பிரம்ம உபாஸனையைவிட சகுண பிரம்ம உபாஸனை எளிது. நிர்க்குண பிரம்ம உபாஸகன் துவக்கத்திலேயே உடல் பற்றை அறவே நீக்க வேண்டும். பிஞ்சாகிக் காயாகிக் கனியாகின்றவிடத்து மேலோடு பழத்தினின்று தானாகப் பிரிந்து போகிறது. அங்ஙனம் ஞான முதிர்ச்சி யடைபவனுக்கு தேகாபிமானம் போய்ஒழிகிறது. தேகப்பற்றுடையவனுக்கு எளிதாயிருப்பது சகுண பிரம்ம உபாஸனை. அதில் துவக்கி மேல் நோக்கிப் போகின்றவனுக்கு சாதனத்தில் அதிக சிரமம் ஏற்படுவதில்லை.
ஞானயோகி நானே பிரம்மம் என்கிறான். ஆனால் சரீரத்தை ஆத்மன் என்று கருதும் வரையில் அவ்வித பாவனை கெடுதியை உண்டுபண்ணும். அவனை அத்யாத்மிக வாழ்க்கையில் முன்னேறச் செய்யாமல் நாசப்படுத்திவிடும். அவன் மற்றவர்களை ஏமாற்றுகிறதோடு தன்னையும் ஏமாற்றிக்கொள்கிறான்.
இனி, ஈசுவர உபாஸனை எப்படிச் செய்யவேண்டும்? விடை வருகிறது :
6. எல்லாத் தொழில்களையும் எனக்கெனத் துறந்து, என்னைப் பரமாகக் கொண்டு, பிறழாத யோகத்தால் என்னை நினைத்து வழிபடுவோர் யாவர்?
7. என்பால் அறிவைப் புகுத்திய அன்னோரை நான் மரணசம்சாரக் கடலினின்றும் விரைவில் தூக்கிவிடுவேன்
விசுவ ரூபத்தையுடைய ஈசுவரனைத் தவிர வேறு ஒன்றையும் பற்றுக்கோடாகக் கொள்ளாது அவனையே சார்ந்து யார் அவனுக்கென்றே பணி செய்யும் பான்மை யுடையவர்களாயிருக்கிறார்களோ அவர்கள் பிறப்பு இறப்பு மயமாயுள்ள சம்சாரப் பெருங் கடலினின்று விரைவில் கரையேற்றப்படுகிறார்கள்.ஈசுவரானுபவத்துக்கும் அடையாளங்கள் உள்ளன. பக்தி எவனிடம் பொங்கித் ததும்புகின்றதோ அவனுக்கு வெகு சீக்கிரத்தில் ஈசுவர தரிசனம் கிடைக்குமென்று தெரிந்துகொள்.
அதற்காக ஜீவன் செய்யவேண்டியதென்ன? விடை வருகிறது : (6-7)
8. மனதை என்பால் நிறுத்து; மதியை என்னுட் புகுத்து, இனி நீ என்னுள்ளே உறைவாய்; ஐயமில்லை.உணர்ச்சி மயமாயிருப்பது மனது. தீர்மானிக்கும் தன்மையது புத்தி. இவ்விரண்டும் அந்தக் கரணத்தின் பிரிவுகள். ஒருவனது உடல் எங்கே இருக்கிறது என்பதிலிருந்து அவனது வாசஸ்தானத்தை அறிய வொண்ணாது. உள்ளம் எங்கிருக்கிறதோ மனிதன் அக்கணமே அங்கிருக்கிறான். இப் பூவுலகிலேயே சிலர் நரக வாசம் செய்கின்றனர்; வேறு சிலர் விண்ணுலகு நண்ணியவர் போன்று இன்பமடைகின்றனர். இங்கு இருந்தபடியே சித்தத்தைச் சிவத்தின்பால் வைத்து அவனது சந்நிதி சேருவார் உளர். அகம் எப்படியோ புறம் அப்படி. உள்ளத்தை இறைவனிடம் வைத்தது முதற்கொண்டு ஒருவன் இறைவனிடத்தே வசிக்கிறான் என்பதற்கு அவனது மனநிலையே சான்று. ஆதலால் அதைப் பற்றி ஐயமில்லை என்கிறார் பகவான். உலகத்தில் மனிதன் பிறக்கும்போது, வித்தியாகுணம் அவித்யா குணம் என்ற இரண்டு குணங்களுடன் பிறக்கிறான். வித்தியா குணம் முக்தியை அடையச் செய்யும். அவித்யா குணமோ மனிதனை உலகப் பற்றுக்குள்ளாக்கும். பிறக்கும்போது இவ்விரு குணங்களும் தராசின் தட்டுகளைப் போலச் சரிசமமாக இருக்கும். சீக்கிரமத்தில் உலக இன்பங்கள் ஒரு தட்டிலும் ஆத்ம விஷயங்கள் மற்றொரு தட்டிலும் ஏற்றப்படுகின்றன. மனம் உலக சுகங்களை விரும்புமானால் அவை வைக்கப்பட்டிருக்கும் தட்டு கனத்துக் கீழே செல்லும். அவ்வாறன்றி ஆத்ம விஷயத்தை மனம் பற்றுமானால் அவ்வாத்ம விஷயங்களடங்கிய தட்டு ஈசுவரனை நோக்கித் தாழும்.
உள்ளத்தை உறுதியாக இறைவன்பால் வைக்க இயலாதவர் என்ன செய்வது? விடை வருகிறது:
9. என்னிடம் ஸ்திரமாக நின் சித்தத்தைச் செலுத்த நின்னால் முடியாதென்றால், பழகிப் பழகி என்னையடைய விரும்பு.
மனது உறுதியாக இறைவன்பால் நிலைத்து நின்றுவிடுமானால் அது முதிர்ந்த பக்தியாகிறது. அப்படியல்லாது அது விஷயாதிகளில் சலித்து ஓடும் தன்மையதானால் பழக்கத்தால் அதை ஒழுங்குப்படுத்தவேண்டும். விஷயங்களிலிருந்து அதை மீட்டெடுத்து பகவானிடம் வைப்பதற்கு அப்பியாச யோகம் என்று பெயர். நல்லியல்பு, கெட்ட இயல்பு இரண்டுக்கும் அப்பியாசமே காரணமாகிறது. பழக்கத்தால் ஆகாததை ஆகும்படி செய்யலாம். ஒரு மனிதன் ஒரு நாயை வெகு பிரியமாக வளர்த்து வந்தான். அவன் அதனோடு கொஞ்சுவான்; விளையாடுவான். அதைக் கைகளில் தூக்கிக்கொண்டு போவான்; அதை முத்தமிடுவான். இந்த முட்டாள்தனத்தைக் கவனித்த ஓர் அறிஞர் நாயுடன் அப்படிப் பழகலாகாது என்றார். நாயின் சொந்தக்காரன் அதைக் கேட்டதும் நாயைத் தூர எறிந்துவிட்டான். இனி, அதனோடு கொஞ்சிக் குலாவுவதில்லை என்றும் தீர்மானித்தான். தன் எஜமானனது மாறிய மனதை நாய் அறியவில்லை. அது அடிக்கடி அவனிடம் ஓடிவந்து குலாவத் தலைப்பட்டது. நன்றாய்ப் பல தடவை அடிபட்ட பிறகுதான் அது தன் எஜமானனைத் தொந்தரவு செய்வதை விட்டது. உனது நிலைமையும் அப்படிப்பட்டதே. உன் மனதில் இதுவரையில் வைத்துப் போற்றி வந்த ஆசை என்னும் நாயை நீ விடவேண்டுமென்றாலும் அது உன்னை எளிதில் விடாது; இருந்தாலும் பாதகமில்லை. அந்த நாயோடு இனிமேல் கொஞ்சிக் குலாவாது, உன்னிடம் அது குலாவ வரும்போதெல்லாம் அதை நன்றாய் அடி. காலக்கிரமத்தில் அதனுடைய தொந்தரைகள் உனக்கு முற்றிலும் இல்லாமலே அகன்றொழியும்.
மனது அப்பியாசம் என்ற கட்டுக்கு அடங்குவது இல்லவே இல்லை. அப்பொழுது என் செய்வது? விடை வருகிறது :
10. பழகுவதிலும் நீ திறமையற்றவனாயின் என் பொருட்டுத் தொழில் செய்வதை மேலாகக் கொண்டிரு. என் பொருட்டுத் தொழில்கள் செய்து கொண்டிருப்பதனாலும் சித்தி பெறுவாய்.அப்பியாசம் செய்ய மனது ஒருப்படாதவிடத்து அது நெடு நாளாக வழக்கமாகச் செய்துவந்த வினையில் ஈடுபடுகிறது. பற்றுதலால் வந்த வினையைத் தனக்கென்று செய்யாது ஈசுவரனுக்காக வென்று செய்யுங்கால் சாதகன் இறைவன் கையில் கருவி போல ஆகிறான். கருவிக்குத் தனிச் சுதந்திரம் கிடையாது. சாதகன் தன்னைக் கருவியாக எண்ணி வினையாற்றுவதால் சித்த சுத்தி உண்டாகி ஞானத்தைப் பெற்றுப் பக்குவமடைகிறான். இறைவனுக்குக் கைங்கரியம் செய்வதால் ஜீவபோதம் போய்ப் பரபோதம் வருகிறது.எல்லாம் ஈசுவரனுடைய ஆக்ஞையால் நடக்கின்றனவென்றும் தான் ஈசுவரன் கையில் வெறும் கருவியென்றும் எவனுடைய மனதில் பதிகின்றதோ அவன் ஜீவன் முக்தனாவான். ஈசுவரா, உனது காரியத்தை நீயே செய்தருள்கிறாய். ஆனால் நான் செய்கிறேன் என்று ஜனங்கள் சொல்கின்றனர்.
கர்மத்தைத் தனக்காகவென்றே செய்யும் தன்மை யுடையவனுக்குக் கர்மபந்தம் ஒழிய வழியில்லையா? விடை வருகிறது :
11. இதுவும் நின்னால் செய்யக்கூடவில்லை யென்றால், என்னுடன் லயித்திருப்பதை வழியாகக் கொண்டு, தன்னைத்தான் கட்டுப்படுத்தி எல்லாச் செயல்களின் பயன்களையும் துறந்துவிடு.முழு மனதை இறைவனுக்கென்றே ஒப்படைத்து விடுவது சிறந்தது. அதில் சாதனம் பூர்த்தியடைகிறது. அப்பெருநிலையில் நிலைத்திருக்க இயலாதவர்கள் பழக்கத்தால் மனதை இறைவன்பால் திருப்பவேண்டும். மனம் வெளிஉலகப் பிரவிருத்தியில் நாட்டம் கொள்ளும் தன்மையதானால் அப்பியாசம் செய்வதும் கடினமாகும். அப்பொழுது பகவானுக்கென்றே பணிவிடை  செய்வது சிலாக்கியம். கர்மத்தில் வைத்த பற்றுதலாலும், தன் கர்மத்துக்குத் தானே கர்த்தாவென்று எண்ணுவதாலும் கர்மபலத் தியாகம் உண்டாவதில்லை. பெரும்பற்றுடையவன் குறிப்பிட்ட சில வேளையிலாவது தன் கர்மமெல்லாம் ஈசனுடைய கர்மம் என்று தனக்கு ஞாபகமூட்டி வருவானாகில் அந்த எண்ணம் நாளடைவில் அவனைப் பக்குவப்படுத்தும்.உன்னால் கர்மம் செய்யாமல் இருக்க முடியாது. ஸ்வபாவம் ஒவ்வொருவனையும் கர்மம் செய்யும்படி ஏவுகின்றது. ஆகையால் கர்மங்கள் முறையாகச் செய்யப்படட்டும். கர்மம் பற்றுதலின்றிச் செய்யப்படுமானால் அது பகவானிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும். இகபரங்களில் உண்டாகும் பாவ புண்ணியங்களில் வெறுப்பு விருப்புக் கொள்ளாமல் செய்யப்படும் கர்மம் பற்றுதலற்றதாகும். இவ்வித மனோபாவத்துடன் செய்யப்படும் கர்மம் முடிவில் கடவுளிடம் கொண்டுபோகும் மார்க்கமாக அமைகிறது.
பக்குவமடைதலின் அறிகுறி யாது? அதன் விளக்கம் வருகிறது :
12. பழக்கத்தைக் காட்டிலும் ஞானம் சிறந்தது. ஞானத்தைக் காட்டிலும் தியானம் சிறந்தது. தியானத்தை காட்டிலும் செய்கைப் பயன்களைத் துறந்துவிடுதல் மேம்பட்டது. அத்துறவைக் காட்டிலும் சாந்தி உயர்ந்தது.ஒருவன் ஆலயத்தை வலம் வந்து சர்வ திக்கிலும் திரும்பி நமஸ்காரம் செய்கிறான். தான் ஏன் அப்படிச் செய்யவேண்டுமென்று அவனுக்குத் தெரியாது. எல்லாரும் செய்வதைப் பார்த்துக் குருட்டுப் போக்காக அவனும் அப்பழக்கத்தில் ஈடுபடுகிறான். கடவுள் எங்கும் நிறைந்தவர் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுதற்கே அத்தகைய வழிபாடு ஏற்பட்டுள்ளது என்பது அவனுக்குத் தெரியாது. விவேகமில்லாத அந்த அப்பியாசத்தைக் காட்டிலும் கடவுள் எங்கும் நிறைபொருள் என்ற வாசா ஞானம் சிறந்தது. அந்த வாசா ஞானத்தோடு நின்று விடுவதை விட சாதகன் காண்கின்ற அனைத்தும் பரமன் மயம் என்று தியானிப்பது மேலானது. அனைத்தையும் கடவுள் மயமாகத் தியானித்து அவைகளைத் தன் காரியத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று எண்ணலாகாது. தான் வாழ்ந்திருப்பது கடவுளுக்காக வென்று கருதித் தனது கர்மத்தின் பயன் முழுவதையும் அவனுக்கு அர்ப்பணம் பண்ணவேண்டும். தான் செய்கின்ற கர்மம் தனக்காகவல்ல, கடவுளுக்காகவே செய்யப்படுகிறது என்ற நினைவு தோன்றுகிற அதே வேளையில் சாந்தியும் வருகிறது. தனக்கென்று தொழில் புரிபவன் அசாந்தியடைகிறான். இறைவனுக்கென்று தொழில் புரிபவன் இன்பமடைகிறான். ஒரு பருந்து அலகில் ஒரு மீனைக் கௌவிக் கொண்டிருந்தது. அதைப் பிடுங்குதற்காகச் சில காக்கைகளும் பருந்துகளும் அப் பருந்தைப் பின்தொடர்ந்து கொத்தி ஆரவாரித்தன. அது எத்திக்கில் சென்றாலும் காகங்களும் பருந்துகளும் கூடவே பறந்து சென்றன. தொந்தரவைப் பொறுக்கமாட்டாமல் அப்பருந்து மீனை அப்பால் போட்டுவிட்டது. உடனே அதை வேறொரு பருந்து கௌவிக்கொள்ள காகங்களும் மற்ற பருந்துகளும் இந்தப் புசிய பருந்தைத் தொந்தரவு செய்யத் தொடங்கின. ஆனால் உபத்திரவத்தினின்று தப்பித்த முதல் பருந்து சாந்தமாய் ஒரு மரக்கிளையில் உட்கார்ந்திருந்தது. இப்படி சாந்தமாய் விருக்கும் பக்ஷியைப் பார்த்து வணங்கி, ஓர் அவதூதர், பருந்தே, நீ எனக்கு குரு. உலகப்பற்றுக்களாகிய சுமையை மனிதன் கீழே போடாத வரையில் அவனால் உலக சஞ்சலங்களினின்றும் தப்பித்துக்கொள்ள முடியாது. அவனுக்குச் சமாதானம் ஏற்படாது. இதை நீ எனக்குக் கற்பித்தாய் என்றார்.
எத்தகையவன் கடவுளுக்கு உவந்த பக்தனாகிறான்? விடை வருகிறது :
13. எவ்வுயிரையும் பகைத்தலின்றி, அவற்றிடம் நட்பும் கருணையும் உடையவனாய், யானென்பதும் எனதென்பதும் நீங்கி இன்பத்தையும் துன்பத்தையும் நிகராகக் கொண்டு பொறுமையுடையவனாய்,
14. எப்போதும் மகிழ்ச்சி யுடையவனாய், தன்னைக் கட்டியவனாய், திட நிச்சயமுடையவனாய், என்னிடத்தே மனத்தையும் மதியையும் அர்பணஞ் செய்து என் தொண்டனாகிய யோகி எனக் கினியவன்.வெறுப்பானது வேற்றுமையை வளர்க்கிறது; உடலெங்கும் விஷத்தை உண்டுபண்ணுகிறது. ஆதலால் வெறுப்பு நல்வாழ்க்கைக்கு உதவாது. வெறுப்பு அற்றிருந்தால் மட்டும் போதாது. ஜடப்பொருள்கள் வெறுப்பதில்லை. உயிர் வாழ்பவன் எல்லா உயிர்களிடத்தும் நட்புக்கொள்ளவேண்டும். அன்பின் வழியது உயிர் நிலை; அஃது இலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. ஆக, நட்பே உயிர்களை இணைக்கின்றது. பிறரைத் தன் காரியத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளுதற்கு ஒருவன் உறவாடலாம். அது பொருந்தாது. தன் வாழ்க்கை பிறருக்குப் பயன்படும்படி செய்யவேண்டும். அப்பொழுதே அது கருணை எனப் பெயர் பெறுகிறது. பிறரிடத்துக் கருணை காட்டுவதால் தன் பொருளுக்கே நஷ்டம் வரலாம். அதைப் பொருள்படுத்தாத நிலை மமகாரம் அற்ற நிலையாம். எனது என்ற எண்ணம் ஒழிந்து பட்டுப்போகிறது. உடல் அபிமானம் அஹங்காரம் என்று சொல்லப்படுகிறது. கருணையின் மேலீட்டால் பக்தன் ஒருவனுக்கு அஹங்காரம் அறவே அகன்றுவிடுகிறது. தன் பொருள், தன் உடல்வாழ்க்கை இவைகளை மதியாமையினால் ஒருவனுக்கு இன்பமே வந்தமையலாம் அல்லது துன்பமே வந்தமையலாம். அவைகளை இன்ப துன்பமாக அவன் பாகுபடுத்துவதில்லை. தனக்குற்ற துன்பத்தைச் சகித்துக்கொண்டு துன்பம் செய்தவனிடத்துப் பொறாமை பூணலாம். பக்தன் ஒருவன் அப்படிப் பொறாமை கொள்வதில்லை. தன்னைத்தானே மன்னிப்பது போன்று மற்றவர்களையும் மன்னிக்கிறான். துன்பத்தைச் சகித்தல் ஒருவித எதிர்மறை நிலையாகிறது. பக்தனோ இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்ற கோட்பாட்டின்படி சந்தோஷமுடையவனாயிருக்கிறான். வாழ்க்கையில் அடக்கமும் ஒழுங்குப்பாடும் நன்கு அமைந்திருப்பதால் அவன் யோகியாகிறான். பாரமார்த்திக விஷயத்தில் அவனுக்குச் சந்தேகம் கிடையவே கிடையாது. அதைப்பற்றி அவனுக்கு உறுதியான நிச்சய புத்தி யிருக்கிறது. யோகத்தால் தான் பெற்ற தெள்ளிய மனதையும் புத்தியையும் அவன் கடவுளுக்கென்றே ஒப்படைக்கிறான். இங்ஙனம் பகவானிடத்து பக்தி பண்ணுபவனே அவனுக்கு முற்றும் உவந்த தோழனாகிறான்.
மனிதன் சமர்ப்பிக்கும் சொத்துக்களையெல்லாம் ஈசுவரன் மதிக்கிறானோ? இல்லவே இல்லை. பக்தியையும் பிரேமையையும் எவனொருவன் ஸமர்ப்பிக்கிறானோ அவனுக்கு மட்டுந்தான் ஈசுவரனுடைய கிருபை உண்டாகும். தன் பொருட்டு உண்டாகும் பக்திப் பிரேமைகளையும் விவேக வைராக்கியங்களையுமே ஈசுவரன் சிலாகித்துக் கொண்டாடுகிறான். (13-14)
இன்னும் யார் அவனுக்கு உவந்தவர்கள்? விடை வருகிறது :
15. எவனை உலகத்தோர் வெறுப்பதில்லையோ, உலகத்தாரை எவன் வெறுப்பதில்லையோ, களியாலும் அச்சத்தாலும், சினத்தாலும் விளையும் கொதிப்புகளினின்றும் எவன் விடுபட்டானோ அவனே எனக்கினியவன்பக்தன் ஒருவனுடைய வாழ்க்கை உலகுக்கு ஒரு நாளும் இன்னல் விளைவிப்பதில்லை. இன்னல்போன்று தோன்றும் சில செயல்கள் உண்மையில் ஹிதமாகவே முடியும். ஆசிரியர் மாணாக்கனைக் கண்டிப்பது, மருத்துவர் ரணவைத்தியத்தில் நோயாளிக்குத் துன்பம் விளைவிப்பது, அறப்போரில் வீரன் எதிரியைத் தாக்குவது இவையாவும் வெளித்தோற்றத்திற்கு இடர் போன்று இருப்பினும் உண்மையில் உலகுக்குச் செய்த நன்மைகளாகும். இனி, தனது உடல் வாழ்க்கையில் தனக்கு என்ன தான் கேடுவந்தாலும் அதனால் அவன் கிலேசமடைவதில்லை. துன்பப்படாத உயர்ந்த மன நிலையையுடைய ஒருவனைப் புற உலகம் எவ்விதத்திலும் வருத்தப்படுத்த முடியாது. அப்பர், பிரஹ்லாதன் போன்றவர்கள் இதற்குச் சான்றாகிறார்கள். எத்தகைய பயிற்சியால் இத்தகைய மனநிலை வருகிறது என்ற கேள்வி எழுகிறது. அதற்கு விடை இதே சுலோகத்தில் வருகிறது. இன்பந்தரும் பொருள்களைப் பெற்று ஒருவன் களிப்புறலாகாது. களிப்புக்கு வசப்படும் மனது துன்பத்துக்கும் வசப்படக் கூடியது என்பதாகிறது. உறுதியான மனதே இன்பதுன்பம் இரண்டையும் சமனாகப் பாராட்டுகிறது. அமர்ஷம் என்பது சினம். ஒருவனுக்குக் கோபம் வருகின்றவளவு மனவலிவு குறைகின்றது. வலிவுடைய மரம் காற்றில் அசைவதில்லை. வலிவில்லாத கொடி காற்றில் அசைகிறது. கோபத்துக்கு உட்படாத மனது வலிவு பெற்று இன்பதுன்பங்களை நிகராகக் கருதுகிறது. பயம் மரணத்துக்கு ஒப்பானது. அஞ்சும் போதெல்லாம் ஒருவன் அழிந்துபட்டுப் போகிறான். அஞ்சாதிருப்பவனே உயிர் வாழ்கிறான். அச்சம் கலக்கத்தை உண்டு பண்ணுகிறது. கலங்கிய நீரில் பிம்பம் தெரிவதில்லை. தெளிந்த நீரில் பிம்பம் தெரிகிறது. அங்ஙனம் கலங்கிய மனதில் ஆத்ம சொரூபம் விளங்குவதில்லை. கலங்கா நெஞ்சம் படைத்தவனே இறைவனைக் காண்கிறான் இறைவனைக் கண்டதும் அவனுக்கு உவந்த பக்தனாகிறான். பிறருடைய குணதோஷங்களைப் பற்றிப் பேசுவதில் காலத்தைச் செலவிடுபவன் தன் காலத்தை வீணிலே கழிப்பவனாகிறான். ஏனெனில் அப்படிச் செலவிடப்பட்ட காலம் தன்னையாவது ஈசுவரனையாவது பற்றிச் சிந்திக்கப்படாமல் பிறரைப்பற்றி யாதொரு பிரயோஜனமுமில்லாமல் சிந்திக்கப்பட்ட காலமாகிறது.
16. எதனையும் எதிர்பார்த்தலின்றித் தூயோனாய், திறமுடையோனாய் பற்றுதலற்றவனாய், கவலை நீங்கியவனாய், எல்லா ஆடம்பரங்களையுந் துறந்து என்னிடம் பக்தி செய்வோனே எனக் கினியவன்இந்திரியங்கள் வாயிலாக வரும் இன்பங்களில் ஆசையற்றவன் அனபேக்ஷனாகிறான். அங்ஙனம் ஆசைகளை யகற்றுமளவு அவன் (சுசி:) தூயவனாகிறான். மனம், மொழி, மெய் மூன்றும் மாசற்றிருப்பது தூய்மை. அதனால் செயலில் சாமர்த்தியமுண்டாகிறது. எதிர்பாராது ஒரு கணப்பொழுதில் வந்தமையும் கருமத்தை உள்ளபடி அறிந்து கொள்ளவும் அதற்கேற்ப நடந்து கொள்ளவும் அவனுக்கு இயலுகிறது. அதை முன்னிட்டே அவனை தக்ஷ: என்று அழைக்கவேண்டும். செயலாற்றும் வல்லமையைத் தனக்கு ஒத்தவர்களுக்கு ஒருவிதமாகச் செய்தலும் ஒவ்வாதவர்களுக்கு வேறு விதமாகச் செய்தலும் அவனிடத்தில்லை. நிறைகோல் போன்று ஓரம் சாராதுஎல்லார்க்கும் பொதுவாக நடந்து கொள்வதனால் அவன் உதாஸீனன் ஆகிறான். அப்படி நேர்மையாக நடந்து கொள்பவனுக்கு மனத்துயரம் ஒரு நாளும் உண்டாவதில்லை. அவனுக்குக் கவலை கிடையாதெனினும் கர்ம பலனில் பற்றுவைத்திருக்கலாம் என்று நினைத்தல் கூடும். ஆனால் உண்மையில் அவன் பற்று அற்றவன். தனக்கென்று கருமம் செய்வதையெல்லாம் அவன் அறவே துறந்தவன் ஆகிறான். இறைவனிடத்திருந்து அவன் எதையும் எதிர்பார்ப்பதில்லை யாதலால் அவன் உண்மையான பக்தனாகிறான். ஆகையினாலே அவன் பகவானுக்கு மிக இனியவன் ஆகிறான்.தன் மனதை ஏமாற்றாத ஒருவனே பகவானது சந்நிதானத்தை அடையப்பெறுவான். அதாவது கள்ளங்கபடமற்ற தன்மையும் உண்மையான அன்பும் பரமனை அடைய உற்ற பாதைகளாகும்.
17. களித்தலும், பகைத்தலும், துயர்படுதலும், அவாவுறுதலும் இன்றி நன்மையையுந் தீமையையுந் துறந்த தொண்டனே எனக் கினியவன்.இன்பமூட்டுகிற பொருளைப் பெற்றால் உலக மக்கள் மகிழ்கின்றனர். பக்தனுக்கோ அத்தகைய பொருள் வருவதால் மகிழ்ச்சி உண்டாவதில்லை. வேண்டாதவை வந்து வாய்க்குமிடத்து அவர்கள் வெறுக்கின்றனர். பக்தனுக்கு அது கிடையாது. விரும்பிய பொருள் கிடைக்கவில்லை அல்லது கைவிட்டுப் போய்விட்டது என்ற துன்பம் அவனுக்கில்லை. கடவுள் பக்தியி லேயே அவனுக்குத் திருப்தியுண்டாகிறபடியால் ஆசைப்பட வேண்டிய அவசியம் பக்தனுக்கில்லை. அன்புருவாய் இருக்கும் குழந்தைக்குப் பாபபுண்ணியம் இரண்டும் தெரியாது. பக்தியின் மேலீட்டால் பக்தனும் நன்மை தீமை யிரண்டையும் மறந்துவிடுகிறான். இத்தகைய பாங்குள்ளவனே பகவானுக்கு உவந்த பக்தனாகிறான்.விருப்பு, வெறுப்பு, அச்சம் இவைகள் குடிகொண்டிருக்குமிடத்துக்கு ஈசுவரன் வருவதில்லை.
18.  பகைவனிடத்தும், நண்பனிடத்தும், மானத்திலும், அவமானத்திலும், குளிரிலும், வெப்பத்திலும், இன்பத்திலும் துன்பத்திலும் சமப்பட்டான்; பற்றுவிட்டான்.
19. புகழையும் இகழையும் நிகராகக் கொண்ட மௌனி, யாதுவரினும் அதில் மகிழ்ச்சியுறுவான். குறியற்றான், ஸ்திர புத்தியுடையான், இத்தகைய பக்தன் எனக் கினியவன்எல்லாரும் ஈசனுடைய குழந்தைகள். ஈசனுடைய வடிவங்களைப் பகையென்றும் நட்பென்றும் பிரிப்பது பொருந்தாது. புதிதாக ஏற்படும் களவுக் காதலர் அவமானத்துக்கு அஞ்சுகின்றனர்; மானத்தைக் காப்பாற்ற முயலுகின்றனர். முதிர்ந்த காதலோ அஃதொன்றையும் பொருள்படுத்துவதில்லை. முதிர்ந்த பக்தியின் போக்கும் அத்தகையது. உடலில் அபிமானம் உடையவனுக்குக் குளிர் உண்டு; வெப்பம் உண்டு. அவைகளின் காரியமாக வரும் இன்ப துன்பம் முதலியனவுண்டு. உழைப்பாளி உடலைப் பொருள்படுத்தாது உழைப்பிலேயே கண்ணும் கருத்துமாயிருப்பது போன்று பக்தன் பகவத் சேவையிலேயே கண்ணும் கருத்துமாயிருக்கிறான். வெயில், மழை, உணவு, ஓய்வு இவைகளைப் பற்றி அதிகம் நினைக்க அவனுக்கு நேரமில்லை. உடல் அபிமானம் நீங்குமளவு அவன் இயல்பாகவே பற்றற்றவன் ஆகிறான் நடு வீதியில் நின்றுகொண்டு அழுகின்ற ஆள் ஒருவனைப் பார்த்து உலகம் இகழ்கிறது. அவன் உற்றானை இழந்த துயரத்தால் அழுவானாயின் உலகத்தவர் இகழ்ச்சியைப் பொருள்படுத்தான். பக்தன் கடவுளைக் காண விரும்பி அழுகிறான். அவனைப் பித்தன் என்று உலகம் இகழ்தலைப்பற்றி அவனுக்குக் கவலையில்லை. மேடையில் நன்றாகப் பாடும் ஒருவனை உலகம் புகழ்கிறது. அது பாடகனுக்கு உற்சாக மூட்டுகிறது. பக்தனோ பரம்பொருளைப் போற்றிப் பாடுகிறான். பரம்பொருளின் பெருமையே அவனைப் பாடச் செய்கிறது. உலகத்தவர் புகழ்ச்சியில் அவனுக்குப் பொருள் ஒன்றுமில்லை. இறைவனது புகழைத் தவிர வேறு எதையும் அவன் பேசாதிருப்பதால் அவன் மௌனியாகிறான். சொந்த ஊருக்கு மகிழ்வுடன் திரும்பிப்போகிறவனுக்கு வழிப் பயணத்தில் வசதிகள் அதிகம் அமையாவிட்டால் அவன் அவைகளைக் குறித்து மனக்கிலேசமடைவதில்லை. ஊருக்குப் போகும் உற்சாகம் முன்னணியில் நிற்கிறது. பக்தனோ தனது தாய் தந்தையாகிய தெய்வத்தைக் குறித்துப் பயணம் போகிறான். உலக வாழ்க்கை என்ற வழியில் கிடைக்கின்ற எதைக்கொண்டும் அவன் திருப்தியடைகிறான். நன்றே வரினும் தீதே வரினும் அவனுக்குத் தொல்லை யொன்றுமில்லை. மேலும் தனக்கென்று வசிக்குமிட மொன்றை அவன் உரிமைப்படுத்துவதும் கிடையாது. அகப்பட்ட வளையில் ஸர்ப்பம் சிறிது காலம் சுருண்டிருப்பது போன்று தற்செயலாய் நேர்ந்த இடத்தைப் பக்தன் தங்குமிடமாக்குகிறான். ரயில் வண்டியில் எவ்விடத்தில் இருக்க இடம் கிடைத்தாலும் பிரயாணிக்கு ஒன்றே. பக்தனது நிலையும் அத்தகையதே. மாறுபடுகிற உலகில் மாறுபடாத கடவுள் நாட்டத்திலேயே பக்தன் கண்ணுங்கருத்துமாயிருப்பதால் அவன் ஸ்திர புத்தியுள்ளவனாகிறான். நாட்டமெல்லாம் கடவுளிடத்திலேயே இருப்பதால் அவனே பக்தனாகிறான். ஆக, அவன் கடவுளுக்கு இனியவன் ஆவது இயல்பு.
உலகத்தைப்பற்றிய எண்ணங்களும் கவலைகளும் உன் மனத்தைச் சஞ்சலப்படுத்தும்படி செய்துகொள்ளாதே. செய்யவேண்டிய காரியம் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செய். ஆயினும் உன் மனம் எப்போதும் ஈசுவரனிடம் நிலைத்திருக்கட்டும். (18-19)
20. இந்தத் தர்மரூபமான அமிர்தத்தை யான் சொல்லியபடி வழிபடுவோர், நம்பிக்கையுடையோர், என்னை முதலாகக் கொண்டோர், அத்தகைய பக்தர் எனக்கு மிகவுமினியர்.எல்லாவிதமான சாதனங்களுக்கும் சிரத்தை இன்றியமையாததாதலால் அது ஈண்டு பக்தியோடு இணைத்து இயம்பப்படுகிறது. பகவானைக் கதியாகக்கொள்வது பக்தனுடைய இயல்பு. அதனால் அவன் செயலற்றவன் ஆய்விடுகிறானல்லன். தர்மத்தை உறுதியாக அனுஷ்டிக்கிறான். அருளோடு முக்தி என்னும் பெருநிலம் தர்மத்தினின்று வருவதால் தர்மமே அமிர்தத்துக்கு (மூவா மருந்துக்கு) ஒப்பாகிறது. தர்மத்தைக் கையாளுபவன் யாரும் அழிந்துபட்டுப் போகமாட்டான். அன்பும் அறநெறியும் யாரிடத்திருக்கிறதோ அவன் இறைவனுக்கு உவந்தவன் ஆகிறான்.
பக்தியில் வைதிக பக்தி என்பது ஒன்று. அதாவது சாஸ்திரங்கள் விதிக்கிறபடி பக்தி பண்ணுதலாம். பகவந் நாமத்தைப் பலதடவை உச்சாரணம் பண்ணுதல், உபவாசமிருத்தல், தீர்த்த யாத்திரை போதல், வேண்டிய ஸாமக்கிரியைகளைக் கொண்டு பூஜை பண்ணுதல் முதலியன வைதிக பக்தியில் சேர்ந்தவை. இப்படி நெடுங்காலம் பக்தி செய்தால் ஈசுவர பக்தியில் இன்னும் உயர்ந்த நிலையாகிய ராக பக்தி யைக் பெறக்கூடும். எல்லாவற்றிற்கும் பிரேமைதான் முக்கியம். உலகப்பற்று முற்றிலும் அகல வேண்டும். முழுமனதும் ஈசுவரனிடம் பொருந்தவேண்டும். அப்போதுதான் அவனை அடையமுடியும். ராக பக்தியில்லாமல் அவனை அடையமுடியாது. இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்  யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே  பக்தி யோகோ நாம த்வாதசோத்யாய:பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீகிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் பக்தியோகம் என்ற பன்னிரண்டாம் அத்தியாயம்.
பகவத் கீதை - அத்தியாயம் 12
பக்தி யோகம்

அர்ஜூனன்: இறைவா, வழிபாடுகளில் சிறந்தது எது? எது பக்குவமானது? உருவுடன்கூடிய உமக்கு பக்தித் தொண்டாற்றுவதா அல்லது தோன்றாத அருவ பிரம்ம பாதையை ஏற்பதா?

பகவான்: எனது திவ்வியமான உருவில் மனதை நிறுத்தி நம்பிக்கையுடன் என்னை வழிபடுவதில் ஈடுபட்டிருக்கும் பாதையையே மிகவும் பக்குவமானதாக நான் கருதுகிறேன்.

புலப்படாததும், எங்கும் நிறைந்ததும், மனதுக்கு எட்டாததும், மாறாததும், அசையாததும், நிலைத்ததும், அழியாததுமான அருவப் பிரம்மத்தை ஏற்று வழிபடுவோர் சமநோக்குடையவராய், எல்லா ஜீவர்களின் நலனிலும் ஈடுபட்டு என்னை அடைகின்றனர். ஆனாலும் உடலுடைய வாழ்வில், அருவத்தன்மை இயல்பிடம் மனதை வைத்து முன்னேறும் பாதை மிகக்கடினமானது.

பார்த்தனே, என்னில் மனதை வை. எப்போதும் என்னையே தியானித்து, என் தொண்டிலே ஈடுபட்டு, பிறழாது என்னிடம் பக்தி கொண்டு, செயல்களை எனக்காகத் துறந்து, என்னை வழிபடுவனை உடனடியாக சம்சாரக் கடலிலிருந்து காப்பாற்றுபவனாக நான் இருக்கிறேன்.

என்மீது மனதை நிறுத்தி உன் அறிவை எல்லாம் என்னில் ஈடுபடுத்து. இவ்வாறாக நீ என்னுடன் எப்போதும் வசிப்பாய் என்பதில் சந்தேகமில்லை.

தனஞ்செயா, அவ்வாறு பிறழாது என்மீது உன் மனதை நிறுத்த முடியாவிடில், பக்தி நெறிகளைக் கைக்கொள். இவ்விதமாய் என்னை அடையும் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்.

பக்தி நெறிகளையும் கடைப்பிடிக்க முடியாவிடில், எனக்காக மட்டும் செயல்பட முயற்சி செய், இதனால் நீ பக்குவமடையலாம்.

இதையும் நீ செய்ய முடியாவிடில், செயலின் விளைவுகளைத் துறக்க முயற்சி செய். இவ்விதம் ஆன்மாவில் நிலைபெறலாம்.

அதுவும் முடியாவிடில், அறிவை விருத்தி செய். ஆனால் அறிவைவிட தியானமும், தியானத்தை விட செயலின் பலனைத் துறத்தலும் சிறந்தன. இதனால் மன அமைதி பெறலாம்.

பொறாமையற்ற, எல்லா ஜீவராசிகளுக்கும் நண்பனான, தன்னை உரிமையாளனாகக் கருதாதவனான, பொய் அகங்காரத்திலிருந்து விடுபட்டவனான, இன்ப துன்பங்களில் சமமானவனான, எனது தொண்டில் எப்போதும் திருப்தி கொண்டவனான, அறிவும், மனதும் என்னில் உடன்பாடு கொண்ட எனது பக்தன் எனக்கு மிகப் பிரியமானவன்.

யாருக்காக உலகம் வருந்துவதில்லையோ, யார் உலகத்தால் வருந்துவதில்லையோ, பயம், இன்ப துன்பங்களில் தடுமாறாத அத்தகு மனிதன் எனக்கு மிகப் பிரியமானவன்.

எந்த விருப்புமில்லாத தூயவனும், திறமைசாலியும், கவலையற்றவனும், பலனுக்காக முயலாதவனுமான பக்தன் எனக்கு மிகப் பிரியமானவன்.

இன்ப துன்பத்தால் பாதிக்கப்படாதவனும், கவலைப்படாதவனும், விரும்பாதவனும், சுப அசுப விஷயங்களைத் துறப்பவனுமான பக்தன் எனக்கு மிகப் பிரியமானவன்.

நண்பரிடத்தும், பகைவரிடத்தும், மானத்திலும், அவமானத்திலும், இன்ப துன்பங்கள், வெப்பம் குளிர், புகழ்ச்சி இகழ்ச்சி இவைகளில் நடு நிலையானவனும், களங்கங்களிலிருந்து விடுபட்டவனும், அமைதியானவனும், தங்கும் இடத்திற்காக கவலைப்படாதவனும், அறிவில் நிற்பவனுமான எனக்குத் தொண்டாற்றும் பக்தன் எனக்கு மிகப் பிரியமானவன்.

அர்ஜூனா, பக்தித் தொண்டின் அழிவற்ற பாதையைப் பின்பற்றி பெரு நம்பிக்கையுடன் தன்னை ஈடுபடுத்தி, என்னையே இறுதி இலக்காக ஏற்பவன் எனக்கு மிகமிகப் பிரியமானவன்.


No comments:

Post a Comment