Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, November 2, 2014

பகவத் கீதை -அத்தியாயம் 16 தெய்வ அசூர சம்பத் யோகம்

பகவத்கீதை | தெய்வாசுர சம்பத் விபாக யோகம்
முற்கூறிய தத்துவங்களைத் தெய்வத் தன்மை வாய்ந்தவர்களே உணர்வார்கள். அசுரத் தன்மை வாய்ந்தவர்கள் அறியார்கள். தெய்வத் தன்மையுடையோர் மனது தெளிவுற்றிருக்கும். அவர் பிறருக்குத் தீங்கு செய்யார், கோபமறியார்; பொறுமை இரக்கம் பெற்றிருப்பார். அசுரத் தன்மையுடையோரோ டம்பமும், கொழுப்பும், கர்வமும், கோபமும், அயர்வும் பொருந்தியிருப்பார். தெய்வத் தன்மையுடையோர் சம்சார பந்தத்தினின்றும் விடுபடுவார். மற்றவரோ பின்னும் அதில் கட்டுப்படுவார்.மேலும் அசுரத் தன்மையுடையோர் வையகம் பொய்யென்றும் ஈசுவரனற்றதென்றும் உரைப்பார்கள். தாங்களே இறைவனென்றும், தாங்களே வல்லவர்களென்றும், தாங்களே செல்வம் படைத்தவர்களென்றும் தங்களுக்கு நிகர் எவருமில்லை யென்றும் எண்ணிக் கொண்டு கெட்ட காரியங்களைச் செய்து நரகத்தில் விழுவார்கள். அவர்களுக்கு சாஸ்திரத்தில் நம்பிக்கை கிடையாது, தெய்வத் தன்மை வாய்ந்தவர்களுக்கு சாஸ்திரமே பிரமாணமாகும்.
 ஸ்ரீபகவாநுவாச
1. ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அஞ்சாமை, உள்ளத் தூய்மை, ஞான யோகத்தில் உறுதி, ஈகை, தன்னடக்கம், வேள்வி, கற்றல், தவம், நேர்மை.அறியாமையினின்று அச்சம் வருகிறது. அஞ்சுபவன் ஒன்றுக்கும் உதவான். அஞ்சாமையோ மேன்மையனைத்தையும் கொடுக்கிறது. ஒவ்வொரு தெய்வமும் அபயகரம் உடைத்திருப்பது, அஞ்சாமையும் தெய்வத்தை அணுகுதலும் ஒன்றே என்று விளக்குதற்காம். உள்ளத்தூய்மை என்பது வஞ்சகமும் பொய்யுமின்றிப் பிறரோடு இணக்கம் கொள்ளுதலாம்.நித்திய அநித்திய வஸ்துக்களைத் தெளிவுபட அறிதல் ஞானம். அப்படி அறிந்தான பிறகு அதற்கேற்ப ஒழுகுதல் யோகமாகிறது. இங்ஙனம் ஞானத்திலும் யோகத்திலும் யாண்டும் நிலைத்திருத்தல் வேண்டும். தனக்குப் பயன்படுகிற பொருள் பிறர்க்கும் பயன்படவேண்டும் என்ற எண்ணத்துடன் அவைகளை அன்புடனும் பணிவுடனும் வழங்குதல் தானமாகிறது.
தமம் அல்லது பொறிகளை அடக்குதல் என்பது வெளியுலகில் உள்ள விஷயங்களின்மீது, அவைகளை அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் இந்திரியங்களை உலவவிடாது தடுத்தலாம். தான் செய்கின்ற கிருத்தியங்களின் மூலம் தன்னைக் கடவுளுக்கென்றே ஒப்படைத்தல் யாகம் என்று பெயர் பெறுகிறது. தேவாராதனைகளையெல்லாம் யாகமென்று சொல்லலாம்.
பாரமார்த்திக விஷயங்களைப் புகட்டுகிற சாஸ்திரங்களைப் பக்தி சிரத்தையுடன் படிப்பது சுவாத்யாயம் என்ற பெயர் பெறுகிறதுஉடலையும் உள்ளத்தையும் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தித் தன்னை மேலான இயல்புடையவனாக மாற்ற முயலுதல் தவம். சிந்தையிலும் சொல்லிலும் செயலிலும் கோணலில்லாத் தன்மையே ஆர்ஜவம் அல்லது நேர்மை.
2. கொல்லாமை, வாய்மை, சினவாமை, துறவு, ஆறுதல், வண்மை, ஜீவதயை, அவாவின்மை, மென்மை, நாணுடைமை, சலியாமை,உயிர்களைத் தனக்கும் இறைவனுக்கும் புறம்பாக நினைக்கும் பொழுது அவைகளுக்குத் தீங்கு செய்து தனக்கு வேண்டியதைப் பெறலாம் என்ற எண்ணம் வருகிறது. அவைகளையெல்லாம் இறைவனோடு சம்பந்தப்பட்டவைகளாக அறியும்போது அஹிம்சை தானாக வந்தமைகிறது. கடவுள் ஒருவரே மெய்ப்பொருள் என்னும் தத்துவத்துக்கு ஒப்ப உணர்வதும் உரைப்பதும் சத்தியமாகும். மற்றவர்கள் தன்னை ஹிம்சை செய்கின்றபொழுது தான் அவர்களைத் தன்மயமாயுணர்ந்து அவர்களிடத்துக் கோபித்துக் கொள்ளாதிருப்பது குரோதமின்மையாகும். பொருள்களெல்லாம் பரமனுக்கு உரியவைகளென்று அறிந்து அவைகளிடத்து உரிமை பாராட்டாதிருப்பது தியாகம். மனதின்கண் அமைந்துள்ள நடு நிலை சாந்தி எனப்படுகிறது. உயிர்களிடத்து இரக்கம் அல்லது பூத தயை என்பது துன்புறுபவர்களைப் பார்த்து மனம் கசிதல். இந்திரியார்த்தங்களிடத்து இந்திரியங்கள் உலவும் பொழுதும் மனப்பற்று வாராதிருத்தல் அலோலுப்த்வம் அல்லது பிறர் பொருளை விரும்பாமை என்பதாகிறது. பிறரைத் தாழ்த்திப் பேசுதல் சிற்றியல்புடையாரது போக்கு. அது பைசுனம் எனப்படுகிறது. பிறரது சிறப்பை ப்பற்றியே பேசும்பொழுது அது அபைசுனம் எனப்படுகிறது. புறங்கூறாமை அல்லது கோள் சொல்லாமை சீரியரது பாங்காகும். மார்தவம் அல்லது மிருதுத்தன்மை அல்லது இனிமை பண்பட்டவர்களிடத்தே காணப்படும். மற்றவர்கள் தங்களைப் புகழும் போது நல்லார்க்கு நாணம் வருகிறது. தகாத செயலில் ஈடுபடவும் அவர்கள் நாணுகின்றனர். மனம் சலனமடையும்போது அதன் புறத்தோற்றமாகிய உடலும் அனாவசியமாக அசைகிறது. உள்ளத்தையும் உடலையும் காரணம் ஏற்பட்டாலொழிய அசையாது வைத்திருப்பது அமைதி பெற்றவர்களுடைய செயலாகும்.
3. ஒளி, பொறை, உறுதி, சுத்தம், துரோகமின்மைஇவை தெய்வ சம்பத்தை எய்தியவனிடம் காணப்படுகின்றன; பாரதா!
கயவர்களுக்கிடையில் பயப்படாதிருத்தல் தேஜஸ் அல்லது தைரியமாம். பிறர் செய்த தீங்குகளுக்காக அவர்களைத் தண்டிக்க வல்லவனாயிருந்தும் அவர்களை மன்னிப்பதுடன், அதை மறந்து விடுவது க்ஷமை என்ற பெயர் பெறுகிறது. மனதின்கண் அமைந்துள்ள திருதி அல்லது உறுதியானது உடலுக்கும் இந்திரியங்களுக்கும் உண்டாகின்ற சோர்வை நீக்குகிறது. விரைவில் சோர்வு உண்டாகாதும் அது தடுக்கவல்லது. மனம், மொழி, மெய் ஆகிய மூன்றும் அழுக்குப்படியாதிருத்தல் சௌசம் அல்லது தூய்மையாம். உடலின் அழுக்கை நீக்குவது யாருக்கும் எளிது. மனத்தகத்துக் கீழான எண்ணம் வராது தடுப்பதால் அது தூயதாகிறது. எண்ணம் சுத்தமாயிருந்தால் சொல்லும் தானே சுத்தியடைகிறது. பிறர்க்குத் தீங்கு செய்யவேண்டும் என்ற எண்ணம் உண்டாகாதிருந்தால் அது அத்ரோகம் அல்லது வஞ்சகமின்மையாகிறது. பிறர் தன்னை மிக மதிக்க வேண்டும் என்று நினைப்பது செருக்கு. அச்சமின்மையிலிருந்து செருக்கின்மை ஈறாக இவையாவும் தெய்வ சம்பத்துக்களாகின்றன.
இனி, இதற்கு மாறாயுள்ள அசுர சம்பத்து விளக்கப்படுகிறது :
4. டம்பம், இறுமாப்பு, கர்வம், சினம், கடுமை, அஞ்ஞானம் இவை அசுர சம்பத்தை எய்தியவனிடம் காணப்படுகின்றன; பார்த்தா!ஒழுக்கத்தில் தன்னைச் சிறந்தவனாகக் காட்டிக்கொள்ளுதலும், ஆடை ஆபரணங்களைக்கொண்டு தன்னை மிகைபட அலங்கரித்தலும் பகட்டாகிறது. தனக்குக் கல்வியும், செல்வமும், குலமும் மிக வாய்த்திருப்பதாக எண்ணித் தற்பெருமை கொள்ளுதல் இறுமாப்பாம். அழகில்லாதவனை அழகன் என்றும், குருடனைக் கண்ணன் என்றும், கீழோனை மேலோன் என்றும் சொல்லிப் பரிகசிப்பது கடுமைக்குச் சான்றாகிறது. தர்மம் அதர்மம் ஆகியவைகளைப்பற்றித் தவறுதலாக நினைப்பது அக்ஞானமாம்.பக்ஷணங்களின் மேல்கூடு அரிசிமாவினால் செய்யப்பட்டிருக்கும். அவைகளின் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் பண்டங்கள் வேறு வேறு விதமானவைகளாக இருக்கும். உள்ளிருக்கும் பொருள்களுக்கு ஏற்ப பக்ஷணங்கள் நல்லவையாகவோ கெட்டவையாகவோ இருக்கும். அதுபோல மானிட சரீரங்கள் எல்லாம் ஒரே விதமான பொருளால் ஆக்கப்பட்டிருப்பினும் ஹிருதய சுத்திக்கு ஏற்றபடி மனிதர்கள் வித்தியாசப்படுவர்.
இயல்பு வேறுபாட்டால் வரும் பயன் யாது? விடை வருகிறது :
5. தேவ சம்பத்தால் விடுதலையுண்டாம், அசுர சம்பத்தால் பந்தமேற்படும்; பாண்டவா, தேவ சம்பத்தை எய்தி விட்டாய்; துயரப்படாதே.முற்பிறப்பில் மனிதன் செய்த முயற்சி வீண்போவதில்லை. தேவ இயல்பு சம்சார பந்தத்திலிருந்து விடுபடுதற்கு ஏதுவாகிறது. அசுர இயல்பு பிறப்பு இறப்புக்குக் காரணமான பந்தத்தைப் பலப்படுத்துகிறது. தன்னிடத்துள்ள இயல்பு எத்தகையதோவென்று அர்ஜுனனுக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம். ஜீவனுடைய முக்கால நிலைமைகளை அறிகிற பகவானுக்கு அர்ஜுனனுடைய வரலாறு நன்கு தெரியும். அவனுக்கு ஆறுதல் சொல்லுவதோடுகூட தெய்வ சம்பத்தையுடைய அவன் முக்திக்கும் தகுந்தவனாகிறான் என்கிறார் பகவான். ஒரு ஜன்மத்தில் அடைந்த பயிற்சி அடுத்த ஜன்மத்தில் அந்த ஜீவனது இயல்பாக அவனிடத்து அமைகிறது என்பதும் விளங்குகிறது.
ஜீவர்களுடைய இயல்புகளை யெல்லாம் சுருக்கமாக எப்படி வகைப்படுத்தலாம்? விடை வருகிறது :
6. இவ்வுலகத்தில் உயிர்ப்படைப்பு இரண்டு வகைப்படும். தேவ இயல் கொண்டது. அசுர இயல் கொண்டது. தேவ இயல் கொண்டதை விரித்துச் சொன்னேன் பார்த்தா, அசுர இயல் கொண்டதைச் சொல்லுகிறேன், கேள்.ஸ்தாவர ஜங்கமங்களாகிய உயிர் வகைகள் அனைத்திடத்தும் ஏற்றத்தாழ்வுபட தெய்வ சம்பத்தோ அல்லது அசுர சம்பத்தோ உண்டு. ஒன்று இனியது; மற்றொன்று இன்னாதது. ஒன்று ஆத்ம வளர்ச்சிக்குத் துணைபுரிகிறது; மற்றொன்று பிற்போக்கை உண்டாக்குகிறது. மனிதர்களுக்கிடையில் உள்ள அசுர இயல்பு இனி விரிவாக விளக்கப்படுகிறது. கருத்தில் வைக்கத் தகுதியற்ற எதிர்மறையான எண்ணங்களும் போதனைகளும் கீதையில் காணப்படுவது அரிது. ஈண்டு அத்தகைய கருத்துக்கள் வருவது ஒரு காரத்தை முன்னிட்டேயாம். சாதகர்கள் அவைகளின் தோஷத்தை யறிந்து அவைகளை நீக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அசுர இயல்பு விரித்து விளக்கப்படுகிறது.
7. அசுரத் தன்மை கொண்டோர் தொழிலியல்பையும் வீட்டியல்பையும் அறியார். தூய்மையேனும், ஒழுக்கமேனும் வாய்மையேனும் அவர்களிடம் காணப்படுவதில்லை.நலம் தருவது எதுவோ அது செய்யத்தகுந்தது. அது தர்மம் எனப்படுகிறது. கேடு விளைவிப்பது எதுவோ அது செய்யத்தகாதது. அத்தகையது அதர்மம் எனப்படுகிறது. விலங்கு இனங்களும் ஓரளவு நலம் கேடுகளை அறிந்துகொள்கின்றன. அசுர இயல்புடையார்க்கு அவை விளங்குவதில்லை. அவர்கள் மனதில் எழும் எண்ணங்கள் தூயவைகளல்ல, உடலில் ஆகும் செயல் ஒழுக்கமில்லாதது; பின்பு அவர்கள் வாயில் பேசுவது உண்மையல்ல. ஆக, முக்கரணங்களும் அவர்களால் முறைதவறிக் கையாளப்படுகின்றன.
ஏன் அவர்கள் அப்படித் தாறுமாறாக நடந்துகொள்ளுகிறார்கள் என்று அவர்களைக் கேட்டால் அவர்களிடமிருந்து வரும் விடையாவது :
8. அவர்கள் இவ்வுலகம் உண்மையற்றதென்றும் நிலையற்றதென்றும் கடவுளற்றதென்றும், சொல்லுகிறார்கள். இது தொடர்பின்றி பிறந்ததென்றும், வெறுமே காமத்தை ஏதுவாக உடையது என்றும் சொல்லுகிறார்கள். சத்தியமும், தர்மமும், ஈசுவரனும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவைகள். அவைகளின் ஆதிக்கமின்றி உலகம் நடவாது என்பது ஆஸ்திகர் கொள்கை. லோகாயதர்கள் அம்மூன்றையும் மறுக்கின்றனர். காமத்தின் பயனாக வந்துள்ள உலக வாழ்க்கையை வேண்டியவாறு கையாண்டு களித்திரு என்பது அவர்களது கொள்கை.சமயானுஷ்டானத்தில் வெறுப்புக்கொள்வதிலிருந்து ஒருவனை லௌகிகனென நன்கறியலாம். பகவந் நாமத்தை உச்சரிக்கவோ பக்தியூட்டும் பாடலைக் கேட்கவோ அவனுக்குப் பிரியம் இருப்பதில்லை. பிறர் அவ்வாறு செய்வதையும் அவன் தடுப்பான். தோத்திரம் செய்வதை நிந்திப்பவனும், தர்ம ஸ்தாபனங்களையும் தர்மாத்மாக்களையும் ஏளனம் பண்ணுபவனும் சரியான லௌகிகனாவான்.
இக்கொள்கை எத்தகைய வாழ்க்கையாகப் பரிணமிக்கிறது? விடை வருகிறது :
9. இந்தக் காட்சியில் நிலைபெற்று அற்ப புத்தியுடைய அந்த நஷ்டாத்மாக்கள் உலகத்துக்குத் தீங்கு சூழ்வோராய் அதன் நாசத்துக்காகக் கொடிய தொழில் செய்கின்றனர்.இந்திரியங்களின் வசப்பட்டு விரைந்து விஷயங்களில் மூழ்குமளவு ஒருவன் புல்லறிவாளன் ஆகிறான். தன்னையே அழித்துக் கொள்ளுதல் அதன் முதற்படி. அதர்மம் அபரிமிதமாய்க் கையாளப்படுகிறது. உலகுக்கும் அது கேடாய் முடிகிறது. பொய்யும் அதர்மமும் வாழ்க்கைத் திட்டமல்ல என்பதற்கு அவனுடைய கொடியே செயலே சான்றாகிறது.
அசுர இயல்புடையவரது தீய செயல் என்னென்ன வடிவெடுக்கிறது என்று வினவுமிடத்து அதன் விரிவான விளக்கம் வருகிறது 10நிரம்பவொண்ணாத காமத்தைச் சார்ந்து, டம்பமும், கர்வமும், மதமும், பொருந்தியவராய், மயக்கத்தால், பொய்க் கொள்கைகளைக் கொண்டு அசுத்த நிச்சயங்களுடையோராய்த் தொழில் புரிகிறார்கள்.
11. பிரளயமட்டுந் தீராத எண்ணற்ற கவலைகளிற் பொருந்தி, விருப்பங்களைத் தீர்த்துக் கொள்வதில் ஈடுபட்டோராய், உண்மையே இவ்வளவுதான் என்ற நிச்சய முடையோராய்,மரணத்தோடு அவர்களது ஆசை முடிவுபெறுவதாக மற்றவர்களுக்குத் தென்படுகிறது. ஆனால் திரும்பப் பிறக்கும்பொழுது அதே ஆசை தோற்றத்துக்கு வருகிறது. ஆகையால் அது பூர்த்தி பண்ண முடியாத ஆசையாகிறது. கொடிய துன்ப துயரங்களை மிகுதியாக அனுபவித்தாலும் லௌகிகர்களுக்கு நற்புத்தி உண்டாவதில்லை. ஒட்டகங்களுக்கு முட்செடிகளில் ஆசை அதிகம். அவைகளைத் தின்னத்தின்ன ஒட்டகங்களின் வாயிலிருந்து ரத்தம் அதிகமாகப் பெருகும். என்றாலும், அவைகள் முட்செடிகளைத் தின்பதை விடுவதில்லை.அதைப்போல் அநேகரால் ஏமாற்றப்பட்டபோதும் ஆபத்துக்கள் அநேகம் வந்துற்றபோதும் லௌகிகர்கள் கஷ்டப்படுகிறார்கள். அடுத்த கணத்தில் எல்லாவற்றையும் மறந்து உலக விஷயங்களையே தேடி அலைகின்றார்கள். ஒருவனது மனைவி இறந்துவிடுகிறாள்; அல்லது தன்னை விட்டு ஓடிவிடுகின்றாள். ஆனாலும் திரும்பவும் விவாகம் செய்துகொள்ள முற்படுகிறான் ! அல்லது அவனது குழந்தை இறந்துவிடுகிறது; கதறி அழுகின்றான் ! பெரிதும் துக்க சாகரத்தில் ஆழ்ந்து வருந்துகிறான். என்றாலும் மறு கணத்தில் அந்தக் குழந்தையின் நினைவே இல்லாது அவன் வாழ்க்கை நடத்துகிறான்! குழந்தையைப் பறிகொடுத்த தாய் துக்கத்தால் சோகமாகிவிடுகின்றாள். ஆனால் சற்றுப் பிறகு அவள் தன் நகைகளைச் சரிப்படுத்துவதிலும், நல்ல புடவைகள் உடுத்துவதிலும், வாசனை சோப்பைத் தேடுவதிலும் ஈடுபடுகிறாள்! பெண் குழந்தைகளின் விவாகங்களால் பெற்றோர் தரித்திர தசையை அடைந்து விடுகிறார்கள்; பின்னும் அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்து கொண்டேதான் இருக்கின்றன ! இவர்கள் வழக்கு வியாச்சியங்களில் சகல பொருள்களையும் இழந்துவிட்டு வருந்தினாலும் மேலும் வழக்கு சம்பந்தமாக நீதி ஸ்தலத்திற்குப் போவதை நிறுத்துகிறதில்லை. குழந்தைகளைக் காப்பாற்ற வழியில்லாமற் போனாலும் ஒவ்வொரு வருஷமும் குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தவறுவதில்லை. என்ன ஆச்சரியம் !
12. நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால் கட்டுண்டு காமத்துக்கும் சினத்துக்கும் ஆட்பட்டோராய்க் காம போகத்துக்காக அநியாயஞ்செய்து பொருட் குவைகள் சேர்க்க விரும்புகிறார்கள்.செல்வத்தை நேர்மையான வழியில் சம்பாதித்து நல்ல காரியத்துக்குப் பயன்படுத்துவார்களானால் அது திரவிய யக்ஞமாகின்றது. பேராசையில் கட்டுண்டு, பொய்யும் களவும் புரிந்து பொருளைப் பெருமிதமாகத் தேடி போகத்தில் மூழ்குவது அசுரச் செயலாகிறது. மனிதர்கள் இருவகுப்பினர்-மனிதர் என்ற பெயர் மாத்திரம் வகித்தவர் (மனுஷ்யர்). அறிவு விளங்கப்பெற்றவர் (மன்-ஹுஷ்யர்). ஈசுவரனை அடையவேண்டுமென்ற ஒரே நோக்கத்தை உடையவர்கள் பின்னர் சொன்ன வகுப்பினர். காமமும் காசாசையும் பிடித்து அலைபவர்கள் மனிதர் என்ற பெயர் மாத்திரம் வகித்தவர்கள்.
13. இன்று இன்ன லாபமடைந்தேன்; இன்ன மனோரதத்தை இனி எய்துவேன்; இன்னதையுடையேன்; இன்ன பொருளை இனிப் பெறுவேன்;”
14. இன்ன பகைவரைக் கொன்று விட்டேன்; இனி மற்றவர்களைக் கொல்வேன்; நான் ஆள்வோன்; நான் போகி; நான் சித்தன்; நான் பலவான்; நான் சுக புருஷன்.”
15. நான் செல்வன்; இனப்பெருக்க முடையோன்; எனக்கு நிகர் யாவருளர்? வேட்கிறேன்; கொடுப்பேன்; களிப்பேன்என்ற அஞ்ஞானங்களால் மயங்கினோர்,
16. பல சித்தங்களால் மருண்டோர், மோகவலையிலகப்பட்டோர், காம போகங்களில் பற்றுண்டோர்இவர்கள் அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள்.மன நிலைக்கு ஏற்றபடி வெளியுலகம் காட்சி கொடுக்கிறது. தெளிந்த மனமுடையவர்களுக்கு உலகம் சுவர்க்கமாகக் காட்சி கொடுக்கிறது. கெட்ட மனமுடையவர்களுக்கு அதே உலகம் கொடிய நரகமாகப் பிரதிபலிக்கிறது.
அசுரர்களும் யாகம் செய்வதுண்டு. அதன் விதம் வருகிறது :
17. இவர்கள் தற்புகழ்ச்சியுடையோர், முரடர், செல்வச் செருக்கும் மதமுமுடையோர்; டம்பத்துக்காக விதி தவறிப் பெயர் மாத்திரமான வேள்வி செய்கின்றனர்.இக்காலத்தில் சிலர் கோயில்கள் கட்டுவிப்பதும், விழாக்கள் கொண்டாடுவதும், ஆராதனை அபிஷேகங்கள் செய்வதும் இத்தகைய சிற்றியல்புகளுடையவைகளாகின்றன. தங்களை விளம் பரப்படுத்திக்கொள்ளுதல் ஒன்றே இவர்களின் கருத்தாகும். கடவுளின் பெருமைக்கென்றே வினையாற்றுவது தெய்வ சம்பத்துடையவர்களது இயல்பு. தங்களது சொந்தப் பெருமைக் கென்றே வினையாற்றுவது மற்றவர்களுடைய இயல்பு.
18. அகங்காரத்தையும், பலத்தையும், செருக்கையும், விருப்பத்தையும், சினத்தையும் பற்றியவர்களாகிய இன்னோர் தம் உடம்புகளிலும் பிற உடம்புகளிலும் உள்ள என்னைப் பகைக்கிறார்கள்.தங்களிடத்து உண்மையாகவே அமைந்துள்ள சில மேன்மைகளை மிகைப்படுத்தியும், இல்லாத சில சிறப்புக்களை இருப்பதாகப் பாவித்தும் அகங்கரிக்கின்றனர் அசுர இயல்புடையவர்கள். அவித்தியா சொரூபமான இத்தகைய ஆணவத்தை அகற்றுவது எளிதன்று. பின்பு, தங்களிடத்து வாய்த்த பலத்தையெல்லாம் மற்றவர்களைச் சிறுமைப்படுத்துவதிலேயே உபயோகிக்கின்றனர். இனி, இறுமாப்பு ஒருவனை நெறி பிறழ்ந்து போகும்படியே தூண்டுகிறது.எல்லார் உள்ளத்திலும் ஈசுவரன் வீற்றிருக்கிறான் என்பதை மறந்து, அவனது மேலான ஆலயமாகிய உடலைக் கீழ்மைப் படுத்தி இறைவனையே அவர்கள் புறக்கணிக்கின்றனர். அதனால் அசுரர்களுக்கு உண்டாகும் வீழ்ச்சியாவது :
19. இங்ஙனம் பகைக்கும் கொடியோரைஉலகத்தில் எல்லாரிலும் கடைப்பட்ட இந்த அசுப மனிதரை நான் எப்போதும் அசுர பிறப்புகளில் எறிகிறேன்.வினைக்கேற்ற பிறவியுண்டாகிறது. வினையின் வேகம் தொடர்ந்து போகுமளவு பிறவியும் வளர்கிறது. இக்காரணத்தை முன்னிட்டே பகவான் இங்ஙனம் பகர்கிறார்:
20. பிறப்புத் தோறும் அசுரக் கருக்களில் தோன்றும் இம்மூடர் என்னை யெய்தாமலே மிகவும் கீழான கதியைச் சேர்கிறார்கள். குந்தியின் மகனே!கெட்ட இயல்பு ஒருவனை இன்னும் அதிகக் கேடுடையவனாக்குகிறது. ஆதலால் கீழ்மையிலேயே அவன் மேலும் மேலும் செல்பவனாகின்றான். மலையுச்சியினின்று கீழே உருண்டு வருகிற கல் பள்ளத்தாக்கு வரையில் விரைவது போன்று அசுரன் ஒருவன் புல்லிய நிலையின் எல்லை காணும் வரையில் கீழ்மையுறுகிறான்.
இத்தகைய கீழ்மைக்கு மூலகாரணம் யாது ? விடை வருகிறது :                                                                                                            21. ஆத்ம நாசத்துக்கிடமான இம் மூன்று வாயில்களுடையது நான்:(அவையாவன) காமம், சினம், அவா, ஆதலால், இம்மூன்றையும் விடுக.அசுரப்பான்மைக்குப் பிறப்பிடம் ஈண்டுக் காட்டப்படுகிறது. இம்மூவிதக் குற்றங்களிலிருந்து அரக்கத்தன்மை வளர்கிறது. லோபம் என்பது போகப் பொருள்களைத் தனக்கென்றே கட்டிப் பிடித்தலாம். மனிதன் மேன்மையடைதற்கு இம்மூன்றும் இடந் தருவதில்லை. இவைகளை நீக்கினால் மனிதன் மேலோன் ஆவான். இவைகளில் உழன்று உழன்று இறுதியில் உள்ளத்தினுள் விரக்தியுண்டாகும் வரையில் ஒருவன் அசுரப் பிறவிகளில் அழுந்தியாகவேண்டும்.
பின்பு அவன் எப்படி மேன்மையடைகிறான்? விடை வருகிறது :
22. இந்த மூன்று இருள் வாயில்களினின்றும் விடுபட்டோன் தனக்குத் தான் நலந்தேடிக் கொள்கிறான்; அதனால் பரகதி அடைகிறான்.துக்கங்களுக்கெல்லாம் காரணம் அக்ஞானம். அக்ஞானத்தினின்றே காமம், குரோதம், லோபம் வருகின்றன. ஆக, அக்ஞான இருள் நரகத்துக்கு வாயிலாகிறது. அதினின்று விலகியவன் சிறப்பு எய்துகிறான். முக்தியடைதல் அவனுக்கு இயல்பாக வந்தமைகிறது. கெட்டவன் ஒருவன் திரும்பி மேல்நோக்கிப் போக ஆரம்பித்துவிட்டால் அவன் அதிவிரைவில் முன்னேற்றமடைந்து வருகிறான். ஏனென்றால் காமத்தையும் குரோதத்தையும் லோபத்தையும் அவன் நீக்க வல்லவனாகிறான்.
அசுரத் தன்மையை அகற்றி மேன்மையடைதற்கு வழிகாட்டுவது எது? விடை வருகிறது :
23. சாஸ்திர விதியை மீறி, விருப்பத்தால் தொழில் புரிவோன் சித்தி பெறான்; அவன் இன்பமெய்தான்; பரகதி அடையான்.
சித்தி அல்லது பரிபூரணத் தன்மையடைகின்றவனுக்கு வாழ்க்கை சுகமுடையதாகத் துவங்கி முக்தியடைதலில் முடிவு பெறுகிறது. இன்னதைச் செய் என்றும், இன்னதைச் செய்யாதே என்றும் சாஸ்திரம் ஆணையிடுகிறது. ஆசைக்கு அடிமையானவன் செய்யவேண்டாமென்பதைச் செய்கிறான்; செய்ய வேண்டியதைச் செய்யாது தவிக்கிறான். சாஸ்திரமோ மனிதனை மேலோனாக்குதற்கென்று அமைந்தது. ஆசையை வென்று சாஸ்திரத்தைப் பின்பற்றுபவர்க்கு அசுர இயல்பைக் களைந்து தெய்வ சம்பத்தைப் பெறுவது எளிதாகிறது.
இக்காரணத்தை முன்னிட்டுச் சாதகன் ஒருவன் செய்ய வேண்டியதாவது :
24. ஆதலால், எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாதது என்று நிச்சயிப்பதில் நீ சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொள். அதையறிந்து சாஸ்திர விதியால் கூறப்பட்ட தொழிலைச் செய்யக் கடவாய். சம்சார சாகரத்தைக் கடந்து அப்பாற் செல்லுதற்கு சாஸ்திரம் உற்ற துணையாகிறது. ஆதலால் இவ்வுலகில் கட்டுண்டு கிடக்கும் ஒருவன் இதினின்று மீளுதற்குக் கையாளுகிற கர்மங்களெல்லாம் சாஸ்திரத்துக்கு உடன்பாடானவைகளாயிருக்க வேண்டும். முற்றிலும் தெய்வ சம்பத்தில் ஊறியிருப்பவர்கள் இயல்பாகவே சாஸ்திரத்தின் ஆணையைப் பின்பற்றுபவர்களாயிருப்பார்கள். அவர்களுடைய செயலும் சாஸ்திரப் பிரமாணமும் ஒன்றுபட்டிருக்கின்றன.நீங்கள் எந்த சாஸ்திரத்தைப் பின்பற்றுகிறீர்கள் என்று ஓர் அன்பர் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் கேட்டார். நான் ஒரு சாஸ்திரத்தையும் பின்பற்றுவதில்லை. என் சித்தமிசை குடிகொண்டுள்ள தெய்வத்தின் அனுமதி கேட்டு என் வாழ்க்கையை நடாத்துகிறேன். ஆகையால் நான் தவறிப் போவதில்லை; என் வாழ்க்கை சாஸ்திரத்துக்கு முரண்படாது என்றார் அவர்.இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே
தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகோ நாம  சோடசோத்யாய:
பகவத் கீதை - அத்தியாயம் 16 தெய்வ அசூர சம்பத் யோகம்
பகவான் : பரதனின் மைந்தனே, அஞ்சாமை, தன் இருப்பில் தூய்மையாய் இருத்தல், இணக்கம், ஈகை, தன்னடக்கம், ஞானவிருத்தி, யாகம், வேதம் படித்தல், தபஸ், எளிமை, அகிம்சை, வாய்மை, சினமின்மை, துறவு, அமைதி, புறங்கூறாமை, இரக்கம், பேராசையின்மை, இனிமை, நிதானம், சலிப்புறாமை, தைரியம், பொறை, வலிமை, தூய்மை, சூதின்மை, செருக்கின்மை இவைகள் தெய்வீகக் குணங்களாகும்.

பகட்டு, அகந்தை, வீண் அபிமானம், கோபம், கொடூரம், அஞ்ஞானம் முதலானவை அசுரக் குணங்களாகும்.

தெய்வீகக் குணங்கள் ஒருவனை விடுபடுத்துகின்றன. அசுரக்குணங்கள் சிறைப்படுத்துகின்றன. பாண்டுபுத்திரா, வருந்தாதே. நீ தெய்வீகக் குணங்களுடன் பிறந்துள்ளாய்.

மனிதர்களிலும் தெய்வீகம், அசுரத்தனம் என இருவிதம் உண்டு. அசுரத்தன்மையை விளக்குகிறேன்.

அசுரர்கள் நன்மை, தீமைகளை அறியார். தூய்மை, வாய்மை, ஒழுக்கம் அவர்களிடத்தில் காணப்படாது.

இவ்வுலகம் பொய் என்றும், ஆதாரமற்றது என்றும், உலகை இயக்கும் கடவுளை இல்லை என்றும், காமத்தால் உலகு படைக்கப்பட்டது, அதைத்தவிர வேறேதும் இல்லை என்றும் அசுரர் கூறுகின்றனர். இதனால் அவர்கள் அறிவிழந்தவர்களாய் தன்னையும் கொன்று, உலகையும் அழிப்பதற்கான லாபமற்ற கொடூரமான செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் நிறைவேறாத காமம், ஆடம்பரம், பெருமை, பொய்க்கவுரவம் இவற்றால் மயங்கி, நிரந்தரமற்றவைகளில் மனம் மயங்கி தீய செயல்களில் ஈடுபடுகின்றனர்.

சாகும் வரை இவர்கள் காமத்தாலும், கவலையாலும், கோபத்தாலும் புலனுகர்வுக்காக தவறான முறையில் செல்வத்தைச் சேர்க்கின்றனர். அறியாமையால் "இது என்னால் அடையப்பட்டது. திட்டமிட்டபடி மேலும் செல்வம் சேர்ப்பேன், இது என்னுடையது, எதிர்காலத்தில் இது இன்னும் பெருகும், அவன் எனக்கு எதிரி, அதனால் கொன்று விடுவேன், நானே தலைவன், நானே சுகம் காண்பவன், பலசாலி, பக்குவமானவன், செல்வாக்குடையவன், தான யாகம் செய்வேன், இவ்வாறு இன்பமாயிருப்பேன்" இவை போன்றவை அசுரர்களின் எண்ணங்கள் ஆகும்.

எண்ணக் குழப்பங்களாலும், மோகத்தாலும் காம போகத்தில் பற்றுள்ள இவர்கள் நரகில் வீழ்கின்றனர்.

திமிராலும், வளத்தாலும், பொய் கவுரவத்தாலும் மயங்கிக் கிடக்கும் இந்த அசுரத் தன்மையினர், நெறிமுறை இன்றி யாகமுஞ் செய்வர். பொய்யான தன்னுணர்வு, பலம், பெருமை, காமம், கோபம் இவற்றில் மயங்கிப் போன இவ்வசுரர்கள் தமக்குள்ளும் பிற உயிர்களுக்குள்ளும் வாழும் பரமாத்மாவின் மீது பொறாமையுற்று உண்மைக்கு எதிரான நிந்தனைகள் புரிகின்றனர்.

மிகவும் தரந்தாழ்ந்த, பொறாமை, குறும்புகள் நிறைந்த இவர்கள் கடல் போன்ற ஜட இருப்பின் பலவிதமான அசுர யோனிகளுள் என்னால் தள்ளப்படுகின்றனர். மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து, என்னை அடையமுடியாத கீழ் நிலையை அடைகின்றனர்.

ஆன்மாவை அழிவுப் பாதையில் அழைத்துச் செல்லும் மூன்று நரக வாசல்கள் காமம், கோபம், லோபம் ஆகியவை. அறிவாளிகள் இவற்றைத் துறக்க வேண்டும். இதிலிருந்து தப்பிய ஒருவன், தன்னை அறிவதற்கு சாதகமான செயல்களைச் செய்து, படிப்படியாக உயர்ந்து பரம இலக்கை அடைகிறான்.

காமத்தால் சாஸ்திர நெறிகளைப் பொருட்படுத்தாது, மனம் போனபடி வாழ்பவன் ஆன்ம பக்குவத்தையோ, சுகத்தையோ, பரம இலக்கையோ அடைவதில்லை. ஆகையால் நல்வினை, தீவினைகளை அறிய சாஸ்திர விதிமுறைகளைக் கடைப்பிடித்து உயர முயல வேண்டும்.


No comments:

Post a Comment