பகவத்கீதை | விச்வரூபதர்சன யோகம்
இங்ஙனம் கண்ணனுடைய பெருமைகளைக் கேட்ட அர்ஜுனன் அவற்றை நேரில் காண வேண்டுமென்ற விருப்பமுற்றுக் கண்ணனை வேண்ட, அவர் அவற்றைக் காண்பதற்குரிய திவ்ய நேத்திரங்களை அளிக்கிறார். அர்ஜுனன் அவற்றால் கண்ணனுடைய விசுவரூபத்தைக் கண்டு மகிழ்கிறான். விசுவரூபத்தின் சொரூபம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அநேக வாய்களும், பல கண்களும், பல ஆயுதங்களும், சிறந்த ஆடை ஆபரணங்களும், சிறந்த வாசனைகளும் பொருந்திய அந்த விசுவரூபத்தில் வையக முழுவதும் ஒருங்கே அடங்கியிருப்பதைக் கண்ட அர்ஜுனன் வியப்புற்றுக் கண்ணனைத் துதிக்கிறான்.
பிறகு அர்ச்சுனனது வேண்டுகோளின் பேரில், கண்ணன் தமது விசுவரூபத்தைச் சுருக்கிக்கொண்டு, முன்போல் கைகளில் சாட்டையும் சங்கு, சக்கரங்களையுமேந்தி நின்று, தமது உண்மையான சொரூபத்தைக் காணவும், தம்மைப் பெறவும் பக்தி ஒன்றே சிறந்த மார்க்கமாதலால் தம்மையே நேசித்திருக்கும்படி அர்ச்சுனனுக்கு உபதேசிக்கிறான்.
அர்ஜுந உவாச
1. அர்ஜுனன் சொல்லுகிறான்: என்மீதருள் பூண்டு, எனக்கிரங்கி, ஆத்ம ஞானமென்ற பரம ரகசியத்தை நீ எனக்கு உரைத்தது கேட்டு என் மயக்கம் தீர்ந்து போயிற்று.தம்முடைய ஒரு சிறு அம்சம் இவ்வுலகனைத்தும் ஆனது என்றும், தாம் அகிலாண் டத்தையும் தாங்கிக் கொண்டு அதற்கப்பாலும் இருப்பதாக பகவான் சொன்னார். அதைக் கேட்ட அர்ஜுனன் தான் அந்த சொரூபத்தை நேரே சாக்ஷõத்கரிக்க வேண்டுமென்ற விருப்பம் கொண்டான்.அவன் பகர்ந்ததன் உட்கருத்தாவது :
என்னைப்பற்றியும், உலகைப்பற்றியும், உலகுக்கும் எனக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும், என் கடமையைப் பற்றியும் நான் இது பரியந்தம் கொண்டிருந்த எண்ணங்களெல்லாம் வெறும் மயக்கமேயாம். தாம் உபதேசித்தருளிய பரதத்துவ போதத்தால் அந்த மோஹம் அகன்று போயிற்று. மேலும் :
என்னைப்பற்றியும், உலகைப்பற்றியும், உலகுக்கும் எனக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும், என் கடமையைப் பற்றியும் நான் இது பரியந்தம் கொண்டிருந்த எண்ணங்களெல்லாம் வெறும் மயக்கமேயாம். தாம் உபதேசித்தருளிய பரதத்துவ போதத்தால் அந்த மோஹம் அகன்று போயிற்று. மேலும் :
2. உயிர்களின் தோற்றத்தையும் அழிவையும் பற்றி விரிவுறக் கேட்டேன். தாமரையிதழ் போன்ற விழிகளையுடையோய், நின் கேடற்ற பெருமையையும் கேட்டேன்.பகவான் சுருக்கமாகச் சொன்னேன் என்றதை அர்ஜுனன் விரிவாகச் சொல்லப்பட்டது என்று ஏற்றுக்கொள்கிறான். இருவர் கருத்தும் அவரவர் நிலைமையில் உண்மையே.அனைத்துக்கும் பகவான் முதற் காரணமாயிருக்கிறார். ஆனால் அவர் ஒன்றிலும் கட்டுப்படுவதில்லை. நடைமுறைகளனைத்துக்கும் விளக்கம் அவரிடத்திருந்து பெறலாம். இத்தனையும் உண்டு பண்ணியும் அவரிடத்துத் தேய்வு ஒன்றுமில்லை. இவை யாவும் அவருடைய மஹிமையாம்.
3. பரமேசுவரா, புரு÷ஷாத்தமா, நின்னைப்பற்றி நீ எனக்குச் சொல்லியபடியே நின் ஈசுவர ரூபத்தைக் காண விரும்புகிறேன்.
எங்கும் நிறைந்துள்ள விஷ்ணுவாகிய அவரிடம் ஞானம், ஐசுவரியம், பலம், சக்தி, வீரியம், தேஜஸ் ஆகிய ஆறு குணங்கள் நிறைந்திருக்கின்றன. பகவான் என்னும் சொல்லுக்கு ஷட்குண சம்பன்னன் என்று பொருள். ஆறுவித தெய்வ சம்பத்துக்கள் அவரிடம் இருக்கின்றன. அத்தனை மஹிமைகளோடு கூடிய அவரைக் காண அர்ஜுனன் விரும்பியது இயல்பே.
4. இறைவனே, யோகேசுவரா, அதை நான் காணுதல் சாத்தியமென்று நீ கருதுவாயெனில், எனக்கு நின் அழிவற்ற ஆத்மாவைக் காட்டுக.யோகத்துக்கும் யோகிகளுக்கும் தலைவன் யோகேசுவரன். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய பஞ்ச கிருத்தியங்கட்கும் தலைவன் இறைவன். காட்சியளித்தல் அல்லது அருளல் வேண்டுமென்று அர்ஜுனன் விண்ணப் பிக்கிறான். ஈசுவரனது விசுவரூபத்தைக் காணவேண்டுமென்பது அவன் விருப்பம். ஞான தர்சனம் கொடுத்தருள யோகேசுவர னுக்கு இயலும்.தன்னுடைய தீர்மானத்துக்கு முக்கிய ஸ்தானம் தராது, ஈசுவரனுடைய அனுக்கிரகத்துக்கு முதன்மை கொடுப் பது பக்தனுடைய இயல்பு. மனிதன் எதற்குத் தகுதியுடையவன் அல்லது தகுதியற்றவன் என்று தான் அறிந்துகொள்வதைவிட பகவானே அதை உள்ளபடி அறிகிறார்.
இங்ஙனம் அர்ஜுனனால் விண்ணப்பிக்கப் பெற்றதும் :
ஸ்ரீ பகவாநுவாச
5. ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பல நூறாகவும், பல்லாயிரமாகவும், வகை பல, நிறம் பல, அளவு பலவாகும் என திவ்ய ரூபங்களைப் பார்! பார்த்தா.தெய்வத்தோடு சம்பந்தப்படாதவைகள் போல் தென்படுபவைகள் உண்மையில் தெய்வப் பெற்றியுடைத்திருக்கின்றன. ஆகையால் அவைகள் திவ்வியமானவைகள் எனப்படுகின்றன. வடிவத்திலும் நிறத்திலும் தன்மையிலும் வேறுபட்டு, எண்ணிக்கையில் அடங்காதிருப்பவைகளெல்லாம் ஒரு பொருளின் எண்ணிறந்த தோற்றங்கள் என்பது இனி விளங்கும்.ஒவ்வொரு வஸ்துவும் நாராயணன். மனிதன் நாராயணன்; ஜீவப் பிராணி நாராயணன். ரிஷியும் நாராயணன்; போக்கிரியும் நாராயணனே. உலகில் உள்ள யாவும் நாராயணனே. நாராயணன் பல விதமான திருவிளையாடல்களைச் செய்தருள்கின்றான். எல்லாப்பொருள்களும் அவனுடைய பல்வேறு உருவங்களாகவும் அவனது பிரபாவத்தின் தோற்றங்களாகவும் இருக்கின்றன.
6. ஆதித்யர்களைப் பார்; வசுக்களைப் பார்; அசுவினி தேவரைப் பார்; மருத்துக்களைப் பார்; பாரதா, இதற்கு முன் கண்டிராத பல ஆச்சரியங்களைப் பார்.நீ இதுவரையில் கண்டிருந்தது மிகமிகக் குறைந்தது. மேலும் காணக்கிடப்பது கணக்கில் அடங்காதது என்பதை நீ இப்பொழுது உணர்வாய். அதுமட்டுமல்ல :
7. அர்ஜுனா, இன்று, இங்கே என்னுடலில் சராசரமான உலகம் முழுவதும் ஒருங்கு நிற்பதைப்பார்; இன்னும் வேறு நீ எதைக்காண விரும்பினும், அதை இங்குக் காண்.பாண்டவர்கள் கௌரவர்களை ஜயிப்பதா அல்லது கௌரவர்கள் பாண்டவர்களை ஜயிப்பதா? இதில் எது உசிதம் என்று தனக்குத் தெரியவில்லையென்று அர்ஜுனன் இரண்டாம் அத்தியாயம் ஆறாவது சுலோகத்தில் சொன்னான். அதுபோன்ற மர்மங்களைத் தெரிந்துகொள்ள விருப்ப மிருந்தாலும் அவைகளைத் தெரிந்துகொள்க. விசுவரூபதர்சனத்தில் அண்டங்களின் அமைப்பும், நடைமுறையும் மற்றும் யாவும் உள்ளபடி விளங்கும்.
ஆனால் அக்காட்சி ஊனக்கண்ணால் காணக் கூடியதா? இதற்கு விடை வருகிறது :
8. உன்னுடைய இயற்கையான இக்கண்களால் என்னைப் பார்க்க முடியாது. உனக்கு ஞானக் கண் கொடுக்கிறேன். என்னுடைய ஈசுவர யோகத்தைப் பார்.பிராகிருத கண்கொண்டு பிரகிருதியைத்தான் காணமுடியும். அதிலேயும் தூரத்தில் இருப்பதைப் பார்க்க தூர திருஷ்டிக் கண்ணாடியின் உதவிவேண்டும். நுண்பொருளை அதற்கேற்ற கண்ணாடியின் துணைகொண்டே காணலாம். அங்ஙனம் ஈசுவரனது விசுவரூபத்தைக் காண்பதற்கு ஞானக்கண் தேவை. நெறியான வாழ்க்கை யுடையவர்க்கு அது இறைவனது அருளால் உண்டாகிறது. பஞ்சேந்திரியங்களின் துணையின்றியே ஞானக் கண்ணானது அவ் இந்திரியங்களின் தொழில்களைச் செய்கிறது. அதற்குமேல் ஈசுவர மஹிமையை வேண்டியவாறு தெரிந்து கொள்ளவும் ஞானக் கண்ணுக்கு இயலும். தெளிந்த மனமே ஞானக் கண்ணாகிறது. பெரியோர்கள் பக்தியைக் கண்களில் தீட்டும் மைக்கு ஒப்பிட்டிருக்கின்றனர். ஸ்ரீமதி ராதை ஒரு சமயம் ஸகிகாள், நான் எனது கிருஷ்ணனை எல்லாவிடங்களிலும் காண்கிறேன் என்றான். அதற்குக் கோப ஸ்திரீகள், தோழி, நீ பக்தியாகிய அஞ்சனத்தைக் கண்களில் இட்டுக்கொண்டிருக்கிறாய். ஆதலால்தான் அப்படித் தெரிகின்றது என்றார்கள்.நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பொசிவது போன்று அந்த விசுவரூபக் காட்சியை ஸஞ்ஜயனும் வியாசபகவானும் அதே சமயத்தில் காண்கிறார்கள். தான் கண்டபடி ஸஞ்ஜயன் அதை திருதராஷ்டிரருக்கு விளக்குகிறான்.
ஸஞ்ஜய உவாச
9. சஞ்சயன் சொல்லுகிறான்: அரசனே, இவ்வாறுரைத்துவிட்டு, அப்பால் பெரிய யோகத்தலைவனாகிய ஹரி, பார்த்தனுக்கு மிக உயர்ந்த தன் கடவுள் வடிவைக் காட்டினான்.
10. (அவ்வடிவம்) பல வாய்களும் பல விழிகளுமுடையது; பல அற்புதக் காட்சிகளுடையது; பல திவ்யாபரணங்கள் பூண்டது; பல தெய்வீகப் படைகள் ஏந்தியது.உலகெலாம் அவன் சொரூபமாதலால் அவனுக்கு முகங்களும் கண்களும் கணக்கில் அடங்காதவைகள். மனிதனது சிற்றறிவுக்கு எட்டாத அரும்பெரும் செயல்கள் அவனால் நடைபெறுகின்றன. வாதலால் அவனிடத்து அற்புத தர்சனங்கள் நிறைந்துள்ளன. அழகுக்குப் பிறப்பிடம் அவன். பிரகிருதியிலும் அதற்கப்பாலும் உள்ள செந்தரியம் யாவும் அவனுடையவைகள். அதை முன்னிட்டு அவன் தெய்விக ஆபரணங்களை அணிந்தவன் எனப்படுகிறான். தேவகாரியம் எவ்விதத்திலும் நடைபெற்று விடுகிறது. யாரும் அதற்கு இடைஞ்சல் செய்ய முடியாது. அவன் ஏந்தியிருக்கும் திவ்விய ஆயுதங்கள் பல அத்திறனை விளக்குகின்றன.
11. திவ்ய மாலைகளும் ஆடைகளும் புனைந்தது; திவ்ய கந்தங்கள் பூசியது; எல்லா வியப்புக்களும் சான்றது; எல்லையற்றது; எங்கும் முகங்களுடைய தேவரூபம்.இயற்கையை உடலாய் ஏற்றுக்கொண்டு அதனுள் இறைவன் உயிராய் ஒளிருமிடத்து இவ்வருணனைகளெல்லாம் ஊனக்கண்ணால் காண்பவர்களுக்கே பொருத்த முடையவைகளாகின்றன. பின்பு, ஞானக்கண் கொண்டு காணுமிடத்து தெய்வப் பெற்றியே யாண்டும் பொலியும்.
12. வானத்தில் ஒருங்கே ஆயிரம் இரவிகள் எழுவாராயின் அங்கு தோன்றும் ஒளியை அந்த மகாத்மாவின் ஒளிக்கு நிகராகக் கூறலாம்.தெரிந்த ஒன்றை உபமானமாகக் கொண்டுதான் தெரியாத ஒன்றை ஏகதேசம் அறிந்துகொள்ளலாம். காணாதவர்க்கு ஈசனது காந்தி ஒன்றும் விளங்காது. உண்மையில் அவன் அவனுக்கே ஒப்பாவான். ஒருமிக்க உதயமான ஆயிரம் ஞாயிறுகளோடு ஒப்பிடுவதே அவன் ஒப்பில்லான் என்பதை விளக்குகிறது. ஆதலால் அவன் ஒருவனே மஹாத்மா என்னும் சொல்லுக்கு இலக்காகிறான்.
13. அங்கு பல பகுதிப்பட்டதாய், வையக முழுவதும், அந்தத் தேவ தேவனுடைய சரீரத்தில் ஒருங்குற்று நிற்பதை அப்போது பாண்டவன் கண்டான்.வேற்றுமையில் ஒற்றுமை குடி கொள்வது இயற்கையின் அமைப்பு. வானவர், மக்கள், விலங்கு, பறவை, நிலைத்திணை ஆகிய எண்ணிறந்த இனங்களாக உயிர்கள் வடிவெடுக்கின்றன. இவையாவும் சேதனத்தின் பல்வேறு தோற்றங்கள். மண், உலகு, கீழ் உலகு, மேல் உலகு ஆகிய இவையாவும் போகத்துக்குரிய இடங்களாகின்றன. போகப் பொருள்கள் பல இவ்வுலகெங்கும் நிறைந்திருக்கின்றன. இவை யாவும் உயிர்க்குயிராய், அறிவுக் கறிவாய் உள்ள இறைவனில் அடங்கியிருப்பது ஒற்றுமையைக் காட்டுகிறது.
14அப்போது தனஞ்ஜயன் பெரு வியப்பெய்தி, மயிர் சிலிர்த்து, அக்கடவுளை முடியால் வணங்கிக் கைகளைக் கூப்பிக் கொண்டு சொல்லுகிறான்.தேவதர்சனம் மனதின்கண் பெரிய மாறுதலை உண்டுபண்ணுகிறது. அது அகத்தும் புறத்தும் சில அறிகுறிகளுடன் பரிணமிக்கிறது. வியப்படைதல் உள்ளத்தின் இயல்பு. உரோமம் சிலிர்த்தல், தலைவணங்குதல், கைகூப்புதல் முதலியன உடலின் கண் தோன்றும் பரவசச் செயல்களாம். இனி, மன நிறைவு நிறைவுமொழியாய்ப் பொங்கி வழிகிறது. அது வருமாறு :
அர்ஜுந உவாச
15அர்ஜுனன் சொல்லுகிறான்: தேவனே, நின் உடலில் எல்லாத் தேவர்களையும் காண்கிறேன், பூத வகைகளின் தொகுதிகளைக் காண்கிறேன். தாமரை மலரில் வீற்றிருக்கும் ஈசனாகிய பிரமனையும், எல்லா ரிஷிகளையும் தேவ சர்ப்பங்களையும் இங்குக் காண்கிறேன்.உயிர்களுக்கெல்லாம் தலைவனாயிருப்பதால் நான்முக பிரம்மா ஈசன் என்று அழைக்கப்படுகிறார். அவர் மஹாவிஷ்ணுவின் உந்திக் கமலத்தில் வீற்றிருப்பவர். சரம் அசரம் ஆகிய உயிர்த் தொகுதிகள் யாவும் விசுவ ரூபத்தில் அடங்கப்பெற்றிருக்கின்றன. வாஸுகி முதலிய ஸர்ப்பங்களும் வசிஷ்டர் முதலிய ரிஷிகளும் அங்குத் தென்படுகின்றனர்.
16. பல தோளும், பல வயிறும், பல வாயும், பல விழிகளுமுடைய எல்லையற்ற வடிவிலே நினை எங்கணும் காண்கிறேன். எல்லாவற்றுக்கும் ஈசனே, எல்லாந் தன் வடிவாகக் கொண்டவனே, உனக்கு முடிவேனும், இடையேனும் காண்கிலேன்.
தோன்றிய யாவும் அவனேயாகி அவைகளுக்கு அப்பாலும் அவனே இருக்கிறான் என்பது பொருள்.
17. -மகுடமும், கதையும், சக்கரத்தோடு, எங்கும் ஒளிரும் ஒளிதிரளாகவும், தழல்படு தீயும் ஞாயிறும் போல, பார்க்கக் கூசுகின்ற, எங்கும் நிறைந்ததுமாக, அளவிடற்கரியதாக உன்னைக் காண்கிறேன்.மகுடமும், தண்டும், வலயமும் தரித்தாய், ஒளித் திரளாகி யாங்கணும் ஒளிர்வாய், தழல்படு தீயும் ஞாயிறும் போல அளவிடற்கரியதாக நினைக் காண்கிறேன்.சொப்பனத்தில் காணும் ஜோதி ஊனக் கண்ணுக்குத் தட்டுப்படுதல் இல்லையெனினும் அதில் கண் கூசுவது போன்றிருக்கிறது. அதிலும் பரந்த பாங்கில் ஞானக் கண்ணுக்கும் கூசுதல் உண்டாகிறது. அவ்வொளி உள்ளத்தை உறுதிப்படுத்தும் தன்மையது. ஞானக்கண் மற்ற இந்திரியங்களைவிடப் பன்மடங்கு தெளிவுடையது எனினும், அதைக்கொண்டும் விசுவ ரூபத்தை முழுதும் அளக்க முடியாது. ஆகையால் அது அப்ரமேயம் எனப்படுகிறது.சத்வ குணத்தின் நிறம் தூவெண்மை. ஆத்ம பிரகாசம் அதன்கண் தோயுமிடத்து அது சுடர்விட்டெரியும் சூரியாக்கினி போன்று மிளிர்வது இயல்பு.
இத்தகைய காட்சியை அடையப்பெற்ற அர்ஜுனன் சித்தாந்தப்படுத்துவது யாது என்றால்:
18. அழிவிலாய், அறிதற்குரியனவற்றில் மிகவுஞ் சிறந்தது; வையத்தின் உயர் தனி உறையுளாவாய்; கேடிலாய்; என்று மியல் அறத்தினைக் காப்பாய்; சநாதன புருஷன் நீயெனக் கொண்டேன்.பகவானை அறிந்தவன் பரத்துக்கு உரியவன் ஆகின்றான். ஆதலால் பகவான் ஒருவரே சாதகன் ஒருவனால் அறியத்தகுந்தவர். சஞ்சரிக்கும் மேகத்துக்குச் சலனமற்ற ஆகாசம் இருப்பிடமாவது போன்று உலகம் யாவுக்கும் இருப்பிடம் பரமாத்மா. உலகம் அழியும் பொழுது அவர் மாறாதிருக்கிறார். அவருடைய சந்நிதான விஷேத்தால் தர்மம் - இயற்கையின் நடைமுறை-கோணாது நிகழ்கிறது. இவை யாவும் இப்பொழுது அர்ஜுனனுக்குப் பிரத்தியக்ஷமாகின்றன. மேலும் அவன் அறிவதாவது :
19. ஆதியும் நடுவும் அந்தமுமில்லாய், வரம்பிலா விறலினை; கணக்கிலாத் தோளினை; ஞாயிறுந் திங்களும் நயனமாக் கொண்டனை; எரியுங்கனல் போலியலு முகத்தினை; ஒளியால் முழுமையுலகையும் கொளுத்துவாய்; இங்ஙனமுன்னைக் காண்கிறேன்.காலதேச வர்த்தமானத்தில் கட்டுப்படாமையினால் அவருக்கு ஆதி நடு அந்தமில்லை. உலகத்தைப் படைத்துக் காத்துத் துடைப்பது அவருக்கு விளையாட்டாக நடைபெறுவதாதலால் அவர் அனந்த வீரியமுடையவர். உலகத்திலுள்ள கைகளையெல்லாம் கொண்டு அவர் தமது காரியத்தைச் செய்துமுடிப்பதால் அவர் கணக்கற்ற கைளையுடையவர் என்று சொல்லப்படுகிறார். இந்திரியங்களுக்குப் பிரகாசத்தைக் கொடுப்பது ஆத்மா. சந்திரன், சூரியன், அக்கினி ஆகியவைகள் பெற்றுள்ள ஒளி பரமாத்மாவினிடத்திருந்து பிரதிபலிக்கின்ற ஒளிகளாம். அகிலாண்டத்திலும் ஆத்ம பிரகாசம் ஜ்வலிப்பதால் உபசாரமாக ஞாயிறு திங்கள் கண்களென்றும், தீ வாயென்றும் வர்ணிக்கப்படுகின்றன. விறகுக் கட்டையில் தீ வியக்தமாவது போன்று விசுவத்தின் வாயிலாகப் பரம்பொருள் வியக்தமாகிறது.
20. வானத்துக்கும் பூமிக்கும் நடுவேயுள்ள இடைவெளியும் எல்லாத் திசைகளும் நின்னால் நிரப்புற்றிருக்கின்றன. உன்னுடைய அற்புதமும் உக்கிரமுமான இவ்வடிவத்தைக் கண்டு மூன்று உலகங்களும் சோர்வெய்துகின்றன.இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்துள்ளான் என்பது இப்பொழுது அர்ஜுனனுக்கு பிரத்யக்ஷமாக விளங்குகிறது. இனிமையும் பயங்கரமும் ஆகிய இரண்டும் இறைவன்பால் உள. அவைகளுள் ஈண்டு பயங்கரக் காட்சியை பார்த்தன் பார்க்கிறான். அவனது மனப்பான்மையே அதற்குக் காரணம். பயங்கரமான யுத்தக்காட்சி தன்னுடைய சிருஷ்டியென்று முதலில் எண்ணினான். உலகைத்திருத்தியமை க்கத் தெய்வமே அத்தகைய உக்கிர வடிவெடுக்க வல்லவனென்று இப்பொழுது உணர்கிறான்.வெற்றி யாருடையது என்ற ஐயம் அர்ஜுனனுக்கு இருந்தது (அத். 2; சு.6) அதை அகற்றுதற்கான காட்சியை பகவான் தருகிறார். பாண்டவர்களுக்கே வெற்றி என்பது விளங்குகிறது. அதைக் காணலுற்ற குந்தி மைந்தன் கூறுகிறான் :
21. இந்த வானவர் கூட்டமெல்லாம் நின்னுள்ளே புகுகின்றது. சிலர் அச்சமெய்தி நின்னைக் கைகூப்பிப் புகழ்கின்றனர். மகரிஷிகளும் சித்தர்களுமாகிய கூட்டத்தார் நின்னை வண்மையுடைய புகழுரைகள் சொல்லிப் புகழ்கின்றார்.நர வடிவெடுத்து வந்துள்ள வசுக்கள் முதலிய தேவகணங்கள் தங்கள் பூலோக லீலையை முடித்துக்கொண்டு பகவானிடத்து ஒடுங்குகின்றனர். பூ பாரம் ஒழிகிறது என்பதைத் தெரிந்தும் தெரியாமலும் அவர்கள் மௌனமாக மறைகிறார்கள். பகவானுடைய உக்கிர விளையாட்டை ஒருவாறு அறிந்துகொண்ட சிலர் சிரசின்மீது கைகூப்பி நடுங்கி வணங்குகின்றனர். அச்சத்தால் நிறைமொழி யொன்றும் இயம்ப அவர்களுக்கு இயலவில்லை. உலகுக்குக் கேடுகள் பல வரப்போகின்றனவென்று குறிப்பால் அறிந்த நாரதர் போன்ற மஹரிஷிகளும் கபிலர் போன்ற சித்தர்களும் சம்பூரண ஸ்தோத்திரங்களால், சொற்சுவையும் பொருட் சுவையும் நிறைந்த புகழ்களால் உலகுக்கு மங்களம் உண்டாகுக என்று போற்றினார்கள். உடலில் உள்ள கேடுகளை நீக்குதற் பொருட்டு நோய் வருவது போன்று உலகில் உள்ள கேடுகளை நீக்குதற்பொருட்டு இறைவன் இத்தகைய ஸம்ஹாரச் செயலைச் செய்க. அதினின்று நன்மை விளைக என்ற கருத்தடங்கிய பாசுரங்களைப் பேரறிஞர் பாடிப் போற்றினார்கள். இறைவனது ஆணையால் நடைபெறும் உலகச் செயல்களில் பொருள் படாதவை ஒன்றுமில்லையென்பது பேரறிஞருக்கு விளங்குகிறது.
22. ருத்திரர், ஆதித்யர், வசுக்கள், சாத்யர், விசுவேதேவர், அசுவினி தேவர், மருத்துக்கள், உஷ்மபர், கந்தர்வர், யக்ஷர், அசுரர், சித்தர் இக்கூட்டத்தார்களெல்லாரும் நின்னை வியப்புடன் நோக்குகின்றனர்.ஊஷ்மபர் என்பது உஷ்ணமாயிருப்பதைப் பானம் செய்பவர்கள் என்று பொருள்படுகிறது. பித்ரு தேவர்கள் அங்ஙனம் அருந்துதலில் மகிழ்ச்சியடைகிறார்கள். அத்தகைய தேவகணங்களும் பகவானுடைய விசுவ ரூபத்தை முழுதும் தெரிந்துகொள்ள இயலாதவர்களாயிருக்கிறார்கள். தங்கள் அறிவுக்கு எட்டியவளவு அவர்கள் அந்த ரூபத்தைக் கண்டு வியந்து நிற்கிறார்கள்.
23. பெருந்தோளாய், பல வாய்களும், விழிகளும், பல கைகளும், பல கால்களும், பல வயிறுகளும், பல பயங்கரமான பற்களுமுடைய நின் பெருவடிவைக் கண்டு, உலகங்கள் நடுங்குகின்றன, யானும் அங்ஙனமே.தன் மனநிலையையே ஒருவன் உலகின்கண் காண்கிறான். பகவானது விசுவரூபத்தையும் அவரது பயங்கரச் செயலையும் முன்பு அர்ஜுனன் கண்டு அறிந்தவன் அல்லன். அதை அவன் இப்பொழுது முதல் கண்டு கலங்குகிறான். உலகிலுள்ள மற்ற உயிர்களும் கலங்குவதாக அவன் காட்சியில் படுகிறது. அவனது நிலையில் இருக்கிறவர்களுக்கெல்லாம் கலக்கமேயாம். ஏன் அவனுக்கு அச்சம் ஏற்பட்டதெனின் அதற்கு விடை அவனது வாயினின்று வருகிறது :
24. வானைத் தீண்டுவது, தழல்வது, பல வர்ணங்களுடையது, திறந்த வாய்களும் கனல்கின்ற விழிகளுமுடையது, இளைய நின் வடிவத்தைக் கண்டு விஷ்ணுவே, எனக்கு நிலைகொள்ளவில்லை, யான் அமைதி காணவில்லை.காணாத ஒன்றைக் காணுமிடத்து ஒருவனுக்குக் கலக்கம் உண்டாவது இயல்பு. கோர சொரூபத்தை சாந்த சொரூபத்தோடு சேர்த்துணரும் பரியந்தம் மனக் கலக்கத்தை மாற்றலரிது.
அம் மனக்கலக்கத்தால் மேலும் விளைந்தது யாது? விடை வருகிறது :
25. அஞ்சுதரும் பற்களை யுடைத்தாய், ஊழித் தீ போன்ற நின் முகங்களைக் கண்ட அளவிலே எனக்குத் திசைகள் தெரியவில்லை; சாந்தி தோன்றவில்லை. தேவர்களின் தலைவனே; வையகத்துக்கு உறைவிடம் ஆவாய்; அருள் செய்க.
ஒரு சூரியனை அல்லது சந்திரனை இலக்காக வைத்துக் கொண்டு திசைகள் அறியப்படுகின்றன. பார்க்குமிடமெங்கும் பரஞ்சோதியாயிருப்பதால் திக்குகள் தென்படாமற் போய்விட்டன. ஊழித்தீயானது பொருள்களையெல்லாம் விழுங்குவது மீண்டும் நாள் அமைதியடைதற் பொருட்டு சாந்த சொரூபத்தைக் காட்டியருள்வீராக.
26. இந்தத் திருதராஷ்டிரனின் மக்களெல்லாரும் மற்ற அரசக் கூட்டத்தார்களுடன் நின்னுள்ளே (புகுகின்றனர்). பீஷ்மனும், துரோணனும், சூதன் மகனாகிய இந்தக் கர்ணனும், நம்முடைய பக்கத்து முக்கிய வீரர்களும்.
27. கொடிய பற்களுடைய பயங்கரமான நின் வாய்களில் விரைவுற்று வீழ்கின்றனர். சிலர் நின் பல்லிடைகளில் அகப்பட்டுப் பொடிபட்ட தலையினராகக் காணப்படுகின்றனர். (26-27)சூதபுத்திரன் என்றால் தேர் ஓட்டியின் மகன் என்று பொருள் இங்கு இச்சொல் கர்ணனைக் குறிக்கிறது.அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் பெரும்பகை. அத்தகைய பகைவனே அழிவதை முற்கூட்டி அர்ஜுனன் அறிகிறான் அதற்குமேல் பகைவர் எல்லாரும் அழிவதையும் அவன் அறிகின்றான். தன் பக்கத்திலும் பெரிய வீரர்கள் பலர் மடிவது திண்ணம். போரின்போக்கு பொதுப்பட பூபாரத்தைக் குறையிருப்பதாயிருக்கிறது. யாருக்காவது தனி நன்மை வந்தமையும் அறிகுறிகள் தென்படவில்லை.
28. பல ஆறுகளின் வெள்ளங்கள் கடலையே நோக்கி வந்து வீழ்வது போல், இந்த நரலோக வீரர் நின் சுடர்கின்ற வாய்களில் வந்து வீழ்கின்றனர்.மலையினின்று வெளிவந்ததும் நதிகள் கடலைநோக்கி ஓடியாக வேண்டும். அதைத்தவிர அவைகளுக்குப் புகலிடம் வேறு ஏதுமில்லை இந்த மண்ணுலக வீரர்கள் என்னென்னவோ மனக் கோட்டை கட்டுகின்றனர். ஆனால் அவர்களெல்லாம் உமது விராட் வடிவத்தில் மறைவது திண்ணம். அவர்கள் இன்னும் உண்மையை அறியவில்லை யெனினும் நீர் அவர்களை எடுத்து விழுங்க ஆரம்பித்துவிட்டீர்.
29. விளக்குப் பூச்சிகள் மிகவும் விரைவுடனெய்தி எரிகின்ற விளக்கில் வீழ்ந்து நாசமுறுதல் போலே, உலகங்கள் மிகவும் விரைவுடன் நின் வாய்களில் வந்து விழுந்து நாசமடைகின்றன.சமுத்திரத்தில் சங்கமமான நதிகள் தமது நாமரூபங்களை இழக்கின்றன. ஆயினும் நதியின் நீருக்கு அழிவில்லை. தீயில் வீழும் விட்டில் பூச்சிகள் உடலையே இழக்கின்றன. போர்முனையில் கூடிய வீரர்கள் தங்கள் சுபாவத்தால் தூண்டப்பெற்று, அறிவை இழந்து உடலையும் இழக்க முந்துகின்றனர். அவர்களை அழித்துப் புதிய வடிவில் அமைப்பதன் மூலம் அவர்களைத் திருத்துதற்குப் பகவான் துணைபுரிகிறார்.
30. கனல்கின்ற நின் வாய்களால் எப்புறத்தும் எல்லா உலகங்களையும் நீ தீண்டுகிறாய். விஷ்ணு! நின் உக்கிரமான சுடர்கள் கதிர்களால் வைய முழுவதையும் நிரப்பிச் சுடுகின்றன.எங்கும் வியாபித்திருப்பவர் விஷ்ணு. அவர் மங்கள சொரூபமாக எங்கும் வியாபித்திருப்பது போன்று ஊழித்தீயாக உக்கிர சொரூபம் எடுத்து வியாபகமாவதும் உண்டு. உலகைச் சீர்படுத்த வேண்டிய நெருக்கடியில் அவர் அங்ஙனம் செய்கிறார். ஆனால் அவர் போக்கை அறியாத அர்ஜுனன் விண்ணப்பித்ததாவது :
31. உக்கிர ரூபந் தரித்த நீ யார்? எனக்குரைத்திடுக. தேவர்களில் சிறந்தாய், நின்னை வணங்குகிறேன். அருள்புரி. ஆதியாகிய உன்னை அறிய விரும்புகிறேன். இங்கு உனது தொழிலை அறிகிலேன்.அழகுத்தெய்வம் மனதைக் கவர்கிறது. அக் கவர்ச்சியே வணக்கமென்று சொல்லப்படுகிறது. பின்பு, பயங்கர சொரூபம் இன்னொரு போக்கில் உள்ளதைக் கவர்கிறது. அச்சமூட்டுகிற உக்கிர மூர்த்தியின் அருள் பிரசாதத்தை எப்படியாவது பெறவேண்டுமென்று மனது நடுநடுங்கி விண்ணப்பிக்கிறது. அப்படி அச்சமூட்டும் தெய்வத்தின் அருளாலேயே அச்சம் வெல்லப்படுகிறது. பயங்கர மூர்த்தியோடு அங்ஙனம் பயந்து செய்யும் இணக்கமும் வணக்கமெனக் கருதப்படுகிறது. ஜீவர்களின் இயல்பு உக்கிர மூர்த்தியை விரும்பி வணங்குவது அல்ல என்பதை ஈண்டு அர்ஜுனனது செயல் விளக்குகிறது. தேவர்கள் உட்பட அகிலத்துக்கும் முழுமுதற் பொருள் ஈசன் என்பதுஅர்ஜுனனு க்குப் பிரத்தியக்ஷம். ஆனால் அதனாலேயே அவன் அவரை முழுதும் அறிந்துகொண்டவன் அல்லன். ஒரு மனிதனும் அவனது செயலும் தொடர்ந்து சம்பந்தப்பட்டவைகள். செயலைக் கொண்டு மனிதனை அறியலாம். செயலைக்கொண்டு கடவுளையும் ஒருவாறு அறியலாம். அர்ஜுனன் விரும்புவதும் அதுவே. பகவானது கிருத்தியங்களைக்கொண்டு பகவானது மகிமைகளை அறிய அவன் அவாவுறுகின்றான். அவ்விருப்பத்தை அவன் அஞ்சி வெளியிடுவானாயினன். அதற்கு பகவானது விடையும் வருகிறது :
ஸ்ரீபகவாநுவாச
32. ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: உலகத்தை அழிக்கத் தலைப்பட்ட காலமே நான் மனிதர்களை இங்குக் கொல்லத் தொடங்கியுள்ளேன். இங்கிரு திறத்துப் படைகளிலே நிற்கும் போராட்கள் அனைவரினும் உன்னைத் தவிர வேறு யாரும் மிஞ்சமாட்டார்கள்நீ யார்? என்ற கேள்விக்கு நான் வல்லமை வாய்ந்த காலம் என்று பகவான் விடை விடுக்கிறார். பகவானுக்கு அமைந்த பல விளக்கங்களுள் அவர் மஹா காலம் என்பதும் ஒன்று. காலம் முன்னும் பின்னும் அகண்டாகாரத்தில் விரிந்தோடுகிறது. செயல்களுக்கு இடையில் உள்ள இடையீடாக அது நமக்குத் தோன்றுகிறது. பிறகு செயல்களுக்கே அது அளவையாகிறது. பாக்கி நான்கு பூதங்களையும் ஆகாசம் தன்பால் அடக்கி வைத்திருப்பது போன்று காலமானது செயல்கள் யாவையும் தன்பால் அடக்கிவைத்திருக்கிறது; ஆதலால் அது எல்லாம் வல்லது. மலையுச்சிக்குப் போகப்போக சமவெளியில் உள்ள மேடுபள்ளங்களெல்லாம் ஒரே வெளியாய்த் தென்படுகின்றன. காலத்தை அகண்டாகாரக் காட்சியில் காணுமிடத்து அண்டங்களின் கிருத்தியங்களெல்லாம் அதில் வீழ்ந்து மறைகின்றன. நிகழ்கின்ற அனைத்தையும் என்றென்றும் அளந்து கொண்டிருக்கின்ற காலமே பகவத் சொரூபமாகிறது.உம் செயல் யாது? என்ற கேள்விக்கு உலகங்களையும் உலக மக்களையும் எடுத்து விழுங்குவது தம் பிரவிருத்தி என்று பகவான் சொல்லுகிறார். தோன்றியவைகளைச் சிறிது சிறிதாக அவர் சதா விழுங்கிக்கொண்டிருப்பது போன்று பெருவாரியாக சில வேளைகளில் விழுங்கவேண்டிய அவசியம் வருகிறது. மகாபாரத யுத்தம் அத்தகைய தொன்று. சிறிது சிறிதாக அழிவதை இயற்கையின் போக்கு என்கிறோம். பெருமிதமாக அழிவது யாருடைய செயல்; ஏன் அப்படி நடைபெறுகிறது என்று வியப்படைகிறோம். அவையாவும் ஈசன் செயல். எந்த வேளையில் உலகை எப்படி அழிக்க வேண்டுமோ அப்படி அவர் அழிக்கிறார். சிறியது பெரியது ஆகிய எல்லாம் அவர் செயல் என்று அறிபவன் அவரை உண்மையில் போற்றுகிறான். பின்பு, பயங்கரமான எச்செயலைக் கண்டும் அவன் நடுங்குவதில்லை.பீஷ்மர், துரோணர், கர்ணன் முதலிய போர் வீரர்கள் அழிவது திண்ணம் என்று அர்ஜுனனுக்கு இப்பொழுது காட்டப்படுகிறது. பாட்டனாரையும் ஆசாரியரையும் கொல்லுதல் தகுமோ என்று தயங்கிய தனஞ்ஜயனுக்கு அச்செயல் தன்னுடையதல்ல என்ற தேற்றம் இப்பொழுது பகவானால் ஏற்படுகிறது. கர்ணன் மடிவதும் தன்னைப் பொருத்ததன்று என்று அர்ஜுனன் அறிவிக்கப்படுகி றான். அர்ஜுனன் யுத்தத்தில் இறங்காவிட்டாலும் அவர்கள் அழியப்போகிறார்கள். அப்படியானால் அர்ஜுனன் யுத்தத்தில் தலையிடுவானேன்? இக்கேள்விக்கு விடைவருகிறது.
33. ஆதலால் நீ எழுந்து நில்; புகழெய்து; பகைவரை வென்று செழிய ராஜ்யத்தை ஆள், நான் இவர்களை ஏற்கெனவே கொன்றாய்விட்டது. இடக்கை வீரா, நீ வெளிக் காரணமாக மட்டுமே நின்று தொழில் செய்.ஜீவர்கள் செயல் புரிதலை அல்லது புரியாதிருத்தலை முன்னிட்டு பகவானுடைய காரியம் எவ்விதத்திலும் மாறுதல் அடையாது. அவனது திட்டத்தில் யாண்டும் ஒழுங்கும் உறுதியும் உண்டு. அதில் கலந்துகொள்ளுகிறவளவு ஜீவனுக்கு எல்லா நன்மையும் உண்டு. அதன் பொருட்டு அவன் எழுந்திருப்பது அவனது முதற் கடமையாகும். ஆத்ம போதம் பெற்று எழுந்திருக்கிறவளவு அவன் செயலுக்குத் தகுதியுடையவ னாகிறான். நற்செயல் புகழைத் தருகிறது. நன்மைக்கு இடைஞ்சலாயிருப்பவனே பகைவன். அவனை வெல்லுவது நன்மைக் காகப் பாடுபடுவதாகும். தான் மட்டும் நன்மை செய்தால் போதாது. நன்மைக்கு இடையூறு உண்டு பண்ணுபவனை எதிர்ப்பது ராஜதர்மம். தர்மத்தை நன்கு கடைப்பிடிப்பவர்க்கு இம்மையுமுண்டு, மறுமையுமுண்டு, முக்தியுமுண்டு. அதில் முதலாவது இகலோக வாழ்க்கையில் சிறப்பு. ஆக, செல்வம் நிறைந்த ராஜ்யத்தோடு கூடிய இகலோக வாழ்க்கை வாய்ப்பது தர்மத்தின் பலனாம். அது படிப்படியாக முக்திக்கும் எடுத்துச் செல்லவல்லது.அதர்மத்தில் மூழ்கிய எதிரிகளை மாய்க்க பகவான் திட்டம் போட்டுள்ளார். அர்ஜுனன் அதிக சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஒப்புக்குப் போர் புரிந்தாலும் போதுமானது. ஆயினும் அவனைப்பற்றிய உண்மை யென்ன? இடது கையாலும் நன்கு அம்பு எய்ய அவன் வல்லவன். துணிந்து சண்டை செய்வானானால் யாரையும் தோற்கடிக்க வல்லவன். அத்தகையவன் இந்தச் சிறந்த சந்தர்ப்பத்தைக் கைவிடலாகாது. தேவர்களையும் வெல்லவல்ல துரோணர், பீஷ்மர் முதலியவர்களை வென்றான் என்ற கீர்த்தி பகவான் கையில் கருவியாயி ருப்பதால் எளிதில் வந்தமையும். தக்க வேளையில் தக்க கடமையைச் செய்கின்றவனுக்கு எல்லா மேன்மைகளும் எளிதில் வாய்க்கின்றன.
தான் கண்காட்சி மனோகற்பிதமோ என்ற ஐயமும் யாரெல்லாம் உண்மையாகவே மடியப்போகின்றார்கள் என்ற ஐயமும் அர்ஜுனனுக்கு வருகிறது. அவைகளை நீக்குதற்கு பகவான் மேலும் பகர்கிறார்:
34. துரோணனையும், பீஷ்மனையும், ஜயத்ரதனையும், கர்ணனையும் மற்ற யுத்த வீரர்களையும் நான் கொன்றாய்விட்டது. (வெளிப்படையாக) நீ கொல். அஞ்சாதே; போர் செய்; செருக்களத்தில் நின் பகைவரை வெல்வாய்.துரோணரையும் பீஷ்மரையும் கொல்லுவது தர்மத்துக்கு முரண்பட்டதன்று என்பது ஏற்கனவே புகட்டப்பட்டது. இனி, அவர்களைக் கொல்லமுடியுமா என்ற ஐயம் எழுகிறது. ஏனென்றால் துரோணர் தெய்வீக அஸ்திர சஸ்திரங்களை யுடையவர்; மேலும் குரு பீஷ்மருக்கோ அவர் விரும்பினாலொழிய மரணம் வராது. இதுவரையில் அவரை யாரும் வென்றது கிடையாது.ஜயத்ரதனு டைய தலையை யார் பூமியில் வீழ்த்துகிறானோ அவனுடைய தலை வெடித்துப் பூமியில் விழும்படி ஜயத்ரதனுடைய தந்தை கடுந்தவம் புரிகிறார். ஆக, அதுவும் கஷ்டத்துக்கு ஏதுவான யுத்தம். இனி, கர்ணன் விஷயமும் அப்படியே இருக்கிறது. அவன் இந்திரனிடத்திருந்து சக்தி என்னும் ஆயுதத்தைப் பெற்றிருக்கிறான். கர்ணன் அதை யார்மீது பிரயோகித்தாலும் அது வீண் போகாது. அர்ஜுனனைக் கொல்லுதற்கென்றே அவன் அதை ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறான். இந்த நெருக்கடிகளை நினைத்து அர்ஜுனன் அஞ்சி வருந்துவது இயல்பு.ஆனால் பகவானே அவர்களைத் திருவுளங் கொண்டுள்ளார். அவர்களுடைய வல்லமையை ஏற்கனவே கரந்தாயிற்று. சித்திரத்தில் வரைந்த சிங்கங்களைத் துடைப்பது போன்று அவர்களை ஒடுக்குவது எளிதாகும். வேடன் கையில் உள்ள அம்புபோன்று பகவானுடைய திட்டத்துக்குக் கருவியாயிருப்பது அர்ஜுனன் கடமையாகும். ஆனால் வெல்ல முடியாதவர்களை அவன்தான் வென்றான் என்ற கீர்த்தி அவனுக்கு வரும். இக்கருத்துகளை பகவான் பார்த்தனுக்குத் தெளிவுறுத்துகிறார். இதைக் கேட்ட அர்ஜுனன் என்ன செய்தான்? அது ஸஞ்ஜயரால் விளக்கப்படுகிறது :
ஸஞ்ஜய உவாச
35. சஞ்சயன் சொல்லுகிறான்: கேசவன் சொல்லிய இவ்வார்த்தையைக் கேட்டுப் பார்த்தன் மெய்ந் நடுக்கத்துடன் அஞ்சலி புரிந்தான். மீண்டும் கண்ணனை நமஸ்காரம் பண்ணி, அச்சத்துடன் வாய் குழறி வணங்கிச் சொல்லுகிறான்.
கிரீடம் தரித்துள்ள கோமகன் யாருக்கும் தலை வணங்கலாகாது. அச்சம் தவிர்ப்பது அவனது தர்மம். பிறர் வணங்க அவ்வணக்கத்தை ஏற்றுக்கொள்ளுதல் அரசனுக்கு முறை. திட்பத்துடன் உறுதிமொழி கூறுதல் அவனது இயல்பு. இங்கு ஈசுவரனது முன்னிலையில் அம் முறைமைகளெல்லாம் பறந்தோடுகின்றன. கடவுள் முன்னிலையில் குறுகுதல் உயிர்களது முடிவான செயல் என்பது வெளியாகிறது.
அப்படிக் குறுகிய அர்ஜுனன் யாது மொழிந்தான் ? விடை வருகிறது:
அர்ஜுந உவாச
36. அர்ஜுனன் சொல்லுகிறான்: இருஷீகேசா, உன் பெருங்கீர்த்தியில் உலகங்களிப்பதும், இன்புறுவதும் பொருந்தும், ராட்சதர் அச்சமுற்றுத் திசைகளில் மறைகிறார்கள், சித்தக் குழாத்தினர் அனைவரும் நின்னை வணங்குகிறார்கள்.முன்பு காணாத மோட்டார் வண்டி முதலியவற்றை நாட்டுப் புறத்தார் பார்த்தால் உடனே அச்சம் கொள்ளுதல் இயல்பு. காணாதஅற்புதச் செயலை முதன் முதல் கண்டதும் அதனிடத்துப் பீதி கொள்ளுதல் அறிவிலிகளின் இயல்பு. ராக்ஷஸர்கள் இறைவனைப் பற்றிய ஞான மில்லாதவர்கள்; அகங்கரித்து அடாத செயலில் ஈடுபடுபவர்கள். அத்தகையவர் இறைவனது உலக நடை முறையைத் தொகுத்துக் காணுமிடத்து நடுங்கி நாலா பக்கமும் ஓடுவார்கள். மோட்டார் வண்டி ஒன்றன் அமைப்பையும் பயனையும் அறியுமளவு மக்கள் அதை மெச்சுவார்கள். அங்ஙனம் பகவானது மகிமைகளைத் தெரிந்துகொள்ளுமளவு பக்தர்கள் அவனைப் போற்றிப் புகழ்வார்கள். அப்படிச் செய்வதில் அவர்களுக்குப் பெருமகிழ்வு உண்டாகிறது. இனி, மோட்டார்வண்டியைப் பயன்படுத்துபவரோ ஒரு சிறு கூட்டத்தார். பகவானை வணங்கி அவனிடத்து யோகம் செய்து அவனுக்கு உரியவர் ஆகின்றவர்கள் சித்தர்கள். அங்ஙனம் நிறை நிலைகள் யாவையும் அவர்கள் எய்துகின்றனர். உலகை அறிகின்றவளவு ஒருவன் உலகைப் பயன்படுத்துகிறான். பகவானை அறிகின்றவளவு ஒருவன் பண்பும் பயனும் அடைகிறான். இது அர்ஜுனனுக்கு அனுபவ பூர்வமாக இப்பொழுது விளங்குகிறது. ஆக. ராக்ஷசர் முதல் சித்தர் ஈறாக அவரவர் அறிவுக்கு எட்டியவாறு கடவுளோடு இணக்கம் வைப்பது யுக்தமானதே என்று பார்த்தன் பகர்கிறான்.தெய்விகம் வாய்ந்த ரிஷிகள் ஈசுவரனுடைய நெருங்கிய உறவினரைப் போன்றவர்கள். அவர்கள் அவனுடைய நண்பர்கள் போலவும், ஸகாக்கள் போலவும், உறவினர்கள் போலவும் இருக்கின்றனர். சாதாரண மனிதர்கள் எல்லாரும் எட்டிய உறவினர் போன்றவர்கள். அவர்கள் கேவலம் ஈசுவர சிருஷ்டிகள் மாத்திரமே.
37.
மகாத்மாவே, நின்னை எங்ஙனம் வணங்காதிருப்பார்? நீ ஆதி கர்த்தா. பிரம்மனிலும் சிறந்தாய், அநந்தா, தேவேசா, வையத்தின் உறைவிடமே, நீ அழிவற்ற பொருள், நீ சத்; நீ
No comments:
Post a Comment