யாகவா ஒரு அமுதப்பிரவாகம்
கலைத் துறையில் பல்வேறு பரிணாமங்களில் பலத்தரப்பட்ட பரிமாணங்களில் மிளிர்ந்து வருபவர் திருமதி. மனோரமா அவர்கள், எத்தனை எத்தனை சிரஞ்சீவிக் கதாபாத்திரங்கள், எத்தனை எத்தனை மாறுபட்ட வார்ப்புகள் அவரிடம் காணக் கிடைக்கின்றன. அவரைப் பேட்டி கண்ட எங்களது யாகவா ஸ்தாபனத்து பேராசிரியர் எஸ். சிவராமகிருஷ்ணன் அவர்களிடம் 01-12-2001 அன்று திருமதி. மனோரமா அவர்கள் யாகவா முனிவரிடம் 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தான் கொண்டிருந்த பக்தி நிறைந்த ஈடுபாட்டை பக்தி பரவசத்துடன் விவரித்தார். அவர்கள் கூறியவற்றை அவர்களது சொற்களிலேயே இங்கு படைக்கிறோம்.
அப்போது 1991 ஆம் ஆண்டு முதன் முதலாக யாகவா முனிவரை அப்போதுதான் நான் தரிசிக்கும் பாக்கியம் எனக்குக் கிட்டியது. யாகவா முனிவராக திரு.சிவாஜி கணேசன் நடிக்க அவர்களுடன் நான் கதாநாயகியாக இணைந்து நடித்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு அன்றுதான் மேடவாக்கத்தில் யாகவா முனிவரது ஆஸ்ரமத்தில் நான் அவரைப் பார்த்தேன். இது நிகழ்ந்து இப்போது 10 ஆண்டுகள் நிறைந்துவிட்ட நிலையிலும் யாகவா முனிவரது எளிமையான முகப்பொலிவும் ஆன்மீகத் தத்துவங்கள் பொதிந்த அவரது உள்ளார்ந்த பேச்சும் என் மனத்தில் அப்படியே பதிந்துவிட்டிருக்கின்றன.
யாகவா முனிவர் மகாப் பெரிய ஞானி. மிகப் பெரிய மகான். த்ரி காலத்தையும் நிர்ணயிக்கும் தீர்க்கதரிசி. தனது 53 முற்பிறவிகளையும் ஞாபகம் வைத்திருப்பவர். எளிய குழந்தையின் மென்மையுடனும் அவர் பேசுவார்; அதே சமயம் இடி முழக்கம் கூட அவரிடம் சரணடைந்துவிடச் செய்யும் வல்லமையும் படைத்தவர். சாதாரண பாமரத் தோற்றம் வெளியே. ஆனால் உள்ளேயோ கொட்டுகிற ஆன்மீக அருவிப் பிரவாகம் பெருக்கெடுத்துக் கொப்பளிக்கும் அவர் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே நம செய்த மாபெரும் பாக்கியம்.
யாகவா ம்னிவர் பறவைகளிடமும் பக்ஷிகளிடமும் பேசுவார். எறும்புகளும் தேரைகளும் தேனீக்களும்கூட அவருடன் கொஞ்சிப் பேசும். அவரது அமுதப்பிரவா ஆன்மீகப் பிரளயம். மகாப் பெரிய பண்டிதர்கள் என்று மார் தட்டிக் கூறிக்கொள்வோர்கூட அவர் முன் வாயடைத்து நின்றிருப்பதை நானே நேரில் பார்த்திருக்கிறேன்.
யாகவா முனிவர் நம் அறிவுக்கு எட்டவே எட்ட முடியாத, நம் புலன்களுக்கு கொஞ்சமும் புலப்பட முடியாத ஒரு மாபெரும் படைப்புச் சக்தி. அவரை நம் சிற்றறிவினால் ஆராய்ந்து பார்ப்பதை விடுத்து அவர் முன்னே பச்சிளம் குழந்தையாக அமர்வது ஒன்றே நாம் செய்யக்கூடிய மாபெரும் புண்ணியமாகும்.........
No comments:
Post a Comment