யாகவா முனிவரின் ஞான வித்துக்கள்
யாகவா - நெஞ்சில் ஆடும் தீபம் நினைவில் வாழும் ராகம்
- ஞானபாரதி வலம்புரிஜான்
அருள்மிகு யாகவா முனிவர் அவர்களோடு நெருங்கிப் பழகிய நேசர்களில் நானும் ஒருவன். அவர் ஒரு பாமர ஞானி. நெல்லைமாவட்டம் அம்மன்புரத்தில் அவதரித்து ஞானக்கடலாக வாழ்ந்தவர். வறுமையை ஆசிரியராகக் கொண்டு, துன்ப வடுக்களைப் படிக்கட்டுகளாகக் கொண்டு தான் உணர்ந்ததைப் பழகு தமிழில் பாருக்கு உணர்த்தியவர் அவர்.
சாதி, சமயங்களுக்கு அப்பாற்பட்ட சமர ஞானி அவர். பிள்ளைத்தனமாகத் தோற்றுகின்ற அவரது பேச்சுத் தமிழுக்குப் பின்னாலே நித்திய உண்மைகள் நித்தியங்களாகப் புதைந்து கிடைக்கும்.
எழுதப் படிக்க அறியாத யாகவா முனிவர் வடமொழிக்கும் முந்திய மொழியில் வேதங்களைச் சொல்லுகிற பேராண்மை பெற்றிருந்தார். பேச்சுக்காரன் என்று பெயர் பெற்றநானே அவர் சொல்லுகிறமாதிரி வேதங்களைச் சொல்லிப் பார்த்திருக்கிறேன். ஒரு நிமிடத்திற்கு மேலே என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் மணிக் கணக்கில் குற்றாலமே அவர் குரல் வளைக்குள் குடியிருப்பதைப் போலச் சொல்லிக் கொண்டே இருப்பார்.
மொழி ஆய்வாளர்களாலே மாத்திரமே அரிய ஆராய்ச்சிக்குப் பிறகு உணர்ந்து கொள்ளத்தக்க இனான்ய மொழி என்கிற சித்திர வடிவ எழுத்துக்களை அவர் எழுதுவதை எல்லோரும் பார்த்திருக்கிறார்கள்.
பல நூறு ஆண்டு காலத்திற்கும் முன்பாக இருந்த மொழி என்பதற்கான அடையாளம் அதிலே உண்டு. இது முயற்சியில் வருவது அல்ல. தன்னைப் பிழிந்த தவம் என்றுதான் சொல்ல வேண்டும்.
படிப்பறிவு பெரிதும் இல்லாத இந்தப் பாமர ஞானியின் கவிதைகளில் சூல் கொண்டு சுடர்விடும் எழுத்து முத்துக்கள் உண்டு. பஞ்சு வெள்ளையாகத்தானே பிறக்கிறது. என்பார் பெற்றோரை நிற்க வைத்து வணங்கு என்பார். இவைகளெல்லாம் அரிய உண்மைகளா என்பது அறியாதோர் கேள்வி. இவைகளுக்குள் கடலாழம் பொருள் உண்டு.
அகந்தைக் கிழங்கினை அகழ்ந்து எறிந்த ஆழ்வார் எனும்படி அமைதியாகத் தோற்றம் தருகிற தத்துவமாக அவர் வாழ்ந்தார், சூஃப்பிக்கள் என்கிற மெஞ்ஞானிகள் நேரடியாக எதையும் பேசமாட்டார்கள். மறைத்தே பேசுவார்கள். இதையே திருவள்ளுவப் பெருமான்
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
என்கிறார். ஞானிகள் எல்லோரும் மறைத்தே பேசினர். யாகவா முனிவரின் மொழி நடையும் அப்படிப்பட்டதே.
அவர் தன் வயது 5000 என்றும் தன் பிறவி 54 என்று கூறினார். இந்த உலகம் படைக்கப்பட்டு 38,000 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்றார். 48,000 ஆண்டுகளுக்குள் உலகில் என்னென்ன நடக்கும் என்பதை இனானிய மொழியில் எழுதி வைத்திருக்கிறார். மணிவாசகப் பெருந்தகையின் ஏழேழ் பிறவி என்பதன் உண்மைப் பொருளை ஓதி உணர்ந்தவர்கள் முனிவரின் அருள் உரைகளுக்குள் அடங்கிக் கிடக்கிற உண்மையினை உணருவார்கள்.
நான் இன்றி நீ இல்லை என்பார். ஆனால் இறுதியில் நீ இன்றி நான் இல்லை என்றும் சொல்லுவார். எந்தப் பொருளிலும் நான் இல்லை. எல்லா பொருட்களும் என்னிடத்தே உள்ளன என்று கிருஷ்ண பர மாத்மா சொல்லுவதை ஒப்பு நோக்க வேண்டும்.
நாம் வாழும் உலகத்தைத் தவிர 111 காண்டங்கள் உண்டு என்பதும், 111 கோடி முனிவர்கள், 111 கோடி சித்தர்கள், 111 கோடி ஞானிகள் உண்டு என்பதும் அவரது அருள்வாக்கு.
உலகம் உருண்டை அல்ல, தட்டை. மனிதன் குரங்கிலிருந்து வரவில்லை, மாங்கனியின்றே மலர்ந்தான் என்பதும் அவரது ஆழ்ந்து அகன்றபார்வை.
யாஷ்யம். இனள்பம், இணைத்வம். தனமுனி, தவமுனி, தர்க்கமுனி, வஸ்யா நுன்வா என்யா போன்ற அவரது சொற்களுக்குக் காலம் கடந்த கச்சிதமான பொருள் உண்டு.
அவரே தமக்குப் பல கடிதங்களை எழுதுவார். ஒரு கடிதத்தில். அக்கடிதம் பிரிக்கப்படுகிறபோது தான் இருக்க மாட்டேன் என்றும் எழுதியிருக்கிறார்.
தன்னிடத்ஹ்டில் வருகிற பொதுமக்களை ஏமாற்றி அவர் வாழ்ந்ததில்லை. உழைப்பை மாத்திரமே நம்பச் சொன்னார். இவரது 17 ஒலி நாடாக்களுக்கு எளியேன் அணிந்துரை பேசியிருக்கிறேன்.
பாமர ஞானியாக நம் மத்தியிலே வாழ்ந்து நம்மில் தொட முடிந்த ஆனால் தொடர முடியாத இந்த வானம் என்றைக்கும் வாழும் நிலம், தீ, நீர், வாயு, ஆகாயம் போல அவரது நினைவுகளில் பொதுவாக உலக மக்கல் குறிப்பாகத் தமிழர்கள் எப்போதும் நீந்துவார்கள்.
……….. ஞானபாரதி வலம்புரிஜான்
No comments:
Post a Comment