கீதைப் பதிவு – 16 தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகம்
ஸ்ரீபகவான் சொன்னது
அஞ்சாமை, உள்ளத் தூய்மை. ஞானத்திலும் யோகத்திலும் நிலைத்திருத்தல், ஈகை பொறிகளை அடக்குதல், யாகம் ஸாஸ்திரம் படித்தல், தபஸ்.நேர்மை(1)
தீங்கிழையாமை, உண்மை, சினமின்மை, துறவு, அமைதி, கோள் சொல்லாமை, உயிர்களிடத்து இரக்கம், பிறர்பொருளை விரும்பாமை, இனிமை, நாணம்,மனம் சலியாமை(2)
தைரியம் பொறை மனவுறுதி, தூய்மை, வஞ்சகமின்மை, செருக்கின்மை, ஆகிய இவைகள் தெய்வ சம்பத்துடன் பிறந்தவனுக்கு இயல்பாகின்றன அர்ஜுனா,(3)
பார்த்தா பகட்டும், இறுமாப்பும் தற்பெருமையும், சினமும் ,கடுமையும், அக்ஞானமும் அசுர சம்பத்தை உடையவனாய்ப் பிறந்தவனுக்கு உண்டு.(4)
தெய்வ சம்பத்து மோக்ஷம் தருவதென்றும், அசுர சம்பத்து பந்தப் படுத்துவதென்றும் கருதப் படுகின்றன.பாண்டவா, வருந்தாதே, நீ தெய்வ சம்பத்து வாய்த்துப் பிறந்துள்ளாய்.(5)
பார்த்தா,தெய்விகம் என்றும் அசுரம் என்றும் இருவகை உயிர்ப் பிறப்புகள் இவ்வுலகில் உண்டு.தெய்வ இயல்பு விரிவாகப் பகரப் பட்டது. அசுர இயல்பை என்னிடம் கேள்.(6)
செய்யத்தகுந்த நல் வினையையும், தகாத தீவினையினையும் அசுர இயல்புடையார் அறியார். அவர்களிடம் தூய்மையும் நல்லொழுக்கமும் வாய்மையும் இல்லை(7)
உலகம் உண்மை இல்லாதது, தர்மப் பிரதிஷ்டை இல்லாதது, கடவுள் இல்லாதது, காமத்தைக் காரணமாகக் கொண்டு ஆண்பெண் இணக்கத்தால் ஆனது அன்றி வேறு என்ன இருக்கிறது என்கின்றனர்.(8)
இக்கொள்கை உடைய புல்லறிவாளர் ஆத்ம நஷ்டமடைந்தவர்களாய், கொடுஞ் செயல் புரிபவர்களாய், உலகின் பகைவர்களாய், அதன் அழிவுக்கென்றே தோன்றி இருக்கின்றனர்(9)
நிறைவேறாத நெடுங்காமம் பிடித்தவர்களாய், ஆடம்பரமும், பெருமையும், மதமும் பொருந்தியவர்களாய், மயக்கத்தால் கெட்ட எண்ணங்களைக் கிரகித்து தீய தீர்மானங்களுடன் தொழில் புரிகின்றனர்(10)
சாகும்வரையில் அளவுகடந்த கவலையை உடையவர்களாய், காம நுகர்ச்சியையே அனைத்திலும் மேலானதாகக் கருதி, மற்றொன்றுமில்லை என்று தீர்மானம் செய்தவர்களாய்;(11)
நூற்றுக்கணக்கான ஆசைக்கயிறுகளால் தளைக்கப் பட்டவர்களாய், காமக் குரோத வசப்பட்டவர்களாய்,காம போகத்தின் பொருட்டுச் செல்வக் குவியல் தேட முயலுகின்றனர். (12)
இன்று இது என்னால் அடையப்பட்டது; இவ்விருப்பத்தை நிறைவேற்றுவேன், இது இருக்கிறது, மேலும் எனக்கு இச்செல்வம் வந்துசேரும்(13)
அப்பகைவன் என்னால் கொல்லப்பட்டான், மற்றவர்களையும் கொல்லுவேன், நான் ஆளுபவன், போகத்தை அனுபவிப்பவன், காரிய சித்தன், வலிவுடையவன், இன்புறுபவன்(14)
செல்வம் படைத்து உயர் குலத்தவனாயிருக்கிறேன் எனக்கு நிகரானவன் வேறு எவன் இருக்கிறான்.? யாகம் செய்வேன், தானம் கொடுப்பேன், மகிழ்வடைவேன் என்று அக்ஞானத்தில் மயங்கியவர்கள்(15)
பல எண்ணங்களில் குழப்பமடைந்தவர்கள் மோக வலையில் மூடப் பெற்றவர்கள் காம போகங்களில் பற்றுடையவர்கள் பாழ் நரகில் வீழ்கின்றனர்.(16)
தற்புகழ்ச்சியுடையார், வணக்கமிலார், செல்வச் செருக்கும் மதமும் உடையார் பெயரளவில் யாகத்தை விதி வழுவி ஆடம்பரத்துக்காகச் செய்கின்றனர்(17)
அஹங்காரம் பலம் இறுமாப்பு காமம் குரோதம் –இவைகளை உடையவர்கள் தங்கள் தேகத்திலும் பிறர் தேகத்திலும் உள்ள என்னை வெறுத்து அவமதிக் கின்றனர்(18)
துவேஷ குணமுடையவர்களை, கொடியவர்களை, கடையவரை, இழிந்தோரை பிறந்து இறந்து உழலும் உலகில் அசுரப் பிறவியிலேயே, திரும்பத் திரும்ப நான் அவர்களைத் தள்ளுகிறேன்(19)
குந்தியின் மகனே, மூடர்கள் பல பிறவிகளில் அசுர யோனிகளில் தோன்றி என்னை அடையாமல் இன்னும் கீழான கதியையே அடைகிறார்கள்(20)
காமம் குரோதம் லோபம் ஆகிய மூவித வாயிலை உடையது நரகம். இவை ஜீவனைக் கெடுக்கும் தன்மையன. ஆகையால் இம்மூன்றையும் துறத்தல் வேண்டும்(21)
அர்ஜுனா, இம்மூன்று நரக வாயில்களினின்றும் விடுபட்டவன் தனக்கு நலன் செய்து கொண்டு பின்பு மோக்ஷத்தை அடைகிறான்.(22)
காமத்தின் வசப்பட்டு சாஸ்திரத்தின் ஆணையை மீறி நடப்பவன் எவனோ அவன் பரி பூரணனாகான், சுகம் பெறான், முக்தி அடையான்(23)
ஆகையால் செய்யத் தகுந்ததையும் தகாததையும் நிச்சயிப்பதில் சாஸ்திரம் உனக்குப் பிரமாண மாகிறது. இங்கு சாஸ்திரம் ஆக்ஞாபித்து உரைப்பதை அறிந்து கர்மம் செய்யக் கடவாய்.(24)
தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகம் நிறைவு.
G.M Balasubramaniam Posts
No comments:
Post a Comment