கீதைப்பதிவு –15 புருஷோத்தம யோகம்
ஸ்ரீபகவான் சொன்னது
மேலே வேருள்ளதும் , கீழே கிளைகளுள்ளதும் ஆகிய ஆலமரம் போன்ற சம்சாரத்தை அழிவற்றது என்கின்றனர். வேதங்கள் அதன் இலைகள்.அதை அறிபவனே வேதத்தை அறிபவன் ஆகிறான்(1)
அதன் கிளைகள் குணங்களால் செழிப்படைந்து, விஷயங்கள் என்னும் தளிர் விட்டு, கீழும் மேலும் படர்ந்திருக்கின்றன. மானிட உலகில் வினையை விளைவிப்பனவாய் அதன் வேர்கள் கீழ் நோக்கிப் பரவி இருக்கின்றன.(2)
இம்மரத்துக்கு இங்கு வடிவம் தென்படுவதில்லை, முடிவில்லை, துவக்கமில்லை, இருப்புமில்லை. வலுத்து வேரூன்றிய இந்த அசுவத்த மரத்தைப் பற்றின்மை என்ற உறுதியான வாளால் வெட்டி;(3)
எப்பதம் பெற்றுப் பிறப்பெடுப்பதில்லையோ அது அப்பால் தேடத்தக்கது. எவரிடத்திருந்து பண்டைத் தொழில் பெருகி வந்துள்ளதோ அதே ஆதி புருஷனைச் சரணடைகிறேன் (எனறுணர்க)(4)
ஆணவமும் அவிவேகமும் அற்றவர். பற்று என்னும் குற்றம் வென்றவர், பரமாத்ம ஞான நிஷ்டர், ஆசையற்றவர், இன்பதுன்பம் எனும் இருமைகளைக் கடந்தவர், மயக்கமொழிந்தவர்- இத்தகையார்கள் அவ்வழியா நிலை எய்துகின்றனர்.(5)
எங்கு சென்றவர்கள் திரும்பி வருகிறதில்லையோ. எதை ஞாயிறும் திங்களும் ,தீயும் விளக்க மாட்டாவோ அது எனது பரமபதம்(6)
எக்காலத்தும் எனது அம்சமே ஜீவனாகத் தோன்றி, ஜீவலோகத்தில் பிரகிருதியிலே நிற்கின்ற மனது உட்பட ஆறு இந்திரியங்களை (போகத்தில்) இழுக்கிறது(7)
மலர்களினின்று மணங்களை காற்று எடுத்து ஏகுவதுபோல், ஜீவன் உடல் எடுக்கும்போதும் விடும்போதும் இந்திரியங்களைப் பற்றிக் கொண்டு போகிறான்(8)
அவன் செவி,கண், மெய், நாவு, நாசி,மனது, ஆகியவைகளைத் தனதாக்கிக் கொண்டு விஷயங்களை அனுபவிக்கிறான்(9)
உடலை விடும்போதும், உடலில் இருக்கும்போதும் அனுபவிக்கும் பொழுதும் குணங்களோடு கூடி இருக்கும்பொழுதும் ஜீவனை மூடர் அறியார்; ஞானக் கண் உடையவர் அறிவர். (10)
உயற்சியுடைய யோகிகள் அவ்வாத்மனை தங்களுக்குள்ளேயே காண்கின்றனர். முயற்சி உடையார் எனினும் ஆதம பரிபாக மடையாத அறிவிலிகள் அவனைக் காண்பதில்லை.(11)
சூரியனிடத்திருந்து வந்து உலகம் முழுதையும் விளக்குகிற வெளிச்சமும், சந்திரனுடையதும் தீயினுடையதும் என்னிடமிருந்து வந்த பிரகாசம் என்று அறிக.(12)
என் வலிவால் நான் பூமியினுள் பிரவேசித்து உயிர்களைத் தாங்குகிறேன்; இனிமை வடிவாகிய சந்திரனாகவும் ஆகிப்பயிர்களைப் போஷிக்கிறேன்(13)
உதரக் கனலாக நான் உயிர்களின் உடலில் இருந்து கொண்டு பிராண அபான வாயுக்களுடன் கூடி நான்கு வித அன்னத்தைச் சேமிக்கிறேன்.(14)
எல்லோருடைய உள்ளத்திலும் நான் வீற்றிருக்கிறேன் நினைவும் ஞானமும் அவற்றின் அழிவும் என்னிடமிருந்து உண்டாகின்றன. வேதங்கள் எல்லாவற்றிலும் அறியப்படும் பொருள் நானே, வேதாந்த்தத்தைச் செய்தவனும் வேதத்தை அறிந்தவனும் நானே(15)
க்ஷரன் என்றும் அக்ஷரன் என்றும் உலகில் இரண்டே புருஷர்கள் இருக்கிறார்கள். வடிவெடுத்த எல்லோரும் க்ஷரன், கூடஸ்தனோ அக்ஷரன் எனப்படுகிறான்.(16)
இனி இவர்கட்கு அன்னியமானவர் புருஷோத்தமன். அந்த ஈசுவரன் நிர்விகாரப் பரமாத்மா என்று அழைக்கப் படுகிறார். அவர் மூவுலகினுட் புகுந்து அதைத் தாங்குகிறார்(17)
க்ஷரத்தை கடந்து அக்ஷரத்துக்கும் நான் மேலானவனாக இருப்பதால் உலகிலும் வேதத்திலும் புருஷோத்தமன் என்று புஅழ் பெற்றிருக்கிறேன்(18)
பாரதா, யார் மயக்கமற்றவனாய் இங்ஙனம் என்னைப் புருஷோத்தமன் என்று அறிகிறானோ, எல்லாம் அறிந்த அவன் முழுமனதோடு என்னை வழுத்துகிறான்(19)
குற்ற மற்றவனே, இங்ஙனம் ஆழ்ந்த இந்த சாஸ்திரம் என்னால் உரைக்கப் பட்டது. அர்ஜுனா, இதை அறிபவன் ஞானியும் கிருதார்த்தனும் ஆவான்(20)
புருஷோத்தம யோகம் நிறைவு.
G.M Balasubramaniam Posts
No comments:
Post a Comment