திரி மஞ்சரியின் உள் நோக்கம் தூய்மை ! உன் உள் நோக்கமோ அடுத்தவர் அந்தரங்கம் பற்றி. என் உள்நோக்கம் உன்னை உயர்த்தும் நிலை பற்றி ! உணர் !
உள்நோக்கம் ;;;
எதையும் ஆராயும் பொழுது உள்நோக்கம் இருக்கக் கூடாது ! எதிர்பார்ப்பும் இருக்க கூடாது. உண்மையான மாறுதல் என்பது ஆரம்பத்தில் மிக கடினம் எனத் தோன்றும். எதை பற்றிக் கொள்வது என்று மனம் தளரும். முன்பிருந்த நம்பிக்கை குறையும். நினைத்த காரியம் நடக்கவில்லையே என்று மனம் அலைபாயும் ! செல்கின்ற பாதை சரியானதா என்று மனம் கேள்வி கேட்கும்.
இதை எல்லாம் மீறி என் மேல் நம்பிக்கையோடு இருப்பவனின் வாழ்வில் நான் ஒளியாய் பரவுகின்றேன் ! அவன் நினைத்த இலக்கை அடைய வைத்து வாழ்வில் பிராகசிக்க வைக்கின்றேன் !
உள்நோக்கம் உன் நோக்கம் தெளிவாய் இருந்தால் வாழ்வில் எதையும் அடையலாம். துன்பத்தை புரட்டி போடலாம் !
நல்குரு மட்டும் அமைந்தால் மட்டும் போதாது. தன் நம்பிக்கை இருப்பவனே முயற்சி செய்வான். தைரியம் உள்ளவனே எதையும் வெல்வான். உன் தைரியம் மனைவியோடு சண்டையிடுவதற்கல்ல ! பிறரை கொலை செய்வதற்கல்ல ! உன்னை வெல்வது தான் தைரியம் !
வைராக்கியமே உன்னை வானில் பறக்க வைக்கும் ! உன் நோக்கம் எப்போதும் நல்வழியையும், சத்தியத்தையும் நோக்கி இருக்கட்டும். பிறருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி பார் ! ஒழுக்கத்தை சொல்லி பார். உனக்கு நம்பிக்கை வரும். ஒழுக்கம் வரும் !
சத்தியம் எப்போதும் தோற்பதில்லை. உழைப்பவன் வாயில் இருந்து வரும் சொல் பலிக்கும் ! ஆதலால் உழைப்பவனை கண்ணீர் சிந்தவிடாதே ! ஏனென்றால் உழைப்பவனிடமே கடவுள் இருக்கின்றான். உட்கார்ந்து சுகம் காணும் சாமியார்களிடம் இல்லை. போதனை செய்யும் போதகனிடம் இல்லை. எந்த சாமியாரும் கடவுளை அறிந்திருக்கமாட்டான். அறிந்தால் ஏமாற்றமாட்டான். சுயநலத்தோடு வாழமாட்டான்.
சந்தேகத்தோடு உன் பயணத்தை தொடங்காதே ! தனியாக நின்று வாழப் பழகு ! பயத்தை தூக்கி எறி ! பாவம் இல்லாது வாழப் பழகு. பரமாத்மா நிழலடி உனக்கு கிடைக்கும் ! அறியும் சூட்சுமம் உணர்ந்தவன் உடலை வளைக்கமாட்டான். தர்மம், சத்தியம் தெரிந்தவன் மக்களிடம் பிச்சையெடுத்து சாப்பிடமாட்டான். ஆசிரமம், பள்ளிக்கூடம் கட்டமாட்டான்.
இங்கே எல்லாம் துறந்தவன் தான் ஞானி, மகான் ! தனக்கென்று கோயில் கட்டி மக்களிடம் யாசகம் கேட்பவன் ஞானி அல்ல ! மகான் அல்ல ! சித்தனும் அல்ல !
மதபிரச்சாரம் செய்பவன் மக்களை ஏமாற்றுகிறான். கடமையில் கடவுளை நினை என்று தான் கடவுள் படைத்தான். ஆனால் மனிதன் தன் கடமை மறந்து உழைப்பில்லாமல் உட்கார்ந்து சுகம் காண்கின்றான்.
என் நோக்கம் தர்மத்தை காப்பது ! உன்னிடம் கை ஏந்த வரவில்லை. ஞானத்தை ஊட்ட வந்தேன். என் பார்வை கூர்மையானது. அகல, ஆள உழுது என்னுள் என்னை நிர்வகித்தேன் ! ஆதலால் துன்பம் என்று ஏதுமில்லை எனக்கு.
எனக்கு உன்னிடம் எதிர்பார்ப்பும் இல்லை ! ஆனால் நீ ஆனந்தமாக எதிர்பார்க்கின்றேன் ! என் உள்நோக்கம் உண்மையடா !
தூய்மையானவன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment