to INANYA MAHA MUNIVAR
கடவுள் மெய்யாகவா ?
மெய் இனியவர் என் அப்பா (யாகவா) !
ஆன்மாவின் துடிப்பு, ஒலி தான் கடவுள் ! அறிவதில் பெரிய அறிவு தன்னை யார் என்று அறிவது தான் ! பாவங்களைத் தொலைத்து விடு ! பரம்பொருள் புரியும் ! நாத்தீகம் என்பது புரியாதவனுக்கு வருகின்ற அறிவு. புரியாததெல்லாம் பொய் என்று சொன்னால் புத்திசாலி ஆக முடியாது !
கோடி மனித முகத்தை படைத்து, அதில் முகத்தை மட்டும் மாறுபடச் செய்து ஆட்டுவிப்பவனை உணர யுகம் கடந்து போகும் ! நூறு பறவைகளை கூட்டை கட்டவைத்து அதில் தனக்குள்ள கூடு எது என்று புரிய வைத்தவனை நீ புரிந்து கொள்ள கோடி ஜென்மம் ஆகும் !
அவனால் ஒலியால் மலையை வளர வைக்க முடியும். பூகம்பமாய் பூமியை பிளக்க வைக்க முடியும். ஆவேசக் காற்றால் அகங்காரத்தை அழிக்க வைக்க முடியும் ! புனித நீரை புரளச் செய்து பூமியில் ஒன்றுமில்லாமல் ஆக்க முடியும் ! ஓர் விதையில் ஓராயிரம் கனிகளை தர அவனால் முடியும் ! மனிதனாக பூமியில் பூடகமாக உலாவ முடியும் ! அந்த பேரறிவாளனை புரிய யுகம் கடந்து போகும் ! அவன் இனியவன் ! அன்பில் உயர்ந்தவன் ! அவனை குழந்தையின் சிரிப்பிலே, மலரிலே புரிந்து கொள்ள முயற்சி செய் ! நான் அவனின் பாத மலரைப் பார்ப்பதற்கு எத்தனையோ யுக ஆண்டாக காத்துக் கிடந்தேன் (ஆன்மா) ! என் ஆன்மா எத்தனை முறை சுத்தப்படுத்தப்பட்டது என்பதை காலக் கணக்கு நிர்ணயிக்க முடியாது.
நீ ஒரு சூரியனையும், சந்திரனையுமே கணக்கெடுக்க முடியாதவன் ! நீ கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்னா? எனக் கணக்கெடுக்க முடியாதவன் ! மழையும், சூலும் எப்போது உருவாகும் என உருவாக்கம் தெரியாதவன் நீ ! அவனை அறிய எந்த கருவியில் அளவிட்டு பார்க்கப் போகிறாய் ? அவன் நிகரற்றவன் ! தன்னிகரில்லா கருணைமிக்கவன் ! பழத்தை அழுகவிடுகின்ற என் பிதா (கடவுள்) விதையை அழுக விடுகின்றானா? அவனின் அன்பை உணர்ந்தாயா ? அந்த சூட்சுமதாரியை உணர யுகத்தின் வாழ்வு போதாது ! கருவை வளர்த்து அதற்கொரு கால நிர்ணயம் செய்து பிறக்க வைத்த அந்த பெம்மானை, என்னை பெற்றவனை, அறிய எத்தனை முறை ஆன்மா சுத்தப்படுத்த வேண்டுமென தெரியுமா? உணர்ந்து பார் !
அவன் ஒரு விதையில் கோடி விதையை உருவாக்கியவன் ! இவை அனைத்தையும் உருவாக்கி உனக்கு உண்ண தந்தவனை உணரக் கூட இயலாதவன் நீ ! நீ எங்கே கடவுளை உணரப் போகிறாய் ? நன்றி சொல்லத் தெரியாதவன் நீ ! அவனை நினைக்காமல் தேவையற்றதைப் பேசி விதண்டவாதம் செய்து உன் காலத்தை வீணாக்காதே ! பயன் ஒன்றுமில்லை.
பாவத்தின் தண்டனையை நீ அனுபவிக்க பூமிக்கு வந்தாலும் எல்லா வளங்களையும், நலங்களையும், அழகையும் பூமியில் கொடுத்து நீ உணர்ந்து அனுபவிக்கத் தந்தானே ! உண்டு தின்ற பாவி நீ உணராமல் அலைகின்றாய் ! என்ன செய்வேன் நான் ? பணம் என்று அலைகின்றாய் ! பதவி என்று அலைகின்றாய் ! பாவம் செய்துவிட்டு பாலாபிஷேகம் செய்கிறாய் ! கஷ்டம் வந்தால் கடவுள் இல்லை என்று பிதற்றுகிறாய் ! இது தான் பகுத்தறிவு என்று வாதம் செய்கிறாய் ! காலத்தின் நாயகனை அறிய என்றாவது ஒரு நாள் நதிக்கரையில் உட்கார்ந்து தனியாக சிந்தித்தாயா? உன்னை அழகாக, அறிவாக, ஊனமில்லாமல் படைத்தான் ! அந்த பேரழகனுக்கு என்றாவது நன்றி சொன்னாயா ?
உன் ஆன்மாவை எப்போதாவது சிரிக்க வைத்தாயா ? ஜாடையாக சிரிக்கிறாய். சக மனிதன் கஷ்டப்பட்டால் சிரிக்கிறாய் ! ஜாடைச் சிரிப்பு, ஏளனச் சிரிப்பு, எக்காள சிரிப்பு, நமட்டு சிரிப்பு, இவற்றைத் தான் கற்றுக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்கிறாய் ! நீயும் சிரிக்க மாட்டாய் ! அடுத்தவர்களையும் சிரிக்க வைக்கமாட்டாய் !
எப்போதும் குழந்தை போல் புன்னகையாய் பூவை போல் இருந்து புரிந்து கொள் ! நீ புரிந்தால், அந்த புனிதன் என்னை மாதிரி ஆத்மத்தை உணர்ந்தவனை உனக்கு அனுப்பி வைத்து புரிய வைப்பான் ! உன்னுள்ளே உன் இதய துடிப்பாய் துடிக்கின்றானே ? முதலில் அவனை உணரப் பார் !
கருவறையை பூட்டி சாவி வைத்திருக்கின்றானே ? கடல் அலையை கரை தாண்டி வராமல் மாயம் செய்தானே ! அந்த மாயவனை முதலில் உணரப் பார் ! உணர்ந்தால் என்னை அறியலாம் ! அறிந்தால் உன்னை அறிய வைத்து தெளிய வைப்பேன் ! பின் உன் வாழ்வு தெளிந்த நீரோடையாக மாறும். மாற்றுவேன் !
மெய் இனியவர் என் அப்பா (யாகவா) !
நான் இநன்யா !
No comments:
Post a Comment